Wednesday, July 30, 2008

ரிஷானின் திடீர் மறைவும் அது ஏற்படுத்திய தாக்கங்களும்...!

அவ்வளவாக இல்லை. ஐந்தே ஐந்து நாட்கள்தான்.
அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்.
அங்கு இணையமில்லை. கைபேசி (Mobile) இல்லை.ஏதோ மந்திரித்துவிட்ட நாட்டுக் கோழியாகச் சுற்றிவந்து பார்க்கையில்தான் மின்னஞ்சல் பெட்டி (Mail inbox ) நிரம்பிவழிவது தெரிகிறது. ஊர் சுற்றி வந்த களைப்பைப் பார்க்கமுடியுமா என்ன ?

வலைப்பதிவுலக நண்பர்கள்
சந்திரமௌலி, பாஸ்கர், தணிகை, கார்த்திக், பிரேம்குமார், மீறான் அன்வர், ரசிகவ் ஞானியார், ரஸீம், கலீலுர் ரஹ்மான்,குட்டிசெல்வன்,காமேஷ், அஜித்குமார்,ஆயில்யன்,நாராயணன் சுப்ரமணியம் சகோதரிகள் ஷைலஜா,ஸ்வாதி,காந்தி,சாந்தி, சூர்யா,கவிநயா, சத்யா,நட்சத்திரா, சஹாராதென்றல், வாணி, பஹீமா ஜஹான் என அத்தனை பேரும் தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், குழும மின்னஞ்சல்கள் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் எனது அழைப்பின் கதவுகளைத் தட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறீர்கள்.

கைபேசியின் கைதவறிய அழைப்புக்களிலெல்லாம் நண்பர்களின் எண்களோடு புதுப்புது நாடுகளின் புதுப்புது எண்கள். அத்தனையோடும் எனது குரலினை இணைக்கமறந்தமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே. 'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு ? ' என்பதனைப் போல தொடர்பு எல்லைகள் நீங்கிய பாலைநிலமதில் கைபேசியெதெற்கு என அலுவலக நண்பரிடம் கொடுத்துப் போயிருந்தேன். அவர் எனக்கு வந்த அலுவலக எண்கள் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலெதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு அறபுமொழியைத் தவிர்த்து வேறு பாஷைகள் தெரியாது.

குழுமத்தில் சகோதரி ஷைலஜா எழுதிய கவிதை ஆனந்தத்தில் விழிகலங்கச் செய்கிறது.

கவலையாய் இருக்கிறது
கற்பனைகள் நிஜத்தின் நிழல்தானோ
நிழல்நிஜமாகிவிடவேண்டாம் என்று
நெஞ்சம் தவிக்கிறது
கவிதை ஒன்று எழுதிவிட்டு
காணாமல் போயிருக்கும்
அன்புத்தம்பி ரிஷான்
அன்று ஒருநாள் சொன்னாரே
நினைவிருக்கிறதா
இலங்கைச் செய்திகளை
இடைவிடாது அளிக்கும்
தனக்கும் பாதுகாப்பு இல்லை என்று?
தொலைபேசியில் தொடர்பு கொண்டும்
மின்மடல்கள்பல அனுப்பியும்
பதில் ஒன்றும் இல்லை
தெரிந்தவர்கள் தகவல்சொன்னால்
செரிக்கும் என் உணவு.

நாலைந்து நாட்பிரிவுக்கே எவ்வளவு அன்பாக விசாரிக்கிறீர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும்...? இந்த உலகில் இக்கணத்தின் அதிர்ஷ்டக்காரன் நான்தான் என எண்ணவைக்கிறது. ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்து எழுத என ஆரம்பித்து இன்னும் ஒருவருடம் கூடப் பூர்த்தியாகவில்லை. யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்ததும் இல்லை. அதற்குள் உண்மையான நண்பர்களின் ஆதிக்கத்துக்குள் நான். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி இறைவனே...! நன்றி நண்பர்களே..!
இந்த அன்பும், நேசமும் என்றும் தொடர வேண்டுகிறேன்...!

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

Wednesday, July 9, 2008

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.

மிகவும் அதிர்ச்சியளித்தது அந்த வலைத்தளம்.எனது மூன்று பதிவுகளைத் திருடி (என்னிடம் அனுமதியைப் பெறாமல் தன் பதிவிலிட்டுள்ளதால் வேறு சொல் தெரியவில்லை) தனது வலைத்தளத்தில் இட்டிருக்கிறார்.நீக்கிவிடச் சொல்லி பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அறிவித்தும் இதுவரையில் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

என்னுடைய பதிவுகள் மட்டுமல்ல. சகோதரி கமலாவினது சமையல் குறிப்புகளும் அங்கிருக்கின்றன.மற்ற பதிவுகளின் பதிவர்கள் யாரெனத் தெரியவில்லை.

எனது மனிதாபிமானம் உங்களுக்கு மாத்திரமா ? பதிவு அங்கு,
எனது பெட்டி,பெட்டியாகத் தர்பூசணிகள் பதிவு அங்கு,

எனது யானைகள் பதிவு அங்கு,

சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?