Sunday, May 2, 2010

இலங்கை - வறுமையும், புனித வேடமணியும் கோமாளிகளும்!

    "...... ஒரு திரைப்படத்தில், தொலைக்காட்சி நாடகமொன்றில் அல்லது வேறு பிரிவில் பிரதானமானவர்களாக இருப்பதால் மட்டுமே அவர்கள் அரசியலுக்கும் பொருத்தமானவர்களாவது எப்படி என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியவர்கள், குற்றவாளிகள், சூதாட்ட விடுதிகளை நடத்தி வருபவர்கள் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கின்றனர். அவர்கள் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து தங்களது விம்பங்களை உயர்த்திக் காட்டச் செய்யும் முயற்சிகளை மதில்கள், மின்கம்பங்களைப் பார்க்கும்போது தெளிவாகிறது. இவ்வாறானவர்களை பொதுமக்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது எங்கள் மத்தியிலிருக்கும் இன்னுமொரு பிரச்சினை" - பேராசிரியர் மயுர சமரகோன்.

    இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் முடிவடைந்து, இன்னுமொரு டெஸ்ட் ஆட்டம் தொடங்கியிருக்கின்றது. 20-20 ஆட்டத்தில் தவறான மத்தியஸ்தம், வன்முறைகளெனப் பல விமர்சனங்கள் உலக பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தாலும், விறுவிறுப்பாக இருந்தது ஆட்டம். அதற்குப் பிறகு ஆடப்படப் போகும் டெஸ்ட் ஆட்டமோ மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகவே தோன்றுகிறது. உலக நாடுகளைக் கூட இந்த ஆட்டம் அவ்வளவாக ஈர்த்துக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும் ஏப்ரல் எட்டாம் திகதி இந்த ஆட்டத்தின் முடிவு தெரியவரும். அன்றுதான் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்.

இம் முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக தெருவிலிறங்கி வாக்குக் கேட்டுத் திரிந்த பல நடிக, நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல் முன்னனுபவமோ, சேவை மனப்பான்மையோ சிறிதும் தென்படாத இவர்களின் மேடைப் பேச்சுக்கள் மூலைக்கு மூலை பொதுமக்களை நகைக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவர்களைக் குறித்த 'பொதுமக்களுக்காகவே வாழும்', 'பொதுமக்களுக்காகவே சிந்திக்கும்' போன்ற அப்பட்டமான பொய் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளைக் கழுதைகள் கூடச் சீண்டாது. சினிமா கவர்ச்சி ஆட்டத்திலும் கிரிக்கெட் ஆட்டத்திலும் பொதுமக்களுக்காக என்ன வாழ்ந்தார்களோ, பொதுமக்களை என்ன சிந்திக்கச் செய்தார்களோ?

அந்த ஆட்டங்களின் மூலம் பல கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டு, இப்பொழுது ஓய்வெடுக்கும் வயதில் 'சும்மா' இருக்கப் பிடிக்காமல் ஒரேயடியாக அரசியலில் குதித்து, வென்று அதன் பிறகு 'சும்மா' இருக்கலாமெனத் தீர்மானித்திருக்கிறார்கள் போல.

    இவர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் சமூகத்தின் கலாச்சாரக் காவலர்களாக மாறி, நாட்டின் தேசிய உடை அணிந்துகொள்கிறார்கள். தோளில் துண்டு, முகத்தில் மீசை, உதடுகளில் எப்பொழுதுமொரு புன்சிரிப்பு என வளைய வருகிறார்கள். தெருவில் காணும் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுகிறார்கள். மதத் தலைவர்களைச் சென்று பார்த்து காலில் விழுகிறார்கள். இவ்வாறாக, பொதுமக்களின் வாக்குவேட்டைக்காக இவர்கள் செய்யும் கோமாளித்தனமும் மாறுவேடமும் இவர்களது ஆட்டங்களை விடவும் சிலவேளைகளில் ரசிக்கச் செய்கிறது.

    எவ்வாறாயினும் இந்தத் தேர்தலின் காரணத்தால் இலங்கையில் தற்பொழுது அமைதியான ஒரு அந்தி நேரம் போன்ற ஒரு மந்த நிலை நிலவுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்த விலையேற்றம் குறையவில்லை எனினும் அதே போல மீண்டும் அதிகரிக்கவும் இல்லை. எந்த வற்புறுத்தல்களின் காரணமோ ஊடகங்களில் வெளியிடப்படும் வன்முறைகள் குறித்த செய்திகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அமைச்சர்களிடம் கையளிக்கப்படும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, அமைச்சர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாம் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரைதான். எனினும் அதுவரை இந்த 'நரக வாழ்வின் இடைவேளை' மக்களுக்கு சற்று அமைதியளிக்கத்தான் செய்கிறது. 

    ஏப்ரல் எட்டாம் திகதிக்குப் பின்னர் இந்த இடைவேளை முடிவுக்கு வரும். அதன்பிறகு உண்மையான வாழ்வின் நெருக்கடிகள் மீண்டும் தலைகாட்டத் தொடங்கும். ஏற்கெனவே இலங்கையில் தனிநபர் செலவு வீதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் நாட்டில் அதிகளவான மக்கள் வறுமையிலும், பொருளாதார, வாழ்க்கை வசதிகளின் மந்த நிலையிலும் வாட வேண்டியிருக்கிறது. இனி, தேர்தல் காரணமாக நிலவும் தற்போதைய அமைதி நிலையை இனி எப்பொழுதும் இப்படித்தானென நம்பி உறங்கிக் கொண்டிருப்பவர்கள் தூக்கத்திலிருந்து விழிக்க வேண்டியிருக்கும்.

    தற்போதைய இலங்கையில் சராசரி தனி நபர் வருமான வீதம் $2000 என அமைச்சர்கள் சொல்லிச் சொல்லிக் குதூகலிக்கிறார்கள். இதைக் கேட்டு தாங்கள் வாழ்வது உலகத்திலேயே உன்னதமான ஒரு தேசத்திலென கனவுலகில் மிதக்கும் பொதுமக்கள் வாக்குகளை முன்னின்று அளிப்பார்கள். நாட்டில் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது. ஊதிய அதிகரிப்பு என்ற ஒன்று இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நிலையான வருமானம் இல்லை. ஒரு தேங்காய் முப்பத்தைந்து ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் அரிசி நூற்றி முப்பது ரூபாவுக்கும் விற்கப்படும் ஒரு நாட்டில் இந்த வருமானம் எப்படிப் போதுமானதாகும்? சீனி, தேயிலை, பால்மா, கிழங்குவகைகள், பருப்பு, சமையல் பொருட்கள் என அனைத்தின் விலையுமே நூறு ரூபாய்த் தாள்களைக் கொடுக்கும்போது மட்டுமே வாங்கக் கூடியதாக இருக்கும்போது ஒரு சராசரி பொதுமகனால் இவற்றை வாங்கமுடியாத நிலையும், பட்டினியில் நாட்களைக் கழிக்கவேண்டிய நிலையுமே இன்று உருவாகியுள்ளது. பெற்றோர்களால், குழந்தைகளுக்கு உண்ணக் குடிக்கக் கொடுக்க வழியில்லை.
    அண்மையில் ஒரு தாய் தனது மூன்று வயதைச் சமீபிக்கும் குழந்தையை களுத்துறை பெரிய பௌத்த விகாரை அருகே பெருக்கெடுத்தோடும் களு கங்கையில் மிதக்க விட்டுச் சென்றார். குழந்தையொன்று நீரில் மிதந்துவரும் காட்சியை கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர், புத்தரை வழிபட வந்திருந்த பக்தர்கள் எனப் பலரும் குழந்தையின் துடிப்பை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க, அந்த வழியால் சென்ற ஒரு லாரி சாரதி, உடனே ஆற்றில் குதித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். அந்தச் சாரதி ஒரு கிறிஸ்துவர். மனிதாபிமானத்துக்கு இனமோ, மதமோ, மொழியோ எதுவுமே தடையாக இருக்காது என்பதற்கொரு உதாரணமாகக் கொள்ளப்படக் கூடியவர். அந்தத் தாய்க்கு முப்பது வயது. இந்தக் குழந்தையுடன் சேர்த்து மொத்தமாக ஐந்து குழந்தைகள் வேறு. மிதந்து சென்ற குழந்தை காப்பாற்றப்பட்டது. தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை ஆற்றில் விட நேர்ந்தமைக்கான காரணத்தை அத் தாய் அழுதழுது சொல்கிறார். 'வறுமை. உணவுக்கு வழியில்லை'.

    கணவன் மதுபோதைக்கு அடிமையான பிறகு, தனது பட்டினியைக் கண்டுகொள்ளாமல் தெருவில் யாசித்து, இதுகால வரையிலும், அந்தக் குழந்தையை ஆற்றில் விடப் போகும் கணத்துக்கு முன்பும் கூட அந்தக் குழந்தையின் பசி போக்க உணவூட்டியது அந்தத் தாயன்றி வேறு யார்? நீதிமன்றமா? அந்தத் தாயை சிறைக்கனுப்பி, எல்லாக் குழந்தைகளையும் அனாதை விடுதிகளுக்கு அனுப்பிவைக்க முன்னின்ற சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம், இவ்வளவு காலமாக அந்தத் தாயை, குழந்தைகளை தெருவில் யாசகர்களாகக் கண்டபோதெல்லாம் எங்கே இருந்தது? இதுபோன்ற நிர்க்கதி நிலையிலிருக்கும் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவென்றே அரசு சம்பளம் கொடுத்து நியமித்திருக்கும் உத்தியோகத்தர்களும், ஒவ்வொரு பொதுமகனுக்காகவும் தான் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தேசத் தந்தையும், எங்கே போயிருந்தார்கள்?

    இந்தப் பெண், சுனாமியால் இடம்பெயர்ந்து ஒரு கூடாரமமைத்துத் தன் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கடந்த காலங்களில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகையாக வந்த பல கோடி ரூபாய் பணத்தில், சுனாமியால் சிறிதும் பாதிக்கப்படாத அமைச்சர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டபோது இந்தத் தாய்க்கு மட்டும் எந்த உதவியும் கிட்டாமல் போனது எதனால்? குழந்தையை வளர்க்க முடியாமல் ஆற்றில் விடுவது குற்றம்தான். ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டியதில் வறுமைக்கும், மேற்சொன்ன அனைவருக்கும் பங்கு இருக்கும்போது இவர்கள் எல்லோருமே தண்டிக்கப்படுவதுதானே நியாயம்?

    குழந்தையை விட்ட ஆற்றின் கரையிலேயே விலைமதிப்பு மிக்க பெரிய பெரிய கட்அவுட், சுவரொட்டி, பதாதைகளில் அமைச்சர்கள் சிரிக்கிறார்கள். அந்த பௌத்த விகாரையின் உண்டியலை தங்களது வெற்றிக்காக வேண்டி பணக்கற்றைகளால் நிறைக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களது விளம்பரங்களுக்காகச் செலவழிக்கும் பணத்தில் இது போன்ற இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் பசியாற்ற முடியும். ஆனால் செய்வார்களில்லை. விளம்பரப் புகைப்படங்களில் மட்டும்தான் தெருக் குழந்தைகளைத் தூக்கிக் கொள்வதுவும், அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக எச்சில் தெறிக்க உரையாற்றுவதுவும் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் இலங்கை மக்கள் இன்னும் நெருக்கடிக்குள்ளாவது மட்டும் நிச்சயம். என்ன செய்வது? இலங்கை பல ஆறுகளைக் கொண்ட நாடு. எல்லாமும் கண்ணீரால் நிரம்பியோடுகிறது, இனி குழந்தைகளாலும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com


நன்றி

# வடக்குவாசல் இதழ் - ஏப்ரல், 2010