Friday, March 24, 2017

அசோகமித்திரன் எனும் இலக்கிய ஆளுமை

எழுத்தாளர் அசோகமித்திரனின் தொகுப்புக்கள் அக் கால எனது கிராமப் பாடசாலை நூலகத்தில் நிறைய இருந்தன. எனது ஆரம்ப கால வாசிப்புக்கள் அவருடையதாக இருந்தன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட நூல்கள், இன்னுமொரு நாட்டின் ஒரு மூலையிலிருந்த கிராமத்து நூலகம் வரை சென்றிருக்குமாயின், அவரது எழுத்தின் பரவலான வீச்சு அக் காலத்திலும் எவ்வளவு காத்திரமானதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.


எனக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள், எனது முதலாவது மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு வைத்ததுவும், வாசகர்களுக்கு எனது தொகுப்புக்களில் கையெழுத்திட்டுக் கொடுத்ததுவும் எனது வாழ்வில் பெற்ற பெரும்பேறுகளில் ஒன்றாகக் கருதுகிறேன். அவருடனான இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள உத்தேசித்து அந்த நிகழ்வின் புகைப்படங்கள் சில கீழே.


  

 

 

 

 

நேற்று அவரை இழந்துவிட்டோம் என்ற தகவல் பெரும் உளத் துயரைக் கொண்டு வந்திருக்கிறது. இழப்பு என்பது இலகுவானதா என்ன? எப்படியாவது அதைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. உண்மையில் கலைஞர்களும், எழுத்தாளர்களும் மரணிப்பதேயில்லை. அவர்களது படைப்புக்கள், காலம் முழுவதும் அவர்களது பெயர்களை நிலைக்கச் செய்து கொண்டேயிருக்கும்.


அவ்வாறே, இலக்கிய ஆளுமை அசோகமித்திரனின் படைப்புக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்றுகொண்டேயிருக்கும். படைப்புக்களினூடு அவரும் வாழ்ந்துகொண்டேயிருப்பார் என்றென்றைக்கும் !

- எம்.ரிஷான் ஷெரீப்
24.03.2017