Monday, November 15, 2010

காலச்சுவடு இதழில் வெளிவந்திருக்கும் கடிதத்துக்கான பதில்

 (காலச்சுவடு, செப்டம்பர் 2010 இதழில் வெளிவந்திருந்த எனது  நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்  கட்டுரைக்கு மறுமொழியாக காலச்சுவடு, அக்டோபர் 2010 இதழில் வெளிவந்திருக்கும் கே.எஸ். முகம்மத் ஷுஐப்பின் கடிதத்துக்கான பதில் கடிதம்)

    'காலச்சுவடு' அக்டோபர் 2010 இதழில் சகோதரர் கே.எஸ். முகம்மத் ஷுஐப்பின் கடிதத்தைக் கண்டேன். அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், காவல்துறையினரின் அநீதங்களுக்கு எதிராகவும் எழுதப்படுபவற்றை தைரியமாக வெளியிடும் தமிழக நாளிதழ்கள் குறித்து அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவ்வாறானதொரு சுமுகமான நிலை இலங்கையில் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைப் பிரசுரித்திருந்த ஆனந்தவிகடன் இதழ்களை இலங்கையில் விற்ற ஒரே காரணத்துக்காக ஆனந்தவிகடன் இலங்கையில் தடைசெய்யப்பட்டதையும், விற்பனையாளர் கைது செய்யப்பட்டதையும் அறிந்திருப்பீர்களென்றே நினைக்கிறேன். அரசுக்கெதிராகவோ, ஆளுங்கட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, காவல்துறைக்கெதிராகவோ ஊடகங்களுக்கு ஏதாவது தெரிவித்தால், எழுதினால் அல்லது எழுதத் தலைப்பட்டாலே ஒருவர் கடத்தப்படுவதற்கும், கூண்டுக்குள் தள்ளப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் அதனைக் காரணமாகச் சொல்லலாம்.

    இதே அக்டோபர் இதழில், என்னால் மொழிபெயர்க்கப்பட்ட சிங்களக் கவிதைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் கவிஞர்களில், இலங்கையில் யுத்தத்தால் நடைபெற்ற இனப்படுகொலையைக் குறித்தும் இராணுவத்தினருக்கு எதிராகவும் தனது படைப்புக்கள் மூலமாக பலமான எதிர்ப்பைத் தெரிவிக்கும் கவிஞர் மஹேஷ் முணசிங்க, தான் யாரென வெளிக்காட்டாமலேயே இணையத் தளங்களில் எழுதி வருபவர். எங்கிருந்து எழுதுகிறார்? என்ன செய்கிறார்? என யாருக்கும் தெரியவில்லை. அதனால் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார். பெண் கவிஞர் மாலதீ கல்பனா எம்ப்ரோஸ், ஒரு சமூக ஆய்வாளரும், சமூக சேவகியும் கூட. இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறித்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகள் செய்து, அங்கு நடைபெறும் அநீதங்கள் குறித்து வெளிப்படையாக கவிதைகள், கட்டுரைகள் என இலங்கையின் பிரபல சஞ்சிகைகளில் அச்சமின்றி எழுதி வருபவர். இவர் அண்மையில் எழுதியுள்ள 'யாழ்ப்பாணத்திலிருந்து எழுதுகிறேன்' கவிதையானது பல எதிர்வினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 'சுதந்திரம்' பற்றி கவிதை எழுதி விட்டுக் காணாமல் போயிருக்கும் ப்ரகீத் எக்னெலிகொட பற்றிச் சொல்லவேண்டும். பிரகீத் எக்னெலிகொட பற்றித் தெரிந்துகொண்டீர்களானால் அவரது கடத்தலுக்கான காரணம் என்னவென உங்களுக்கு நான் சொல்லாமலேயே இலகுவாகப் புரியும். ஏற்கெனவே தர்மரத்தினம் சிவராம், லசந்த விக்ரமதுங்க மற்றும் பல ஊடகவியலாளர்களது விதி தீர்மானிக்கப்பட்டது எதனாலென நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    பிரகீத் எக்னெலிகொட - இரு குழந்தைகளின் தந்தையான இவர் இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவராக,  'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தவர். நாட்டின் மிக நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பகிரங்கமாக பல நூறு கட்டுரைகளும் குறிப்புக்களும் எழுதியதால், தைரியமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராகவும், வெளிப்படையான எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார்.  இவர் இறுதியாக எழுதிய கட்டுரையானது வெளியாகிய இரு மணித்தியாலங்களுக்குள் உலகம் முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட ஏழாயிரம் வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது எனில் இவரது எழுத்துக்களின் காத்திரத்தன்மை உங்களுக்குப் புரியும். இலங்கையிலிருந்து வெளிவரும் 'சியரட' பத்திரிகையின் ஆசிரியராக சில காலம் பணியாற்றிய இவரை இதற்கு சில மாதங்களுக்கு முன்பும் ஒரு முறை வெள்ளை வேனில் கடத்தி, இரும்புக் கொக்கியொன்றில் சங்கிலியால் கட்டி விசாரித்துப் பின் நடுவீதியில் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். இவர், இறுதியாக நடந்த  ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகா பற்றிய குறிப்புக்களோடு வெளியான '‘Secrets of winning a War’ எனும் ஆவணப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கையில் 'ஹோமாகம' எனும் பகுதியில் வசிக்கும் இவர் 'காணாமல் போயுள்ளமை' குறித்து இவரது மனைவி சந்தியாவால் முன் வைக்கப்பட்ட முறையீட்டை ஹோமாகம பொலிஸ் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. சந்தியா, வெலிக்கட, தலங்கம ஆகிய பகுதிகளிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஏறி இறங்கியிருக்கிறார். இது நடந்து இரு தினங்களின் பின்னர் இவர் பணியாற்றிய 'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளம் இடைநிறுத்தப்பட்டது. இந்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி இதன் ஆசிரியர் சந்தன சிரிமல்வத்த அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டார். அத்தோடு இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் ஒருவரான கேபி அதாவது குமாரன் பத்மநாதன் தொடர்பான இரகசிய விசாரணைகளைப் பகிரங்கப்படுத்தி, அவ் விசாரணைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில், 'லங்கா' எனும் பெயரில் வெளியாகும் ஞாயிறு வார இதழை தடுத்து நிறுத்தியதோடு அதன் அலுவலகத்துக்கும் அரசால் சீல் வைக்கப்பட்டது. தேர்தல் காலத்தின் போது பிபிசியின் இலங்கை பெண் ஊடகவியலாளரான தக்ஷிலா தில்ருக்ஷி ஜயசேனவும் தாக்கப்பட்டு அவரது பதிவுபகரணங்களும் திருடப்பட்டன.

    இலங்கையில், ஊடகத்துறையில் நேர்மையாகப் பணியாற்றுபவர்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. பேனாவையோ, கேமராக்களையோ, விரல்களையோ அநீதிகளுக்கெதிராக உயர்த்தும்வேளை அவர்களது தலைவிதிகளும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கடத்தப்படுவதும், காணாமல் போவதும், வதைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதுமென பல இம்சைகள் இவர்களைத் தொடர்வதால், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்பவர்களைப் போல உயிருக்கு உத்தரவாதமின்றித்தான் இவர்கள் நடமாட வேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்களை நண்பர்களாகக் கொள்ளவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

    ஊடகவியலாளர் லசந்த படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கழிந்த பிற்பாடும் அவரைக் கொலை செய்தவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பது அரசுக்கு இன்னும் சிரமமாக இருக்கிறது. அதுவும் பட்டப்பகலில், நடுவீதியில் வைத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். கொலையாளிகள் இன்னும் உல்லாசமாகத் திரிந்துகொண்டிருக்கக் கூடும். அவர்களது அடுத்த இலக்கு தைரியமாக அநீதிகளை வெளிப்படுத்தும் இன்னுமொரு ஊடகவியலாளராக இருக்கலாம். இலங்கையில் மனித உரிமை எனப்படுவது மக்களாலோ, ஊடகங்களாலோ கேள்விக்குட்படுத்தப்படவும் உரிமை கோரவும் முடியாத ஒன்றாக இருக்கிறது. சர்வதேச வலைத்தளங்களான ஃபேஸ் புக், ட்விட்டர் மற்றும் சொந்த வலைப்பூக்கள் போன்றவற்றில் இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இலங்கை ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாகக் கருதப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அண்மைய நடவடிக்கைகளிலொன்று, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் மரத்தில் கட்டிவைத்தது. காரணம் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் அவர் கலந்துகொள்ளாதது. இத்தனைக்கும் அவர் தனது குழந்தைக்குச் சுகவீனமென்பதால் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டி அலுவலகத்துக்கு விடுமுறையை அறிவித்துவிட்டுத்தான் அன்றைய தினம் விடுமுறை எடுத்திருக்கிறார். அமைச்சரால் கோபத்தோடு மரத்தில் கட்டிவைக்கப்படுவதையும், அதற்கு தைரியமாக எதிர்ப்புத் தெரிவித்த பெண்ணொருவரை அமைச்சர் மிரட்டுவதையும் பதிவு செய்த காட்சியை நீங்கள் யூ ட்யூப் இணையத்தளத்தில் இப்பொழுதும் பார்க்கலாம். இதற்கு அரசின் நடவடிக்கை என்னவாக இருந்தது? அமைச்சரைக் கைது செய்தார்களா? இல்லை. பிற்பாடு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி அரசுக்குக் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரை அப்பதவியிலிருந்து நீக்கினார். பிறகு வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அதில் அமைச்சர் குற்றமற்றவரென (மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கப்பட்டது ஒரு நாடகமாகவும், பாதிக்கப்பட்டவரின் அனுமதியோடேதான் அமைச்சர் அவ்வாறு நடித்ததாகவும்) தீர்ப்பைச் சொல்லி அமைச்சருக்குத் திரும்பவும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எல்லாம் அரசு நடத்தும் கண்துடைப்பு நாடகம்.

    அண்மையில் நடந்த இன்னுமொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகலாம். இலங்கை அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் சிலர், மாலை ஆறு மணிக்குப் பிற்பாடும் பல்கலைக்கழக வளாகத்தில் கதைத்துக் கொண்டிருந்த காரணத்தால், அங்கிருந்த மாணவிகளை, பல்கலைக்கழக ஆம்புலன்ஸில் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி,  அவர்களது கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொன்னார் அப் பல்கலைக்கழக முதல்வர். அத்தோடு நிற்காமல் அவர்களது பெற்றோர்களிடம், அம் மாணவர்கள் குறித்து மிகக் கேவலமாகச் சொல்லியிருக்கிறார். பல்கலைக்கழக வளாகத்தில் நிழல் மரங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த சீமெந்து ஆசனங்களை உடைத்திருக்கிறார். கேட்டால், மாணவர்கள் காதலிப்பது தவறென்கிறார். அம் மாணவிகளின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் அப் பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துவிட்டார்களெனினும், இலங்கை முழுதும் அம் மாணவிகள் குறித்த தவறான விம்பத்தைத் தீட்டியாயிற்று. வறுமைக்கும், ஆயிரம் பிரச்சினைகளுக்கும், கடினமான தேர்வுகளுக்கும் முகம் கொடுத்து பல்கலைக்கழக அனுமதி பெற்று, கல்வி கற்க வரும் அவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எவ்வளவு அவமானம் ஏற்பட்டிருக்கும்? வேறு நாடுகளிலென்றால், மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்திருப்பார்கள் இல்லையா? ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. அம் முதல்வர், இன்னும் அப் பதவியிலேயே நிலைத்திருக்கிறார்.

    இலங்கையில் இவ்வாறுதான். அநீதங்கள் பகிரங்கமாக நடைபெறும். யாரும் எழுதத் தயங்குகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் நேர்மையான ஒரு ஊடகவியலாளர் உயிருடன் இருக்கவேண்டுமானால், அந்த மூன்று குரங்குகளைப் போல அநீதிகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்காமல் காதைப் பொத்திக் கொண்டு, அநீதிகளையும், மக்களது பிரச்சினைகளையும் பற்றிப் பேசாமல் (எழுதாமல்) வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருப்பதே உசிதம். எனினும் புதிது புதிதாக லசந்தகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் எழுத்திலும், இறப்பிலும் ஒன்றுபோலவே !

    'காலச்சுவடு' பிரசுரிக்கும் இலங்கை சம்பந்தமான எனது கட்டுரைகளை இலங்கையிலிருந்து வெளியாகும் எந்த இதழும் பிரசுரிக்கத் தயங்குமென உறுதியாகவே கூறலாம். எனில், இலங்கையில் நடைபெறும் அநீதங்களை யார்தான் எப்பொழுது வெளிப்படுத்துவது? "ரிஷான் ஷெரீபுக்குத் தமிழக நாளிதழ்களை அனுப்பிவைத்தால், தாம் எழுதிய இலங்கைச் சம்பவம் ஒன்றுமே இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வார். " எனச் சொல்லியிருக்கிறீர்கள். தப்பில்லை. தமிழக இதழ்களில், உங்கள் தேசத்தில் நடைபெறும் எல்லா அநீதங்கள் குறித்தும் பகிரங்கமாக வெளிவருவதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கும். ஆகவே உங்கள் பார்வைக்கு இலங்கை, காவல்துறை அநீதங்கள் ஒன்றுமே இல்லாதவையாகத் தோன்றினாலும், நடைபெறும் அநீதங்களை காலச்சுவடு போன்ற தைரியமான இதழ்களிலும், எனது வலைத்தளங்களிலும் நான் பதிந்து வைக்கவே விரும்புகிறேன். ஏனெனில் என்றாவது நீதமான நல்ல தீர்ப்பு கிடைக்கக் கூடும் அல்லவா? நான் புனைப்பெயர் எதனையும் கூடப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு எழுதுவதால் நான் அக் கட்டுரையில் சொன்னது போல அரசின், காவல்துறையின் அடுத்த பலி நானாகவும் இருக்கலாம். அஞ்சேன் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 131, நவம்பர் 2010

Wednesday, November 3, 2010

இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய பாடல்

    பாதாள உலகைச் சேர்ந்த காடையர் குழுவொன்றை காவல்துறை அதிகாரிகள் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு ஒழுங்கைக்குள்ளால் ஓடும் முஸ்லிமற்ற நாயகன், அங்கு துணி கழுவிக் கொண்டிருக்கும் ஒரு இளவயது முஸ்லிம் பெண்ணிடம் அபயம் கேட்கிறான். அவள் துணி மறைப்புக்குள் அவனை ஒளித்துக் காப்பாற்றுகிறாள். அவள் முகத்திரையோடு, முழுமையான இஸ்லாமிய ஆடையணியும் பெண். பள்ளிவாசலில் சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் அவள், பள்ளிவாசலுக்கும், வகுப்புக்களுக்கும் சென்று வருகையில் இடைக்கிடையே அவனைக் கண்டு காதல் மலர்கிறது. காதலின் உச்சகட்டமாக இரவில் அவளது அறைக்கும் திருட்டுத்தனமாக வந்து அவளுடன் தங்கிச் செல்பவனை அவளது தந்தை காண்கிறார். இருவரது கரங்களையும் சேர்த்து வைத்து அவனுடனேயே தனது மகளை அனுப்பி வைக்கிறார் அத் தந்தை. தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்லும் அவளையும் அவனையும் வழிமறிக்கும் இன்னுமொரு எதிரிக் காடையர் குழுவில் ஒருவன், அவ்விருவரையும் சுட்டுக் கொல்கின்றான். அக் கொலைகாரனைச் சுட்டுக் கொல்கிறான் காடையர் குழுவில்  இஸ்லாமிய ஆடையிலிருக்கும் இன்னும் ஓர்  இளைஞன்.

    இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் இராஜின் புதிய பாடலான 'சித்தி மனீலா'வின் காட்சியமைப்பே இது. பாடலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' எனும் அஸானின் ஓசையையும் ஒலிக்கச் செய்கிறார்கள். பாடலில் ஒரு காட்சியை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் படம்பிடித்திருக்கிறார்கள். பாடலின் இடையிடையே சூதாட்டம் ஆடுபவர்களாகவும், காடையனாகவும் இஸ்லாமிய ஆடையோடிருக்கும் முஸ்லிம் இளைஞனொருவனைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடலின் கருப்பொருளாக இஸ்லாமியரை எடுத்துக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

    சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும், வீதியில் செல்லும் போதும் முகத் திரை அணியும் முஸ்லிம் பெண்ணொருத்தி, இரவில் களவாக அந்நியன் ஒருவனைத் தனது அறைக்குள் வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு ஈமானற்றவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதனைப் பார்க்கும் அனைவருக்கும் இராஜ் சொல்ல வரும் சேதியென்ன? 'முஸ்லிம் பெண்கள் தனது வீட்டில் கண்டித்துச் சொல்லப்படுவதால்தான் இவ்வாறான ஆடைகள் அணிகிறார்களென்றும், இஸ்லாமிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களென்றும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை எளிதில் துறந்துவிடலாமென்றும், அவர்களது ஈமான் வெளித்தோற்றத்தோடு மட்டும்தான்...மனதளவில் இல்லை' ஆகிய பொய்யான கருத்துக்களைத்தானே?

'இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்  கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.' (அல்குர்ஆன் 24:31)

'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.' (அல்குர்ஆன் 33:59)

'நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.' (அல்குர்ஆன் 33:32)

    என அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தும் உண்மையான நமது முஸ்லிம் சகோதரியொருவர் ,  நாளை பூரணமான இஸ்லாமிய ஆடையில் வீதியில் செல்லநேரும் போது கூட, இப் பாடலைப் பார்த்திருக்கும் அந்நியர்கள் அவரைச் சுட்டிக் காட்டிக் கதைப்பவை பலவிதமான மோசமான கதைகளாக இருக்கக் கூடும் அல்லவா?

    இஸ்லாமிய ஆடையிலிருக்கும் முஸ்லிம் பெண்கள் குறித்த, நிறையக் கேள்விகள் அந்நியர்கள் எல்லோரினதும் மனங்களிலே இருக்கின்றன. அவர்கள் ஏன் இவ்வாறு உடலை மூடி ஆடையணிகிறார்கள்? எது அவ்வாறு நிர்ப்பந்திக்கிறது? ஏன் அவர்கள் தங்கள் அழகினை அந்நியர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை? அவர்களை அரைகுறையாடைகளில் பார்ப்பது எப்படி? ஆகிய கேள்விகள் அவர்களைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. ஆகவேதான் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆடைகளுடனிருக்கும் முஸ்லிம் பெண்கள் கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அப் பெண்கள் உடுத்துக் கொண்டிருக்கும் ஆடைகள், அந்நியர்களுக்கு அரிப்பை ஏற்படுத்துவது போல பாடசாலைகளில், கல்லூரிகளில், வைத்தியசாலைகளில் ஏன் நீதிமன்றங்களில் கூட முக்காட்டை உருவி விடுகிறார்கள். அவர்களை இவ்வாறு செய்யச் செய்வது எது? அழகை மறைப்பதையும், மறைப்பதால் ஏற்படும் அழகையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

    இலங்கையில் இவ்வாறாக முஸ்லிம் பெண்களைக் கேவலப்படுத்தும் பாடலான இது முதலாவதில்லை. இரண்டோ, மூன்றோ இருக்கின்றன. எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள்தான் அந்நிய ஆண்களிடம் மையலுறுகிறார்கள். தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்கிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல. இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இதே கதைதான். மெல்லத் திறந்தது கதவு, பம்பாய், பொக்கிஷம்... எனப் பல திரைப்படங்களில் கதையின் நாயகி முஸ்லிம் பெண். அந்நிய மதத்திலொருவனைக் காதலித்து, அவனுடன் இணைவதற்காக குர்ஆனையும், இஸ்லாமிய ஆடையையும் துறந்து செல்வாள். இது இன்றோடு முடியும் ஒன்றில்லை. இனி வரும் காதல் கதைகளிலும், பாடல்களிலும் இதுவேதான் தொடரும். தப்பித் தவறியேனும் முஸ்லிம் இளைஞனொருவன் தங்கள் மதத்துப் பெண்ணொருத்தியைக் காதலிப்பதாகக் காட்டமாட்டார்கள். அவ்வாறு காட்டினால் தங்கள் மதத்துப் பெண், எளிதில் அந்நிய ஆண்களிடம் வசப்பட்டு விடக் கூடியவள் என்றும் காதலுக்காக அவ்வளவு காலமும் அன்பாக வளர்த்த குடும்பத்தை விட்டும் ஓடி விடுபவள் என்றும், ஒழுக்கமற்றவள் என்றும் அர்த்தமாகிவிடும் அல்லவா? அதன்பிறகு அப்படத்தின், பாடலின் இயக்குனரை அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு, இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.

    ஆனால் இலங்கையில் கதாநாயகியை சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியப் பெண்ணாகக் காட்டினால் யாரால் என்ன செய்ய முடியுமென்ற தைரியம் இந்தப் பெரும்பான்மை இயக்குனர்களை, பாடகர்களைத் தொடர்ந்தும் இயங்கச் செய்கிறது. மிகத் துணிச்சலாக காட்சிகளைப் படம்பிடித்து எளிதாக ஒளிபரப்பிவிட முடிகிறது. இதுவே ஒரு பௌத்தப் பெண்ணை, வேறு மதத்தவனொருவன் இழுத்துக் கொண்டு ஓடுவதாகக் காட்டினால் அடுத்தநாள் கல்லெறிக்குள்ளாவோமென அவர்களுக்குத் தெரியும். பௌத்த மதத்தை அவமதித்த ஒரே காரணத்துக்காக, சமீபத்தில் இலங்கை வரவிருந்த அமெரிக்கப் பொப்பிசைப் பாடகரான அகோனுக்கு இலங்கை அரசு விசாவை மறுத்ததையும் இப் பாடலை ஒளிபரப்பிய சிரச மற்றும் எம்.டீ.வி நிறுவனங்கள் கல்லெறிதலுக்குள்ளானதையும் அண்மையில் அறிந்திருப்பீர்கள்.

    ஒரு சிறு காட்சியினால் தமது மதத்துக்கு ஏற்படும் கலாசாரச் சீரழிவினை அவர்கள் அறிந்திருப்பதனால்தான் இவ்வாறான எதிர்வினையைக் காட்டிவிட முடிகிறது. ஆனால் நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். இவ்வாறான பாடல்களை அனுமதிப்பதன் மூலம் நாம் வாழும் சமூகத்தில் எவ்வாறான தீமைகள் நிகழக் கூடுமென்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

    சமீபத்தில், இந்தியா, தமிழ்நாட்டில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். "ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, இந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு"  என அந்த அறிவிப்பு சொல்கிறது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் ஒழுக்கத்தையும் மார்க்கத்தையும் சூறையாடுவது என்ற பயிற்சியும் அவ்வியக்கத்திலிருக்கும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக என்றுமில்லாதவகையில் முஸ்லிம் இளம்பெண்கள் அந்நிய மதத்தவரோடு காதலுறுவதும், ஓடிப் போவதுவும் தமிழகத்தில் அதிகளவாக நிகழ்ந்து வருகிறது. இந்து அமைப்புக்களின் உதவியோடு கன்னியாகுமரி எனும் மாவட்டத்திலிருந்து மட்டும் அதிகளவான முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பணத்திற்காக இதனைச் செய்யும் இளைஞர்கள் பணம் கிடைத்ததும் கூட வந்த பெண்ணை நடுத்தெருவில் தள்ளி விடுகின்றனர். இதற்கு அந்த இயக்கங்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுமையாகக் கவனிக்கத் தவறுவது, பணத்தையும், பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய நவீன தொடர்பு சாதனங்களையும் கட்டுப்பாடின்றி பிள்ளைகளைப் பாவிக்க விடுவது போன்ற இன்றைய எமது சமூகத்திலிருக்கும் ஓட்டைகளும் இதற்குக் காரணம் அல்லவா?

    இப் பாடலை இணையத்திலும் ( http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related ) ஒளிபரப்பச் செய்திருப்பதன் மூலம் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் இதை இப்பொழுது பார்க்க முடியும். எளிதாக ஆண்களிடம் மையலுற்றுவிடக் கூடியதாக, இலங்கை முஸ்லிம் பெண்கள் குறித்த கேவலமான சித்திரமொன்றைப் பார்வையாளர்களின் மனதில் இலகுவாகத் தீட்டி விட முடியும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்தும், அந்நிய மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கம் குறித்துக் கேள்வியெழுப்பியும் இப் பாடலின் மூலம் கிடைக்கக் கூடிய பிரபலம், இராஜை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கவேண்டும். புகழல்ல. பிரபலம். புகழுக்கும் பிரபலத்துக்கும் பாரிய அளவு வித்தியாசமிருக்கின்றது. ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டும் உடனடியாகப் பிரபலமடைந்துவிடலாம். ஆனால் மனிதர்கள் மத்தியில் நற்புகழைப் பெற நீண்ட காலம் உழைக்கவேண்டும். இலகுவாகப் பிரபலமடைந்துவிடலாம். புகழ் பெற்றுவிடுவது கடினம். இங்கு இசைக் கலைஞர் இராஜ் மற்றவர்களின் மனதைக் கொன்று இலகுவாகப் பிரபலமடையும் வழிமுறையை நன்கு அறிந்திருக்கிறார். இலங்கையில் மற்றும் உலகம் முழுதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு மதத்தினரைத் தனது பாடலில் வக்கிரமாகக் காட்சிப்படுத்துவதன் மூலம் எழும் பரபரப்பைக் கொண்டு, இப் பாடலைப் பிரபலப்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கலாம்.

    இலங்கையில் சியத தொலைக்காட்சியின் 'ஹட்ச் டொப் டென்' எனும் நிகழ்ச்சியில் இப்பொழுதும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இப் பாடல் குறித்து, நியாயமான கேள்விகள் சிலதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார் ஒரு இஸ்லாமியச் சகோதரர்.

1. பள்ளிவாசல் வட்டாரத்துக்குள் இப் பாடலைப் படம் பிடிக்க ஏன் அனுமதித்தார்கள்?

2. அஸானின் வரிகளை இந்த பாடலில் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது?

3. ஜம்மியத்துல் உலமாவுக்கு யாராவது இப் பாடல் குறித்து அறிவித்தார்களா? அறிவித்தார்களெனில், இப் பாடல் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?

4. அந்நியப் பெண்ணொருவர் (முகத்திரையுடன் கூடிய ஹிஜாப், ஹபாயாவுடன்) இஸ்லாமிய ஆடையணிந்து, இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

    அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் இதை வாசிக்கும் அநேக இஸ்லாமியர்களது மனங்களிலெழும் கேள்விகள்தான். இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரமானது, இவ்வாறாக ஒரு இனத்தை மாத்திரம் கேவலப்படுத்தும் அளவுக்கு வருமிடத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இலங்கை முஸ்லிம்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இவை போன்ற ஒளிப்பதிவுகள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியவை. இதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

"உங்களில் எவரேனும் தீயசெயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து (ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.


    நாம் என்ன செய்யப் போகிறோம்? இப் பாடலை ஒளிபரப்பக் கூடாதென எல்லா முஸ்லிம்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதால், இப் பாடல் இன்னும் பிரபலம் அடைவதோடு பாடலின் வெற்றிக்கும் அது வழிவகுக்கும். பாடலைப் பார்த்திராதவர்களுக்கும்  பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிடும். அத்தோடு இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களை 'கலகம் செய்பவர்கள்' என்ற போர்வைக்குள் தள்ளிவிடும். ஆகவே முஸ்லிம்களாகிய நாம் எமது ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு இது பற்றி அறிவித்து, அவர்கள் முஸ்லிம் கலாசார அமைச்சைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக இப் பாடலை எங்கும் ஒளிபரப்பவிடாதபடி தடை செய்யச் சொல்லத் தூண்ட வேண்டும். அத்தோடு இப் பாடல்காட்சியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் பொது மன்னிப்புக் கேட்க வைத்தால்தான் இலங்கையில் மீண்டுமொருமுறை இவை போன்ற ஒளிப்பதிவுகள் வெளிவராது. விட்டுவிடுவோமேயானால் இப் பாடலின் பிரபலத்தோடும் வெற்றியோடும் தொடர்ந்து வரக் கூடிய இது போன்ற பாடல்களையும், விளம்பரங்களையும், திரைப்படங்களையும் எதுவும் செய்ய இயலாமல் போய்விடும். விஷச் செடியொன்றை நிலத்திலிருந்து முளைத்தவுடனேயே விரல்களால் நசுக்கிவிடுவது இலகு. வேர் பிடித்து, கிளை விரித்து நன்றாக வளர்ந்த பின்னர் வெட்ட முயற்சித்தால் நிலத்துக்கும் சேதம். சுற்றியிருக்கும் எல்லாவற்றுக்கும் சேதம். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# அல்ஹசனாத் இதழ், நவம்பர் 2010
# விடிவெள்ளி இதழ் ( புகைப்படங்கள்)

Thursday, October 21, 2010

புனித ஹஜ் - பல தடவைகள் செய்யப்பட வேண்டிய கடமையா?

    புனிதமான துல்-கஃதா மாதத்தில் நாம் இருக்கிறோம். இப்பொழுது, நம்மில் பலரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லத் தயாரானவர்களாக இருப்போம். நம்மைச் சார்ந்தவர்கள், உறவினர்கள், அயலில் உள்ளவர்கள், ஊர்வாசிகள் என புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லக் கூடியவர்களை வழியனுப்பி வைக்கக் கூடியவர்களாகவும் இருப்போம். அறிந்தோ, அறியாமலோ தாம் பிறருக்கு இழைத்திருக்கும் குற்றங்களுக்காக, ஏழையோ, தம்மை விடவும் வசதி குறைந்தவர்களோ, தமக்குக் கீழே பணி புரியும் ஊழியர்களோ அவர்களுடனான கோபதாபங்களை மறந்து, அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்து, அவர்களிடம் தாம் செய்த குற்றங்களை மன்னித்துக் கொள்ளக் கேட்டு, இன்முகத்தோடு விடைபெறச் செய்து மனிதர்களிடையே ஒற்றுமையையும், உறவினையும் பலப்படுத்தும் புனித மாதமிது.

    இம் மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஹஜ் கடமையானது பர்ழான ஹஜ், சுன்னத்தான ஹஜ் என இரு வகைப்படுகிறது. உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். ஒன்றுக்கு மேலதிகமாகச் செய்யும் ஹஜ் எல்லாம் சுன்னத்தான ஹஜ்ஜுக்குள் வகைப்படுத்தப்படும். இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி - 1819, 1820)


    ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பை வலியுருத்திக் கூறுகின்றன. எனவே இக் காலகட்டத்தில் முன்பை விடவும் அதிகமான அளவு மக்கள் ஹஜ் கடமைக்காக ஒன்று கூடுகிறார்கள். ஹஜ்ஜுக்காக மட்டுமல்லாது உம்ராவை நிறைவேற்றுவதற்காகவும் அதிகளவான மக்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். 'ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடும் மக்களில், சரி பாதியிலும் குறைந்த சதவீத அளவு மக்களே தமது முதல் ஹஜ்ஜை நிறைவேற்ற வருபவர்கள்; ஏனையோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்ற வருகை தருபவர்கள்' என ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

    இது பிழையென்றோ தவறான செயலென்றோ கூற வரவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜைச் செய்யவெனச் செல்கிறவர் மஹ்ரமாக (ஒரு பெண்ணுக்கு வழித் துணையாக), வழிகாட்டியாக, மருத்துவராக இப்படியான அவசியத் தேவையின் காரணமாகச் செல்லலாம். ஆனால் 'நான் ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கிறேன்..நான் பத்துத் தடவை ஹஜ் செய்திருக்கிறேன்' என்று பெருமை பேசிக் கொள்பவர்களும், அதற்காகவே பல இலட்சங்களைச் செலவழித்து ஹஜ்ஜைப் பல தடவைகள் நிறைவேற்றுபவர்களும் கூட நம் சமூகத்தில் இருக்கிறார்கள் இல்லையா?

    நமது நாட்டிலிருந்தும், ஊரிலிருந்தும் கூட இவ்வாறு பல தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்றப் புறப்பட்டுச் செல்வோர் அனேகர் நம்மில் இருக்கிறோம். நாம் வசிப்பது செல்வந்த நாடொன்றல்ல. நம்மைச் சூழ்ந்திருக்கும் நமது சகோதரர்கள் எல்லோருமே அவர்களது ஹலாலான எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட சௌபாக்கியங்கள் நிறைந்தவர்களல்லர். நாட்டில் அகதிகளாக்கப்பட்ட, அனாதைகளாக்கப்பட்ட, இடம்பெயர்ந்த அநேக மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களது நிறைவேற்றப்படாத பல தேவைகள் இன்னும் இருக்கின்றன. நம் தேசமானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயத்தாலும், மண் சரிவுகளாலும், காற்றினாலும், கோடையினாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டே வருகிறது. நமது மக்கள் இவற்றால் பெரும் துயரடைகிறார்கள். அவர்களது துயரங்களுக்கு மத்தியிலிருந்து நாம் ஸுன்னத்தான ஹஜ் கடமையைச் செய்யச் செல்கிறோம்.

    நம்மைச் சுற்றிலும் அன்றாட சீவனத்துக்கே வழியற்றுப் போன வறியவர்கள் இருக்கிறார்கள். சொந்த வீடுகளின்றி வாடகை வீடுகளில் வசித்து, வாடகை கொடுக்க இயலாது கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள். ஹலாலான தேவைக்காகக் கடன் வாங்கி, அதை மீளச் செலுத்திக் கொள்ள வழியற்றவர்கள் இருக்கிறார்கள். தமது பிள்ளைகளின் திருமண வயது தாண்டியும் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல திறமையிருந்தும், நன்றாகக் கற்கும் ஆர்வமிருந்தும் உதவி செய்ய ஒருவருமின்றி சிறு வயதிலேயே சிறு சிறு கூலிவேலைகளில் இறங்கிவிடும் சிறுவர்களும், இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். மருத்துவ வசதியற்ற நோயாளிகள், இன்னும் அநாதைகள் இருக்கிறார்கள். நம்மை அண்டிப் பிழைக்கும் எளிய ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களது பெருமூச்சுகளுக்கு மத்தியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டேயிருக்கிறோம்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜினை நிறைவேற்ற, ஒருவர் தயாராகிச் செல்லும் வரையிலும், சென்று திரும்பும் வரையிலும் எத்தனை இலட்சங்கள் பணம் செலவு செய்யப்படுகிறது? இந்த வருடமும் ஹஜ் செய்யத் தீர்மானித்ததன் பின்னர் வீட்டுக்கு வந்துசெல்லும் உறவுகளுக்கான விருந்துபசாரங்களாகட்டும், ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பி வருகையில் குடும்பத்தினர், நண்பர்களுக்காக வாங்கி வரப்படும் அன்பளிப்புப் பொருள்களாகட்டும், கணக்கற்ற பணம் செலவழிக்கப்படுகிறது அல்லவா?

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்" எனக் கூறினார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி 1421)


    மேலுள்ள ஹதீஸைப் பாருங்கள். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் தஆலா நமக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து நாம் செய்யும் தர்மமானது இன்னுமொரு மனிதனின் நிலையை மாற்றக் கூடியது. அவனைத் துன்பத்திலிருந்தும் விடுவிக்கக் கூடியது. சுன்னத்தான ஹஜ்ஜுக்களுக்காக செலவாகும் இலட்சக்கணக்கிலான பணத்தினைக் கொண்டு எவ்வளவெல்லாம் செய்யலாம் பாருங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் பர்ழான ஹஜ்ஜைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடும் நிய்யத்தோடும் செல்ல வழியற்ற நம் உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவலாம். ஹலாலான தேவைகளுக்காகக் கடன்பட்டு அதை மீளச் செலுத்திக் கொள்ளவியலாமல் தவிப்பவர்களை அதனிலின்றும் மீட்டு விடலாம். திருமணம் செய்ய வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வசதியின்றி, கல்வியைப் பாதியில் விட்டவர்களுக்கு அவர்களுக்கான எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம். நம்மை நம்பி நம்முடன், நமக்காக உழைக்கும் ஊழியர்களின் ஊதியத்தைச் சிறிதளவாவது அதிகரித்து விடலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுபவர்களின் குடும்பத்துக்கு, அவர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலொன்றைச் செய்யவோ, வேறு தொழிலுக்கோ பணத்தைக் கொடுத்துதவலாம்.

    கட்டாயக் கடமையான ஸகாத்தை ஒழுங்காகக் கணக்கிட்டுக் கொடுக்காது, சுன்னத்தான ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. இஸ்லாமானது கட்டாயக் கடமைகளை உதாசீனம் செய்துவிட்டு, சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வரவேற்கவில்லை. நமக்குக் கடமையான முதலாவது ஹஜ்ஜை ஒழுங்காக நிறைவேற்றிவிட்டோம். அதற்குப் பிறகும் அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லவும் ஆசை வருகிறது எனில், ஹஜ்ஜுக்குச் செல்லாமல் அதற்குச் செலவாகப் போகும் பணத்தில் தன்னைச் சூழவுள்ள இயலாதவர்களுக்கு உதவுவேன் என மேலதிக ஹஜ் செய்யப் போகும் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதனைச் செயற்படுத்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் எளியவர்களிடத்தில் எவ்வளவு நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும், சிந்தித்துப் பாருங்கள்.

நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ' மனிதன் மரணமடைந்து விட்டால் அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
1.எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா)
2.பிரயோசனமளிக்கும் கல்வி
3. நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்


    ஒரு மனிதன் மரணித்து விடும்போது அவரது செயல்களின் இயக்கமும் நின்று போய்விடுகிறது. அவரால் தொடர்ந்தும் நற்செயல்கள் செய்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர் கப்றாளியாக ஆன பின்பும் அவரது நன்மைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கும்படியான நற்செயல்கள்தான் மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸில் உள்ளவை. பல தடவை ஹஜ் செய்யும் வசதி படைத்தவர்களின் பணத்தில் இவ்வாறாகக் கப்றிலும்  நிரந்தரமாக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய எத்தனை எத்தனை நல்ல விடயங்களைச் செய்துவிடலாம்? செய்ய முயற்சிப்போம், சிந்திப்போம் சகோதரர்களே !

- எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

நன்றி

# விடிவெள்ளி வார இதழ் - 51 (21.10.2010)

Friday, October 15, 2010

கண்ணியம் காக்கப்பட வேண்டிய பள்ளிவாயில்கள்

    நீங்கள் ஒரு அரசனின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் வீட்டிலிருந்த அமைப்பிலேயே சென்று விடுவீர்களா? அந்த அரசனின் மனம் கவரும் வண்ணம்  தூய்மையாக, இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து, மணம் பூசிச் செல்வீர்கள். அங்கு சென்று அரசனின் வருகைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்த அரண்மனையில் தடுக்கப்பட்டுள்ள அரட்டையை, கூட இருப்பவர்களோடும் கைத்தொலைபேசியிலும் சத்தமாக நிகழ்த்திக் கொண்டிருப்பீர்களா? அரண்மனைப் பாவனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை உங்கள் தேவைக்காக, நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்துவீர்களா? எதையும் செய்யமாட்டீர்கள். ஏனெனில், அரண்மனைக்குள் தடுக்கப்பட்டிருக்கும் இவை போன்றவற்றையெல்லாம் செய்தால் கிடைக்கும் அரசனின் கோபத்துக்கும் தண்டனைக்கும் பயந்து, மிகவும் அமைதியாகவும், அரசன் உங்களைக் காண்கையில் உங்களை அவன் நல்லவிதமாக எண்ணவேண்டுமெனவும் கண்ணியமாக நடந்துகொள்வீர்கள் அல்லவா?

    ஆனால், தற்காலத்தில் சர்வ வல்லமை மிக்க முழுப் பிரபஞ்சத்துக்கும் அரசனான, எல்லாப் புகழுக்குமுரிய எமது இறைவனான அல்லாஹ் தஆலாவின் மாளிகைக்கு அழைக்கப்படும் போது செல்லும் நாம், இறைவன் மீது எந்தவித அச்சமுமற்றவர்களாகவே அங்கு கால் பதிக்கிறோம். வுழூ செய்வதற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை நமது தேவை முடிந்தும் வீணடிப்பதோடு, தண்ணீர்க் குழாய்களையும் இஷ்டத்துக்குத் திறந்து வுழூச் செய்துவிட்டு அவற்றை ஒழுங்காக மூடாமலே சென்று விடுகிறோம். இகாமத் சொல்லப்படக் காத்திருக்கும் நேரம் வரை அம் மாளிகைக்குள் வீணான அரட்டையிலும், சிரிப்பிலுமே நேரத்தைக் கடத்துகிறோம். எமக்கு விரும்பிய விதத்தில் மின்சாரக் குமிழ்களை, மின்விசிறிகளை இயக்கிக் கொள்கிறோம். பின்னர் அவற்றை அணைக்க மறந்து அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகிறோம். இன்னும் தொழுகைக்காகக் கூட வராத சிலர், தமது அவசரத் தேவைக்காக கழிப்பறையை மட்டும் நாடி பள்ளிவாயிலுக்கு வந்து செல்வதைக் கண்டும் காணாதவர்களாக இருந்தும் விடுகிறோம். பிரயாணத்தினிடையில் அவ்வாறு வந்துசெல்லும் வெளியூராட்களை விட்டு விடலாம். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் பள்ளிவாயிலை நாடி வரும் உள்ளூர் ஆட்களைத் தொழுகைக்காகத் தூண்டுவதுவும் நமது கடமையல்லவா?

    அண்மைக்காலங்களில் நிக்காஹ் பதிவுகள், இஃப்தார் நிகழ்வுகள் போன்றன பள்ளிவாயில்களில்தான் அனேகம் நடைபெறுகின்றன. மிகவும் நல்ல, நன்மையான விடயம் இது. ஆனால், இவ் வைபவங்கள் முடிந்த பின்னர் பார்த்தால், உணவுப் பரிமாற்றத்தின் போது எல்லோருக்கும் பகிரப்பட்ட சிற்றுண்டி மீதிகள், பேரீத்தம்பழ விதைகள், குடிபானத் துளிகள் போன்றன பள்ளிவாயிலின் தரையெங்கிலும் மற்றும் நில விரிப்பிலும் சிதறி இருக்கும். பள்ளிவாயில் சுத்திகரிப்பாளர் வந்து துப்புரவு செய்யும் வரைக்கும் பாதங்களில் ஒட்டியபடி எல்லா இடங்களுக்கும் பரவி, அவை ஈக்கள், பூச்சிகள் மொய்த்தபடியும் வாடையடித்தபடியும் அப்படியே கிடக்கும். நமது வீட்டிலென்றால் இப்படி அலட்சியமாக விட்டுவைப்போமா? உடனே அதைச் சுத்தம் செய்துவிட மாட்டோமா? ஆனால் பள்ளிவாசல் எனும்போது மட்டும் நமக்கு ஒரு அலட்சியமும் சோம்பலும் வந்துவிடுகிறது. நிகழ்வு முடிந்ததுமே சாப்பிட்டோம், குடித்தோமென அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். ஒவ்வொருவரும் தமது உணவின் மீதிகளை, வாழைப்பழத் தோல்களை, பேரீச்சம்பழ விதைகளைத் தாமே அகற்றிவிட்டால், அதற்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைக் கூடைகளிலிட்டுவிட்டால், நமது இறைவனின் இல்லம் ஒரு சில நிமிடங்களிலேயே சுத்தமாகிவிடுமல்லவா? உணவு நிகழ்வுகளை பள்ளிவாயில்களில் ஏற்பாடு செய்பவர்களும் கூட, அந் நிகழ்வின் பின்னர் பள்ளிவாயிலை உடனே சுத்தம் செய்யும் நடவடிக்கை குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

    நம்மைக் கடந்துபோன இந்த வருட ரமழானின், இறுதிப் பத்து நாட்களின் பின்னிரவுகளில் அனேகமான பள்ளிவாயில்களில் நடக்கும் ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்துகொள்ளவே வேண்டும். ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதுவும், கியாமுல்லைல் தொழுகையும் பெரும் நன்மையைத் தேடித் தரும் விடயம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமழான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.
(ஸஹீஹ் புகாரி - 2010)

    இவ்வாறு இஃதிகாப் இருந்தும், கியாமுல்லைல் தொழுதும் நன்மையைத் தேடிக் கொள்வதற்காக முன்வந்து ஊர் இளைஞர்கள் ரமழானின் இரவுகளில் பள்ளிவாயில்களில் ஒன்றுகூடுவது எவ்வளவு நல்ல விடயம்? ஆனால் இஃதிகாப் இருப்பதற்காகப் பள்ளிவாயிலுக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிக் கொண்டு வரும் இளைஞர்களில் பலர், பள்ளிவாயில்களை படுத்திருப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுத்திருந்ததையும் கடந்த ரமழானில் காண முடிந்தது. கியாமுல்லைல் தொழுகை நடந்து கொண்டிருக்கும்வேளை உறங்காது வெறுமனே படுத்திருக்கும் சில இளைஞர்கள் சத்தமாகச் சிரித்துக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும் தமது கைத்தொலைபேசிகளில் விளையாடிக் கொண்டிருப்பதையும், இன்னும் சில இளைஞர்கள் பள்ளிவாயிலுக்குள்ளேயே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்று, தொழுகைக்காக வந்திருந்த பெரியவர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிக்காட்டினர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி - 1423)

    நன்மை தேடுவதற்காகப் பள்ளிவாயில்களில் ஒன்று கூடும் நமது இளைஞர்கள் பலர், ஏன் தமது பொன்னான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்து, தொழுதுகொண்டிருக்கும்  மற்றவர்களுக்கும் இடையூறாக இருந்து, பெரியவர்களின் சாபங்களை அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமாக வாங்கிச் செல்கின்றனர்?

    அடுத்ததாக நிக்காஹ், இஃப்தார் போன்ற நிகழ்வுகளின் போதும், தொழுகை இடைவேளைகளிலும் ஒன்று சேரும் நமது மக்கள் எழுப்பும் இரைச்சலை கண் மூடிக் கேட்டுப் பாருங்கள். ஒரு சந்தையிலோ, ஒரு பேரூந்திலோ இருப்பதைப் போல நம்மை அந்த இரைச்சல் உணரச் செய்யும். பள்ளிவாயில் நிர்வாக சபைக் கூட்டங்களின் போதும், விசாரணைக் கூட்டங்களின் போதும் இன்னும் பல ஒன்றுகூடல்களின் போதும் பள்ளிவாயில் இறைவனின் இல்லம் என்பதை மறந்து அங்கு ஒருவரையொருவர் சத்தமாக ஏசிக் கொள்வதுவும், அடித்துக் கொள்வதுவும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

    இங்கு அந்நிய மதத்தவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைக் கொஞ்சம் பார்ப்போம். ஒரு விகாரைக்கோ, கோயிலுக்கோ அவர்கள் செல்லும்போது வெண்ணிற ஆடைகளை அல்லது இருப்பதிலேயே தூய்மையான, ஒழுங்கான ஆடைகளைத்தான் அணிந்து செல்கிறார்கள். அவர்களது அப் புனித இடத்தின் எல்லைக்குள் பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் அவர்கள், வீண் அரட்டையிலோ, அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதை நாம் கண்டதில்லை. தனது ஆலயமொன்றைப் பேரூந்தில் கடந்து செல்லும்போதும் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பல சக மதத்தவர்களை நான் கண்டிருக்கிறேன். எமது பள்ளிவாயில்களை அவர்கள் நடந்து, கடந்து செல்ல நேரிட்டால் கூட,  கண்ணியமாகவும் அமைதியாகவும் அவ்விடத்தைக் கடந்து செல்கின்றனர்.

    சக மதத்தவர்கள் அவர்களது ஆலயங்களுக்கும் எமது பள்ளிவாயில்களுக்கும் வழங்கும் கௌரவத்தை, நாம் நமது பள்ளிவாயில்களுக்கு வழங்குகிறோமா? இஸ்லாமியனான ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹ் தஆலாவின் இறை இல்லத்திற்குரிய கண்ணியத்தை உணர்ந்து, அதற்கு மதிப்பளித்தால் மட்டுமே பள்ளிவாயிலுக்குரிய அமைதியையும் ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேண முடியும். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# அல்ஹசனாத் மாத இதழ், ஒக்டோபர் 2010

Friday, October 1, 2010

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும்  காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாட்டை விசாரிக்கும் காவல்துறை, சம்பந்தப்பட்டவர்களை கூண்டிலேற்றி நீதத்தை நிலைநாட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு.

    ஆனால் இலங்கையின் காவல்துறைக்கும் இந்தக் கடமைகளுக்கும் சம்பந்தமேயில்லை. இலங்கை காவல்துறையின் அநீதங்கள் பற்றிப் பேசிப் பேசியும், எழுதி எழுதியும் சலித்துப் போய்விட்டது. இந் நாட்டில் ஊழல் அதிகம் நிகழுமிடங்களில் காவல்துறை இரண்டாமிடத்திலிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி அமைச்சரொருவரும் வெளிப்படையாக உரையாற்றியிருக்கிறார். இலங்கையின் காவல்துறையினர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். கதிர்காமத்தில், மாணிக்க கங்கையில் புனித நீராடும் தமிழ் மக்களை தடியால் அடித்து விரட்டும்போதும், பம்பலப்பிட்டி கடற்கரையில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை தடியால் அடித்துக் கொல்லும்போதும் ஒரே சுபாவத்தோடுதான் நடந்துகொள்கின்றனர். அங்குலான பொலிஸ்நிலையத்துக்குள் கொலை நிகழ்ந்தபோதும், கொட்டாவ பொலிஸ்நிலையத்துக்குள் கொலை நிகழ்ந்தபோதும் கொலைப்பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள காவல்துறை சொல்லும் கதை ஒன்றேதான். கைது செய்யப்பட்டபின்பு சந்தேகநபரொருவர் கொல்லப்படாத பொலிஸ்நிலையமொன்று இலங்கையிலிருக்குமென்பது ஊருக்குள் மரணமே நிகழாத வீடொன்றைக் கண்டுபிடிப்பதுபோல நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.

    அண்மையில் நிகழ்ந்த இரு சம்பவங்களைப் பார்ப்போம். இவற்றுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சம்பவங்களிலுமே யார் குற்றவாளியென்பது வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கான தண்டனை வழங்கப்படவில்லை. நிரபராதிகள் வீணே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    லாலக பீரிஸ், 34 வயதான இவர் இரு குழந்தைகளின் தந்தை. வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப் பற்றி காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் படி, அந்த அங்கலட்சணத்துடன், கைவசம் தேசிய அடையாள அட்டை இல்லாமலிருந்த இவரையும் இவரது நண்பரையும் தெருவில் வைத்து கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை. ஒருவரைக் கைது செய்த பின்பு அவரை என்ன குற்றவாளியாக்குவதெனும் கலையில் திறமை வாய்ந்த காவல்துறை, இவரைக் கொள்ளைக்காரனாக்கியது.

    லாலகவின் தங்கை வீட்டில், உடைந்திருந்த சலவை இயந்திரத்தை திருத்திக் கொடுப்பதற்காக அன்றைய பகல்பொழுது முழுவதையும் செலவளித்திருந்த லாலக, வீட்டுக்கு வந்த பின்னர் வீட்டுத் தண்ணீர்க் குழாய் உடைந்ததன் காரணமாக, அதில் பொருத்துவதற்கு பிளாஸ்டிக் குழாயொன்றை வாங்கிவரவென்று மே மாதம் 23ம் திகதி மாலை 6 மணிக்கு கொட்டாவ நகரத்துக்குச் சென்றதாக அவரது மனைவி அனுஷா தில்ருக்ஷி சொல்கிறார். அவர் நகரத்துக்குப் போனபின்னர், அவரையும் இன்னுமொருவரையும் காவல்துறை கைதுசெய்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து உடனேயே கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு அவரது மனைவியும், தங்கையும் சென்று அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லையென அங்கு அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே அயல் பொலிஸ்நிலையமான ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோதும் அதே பதில்தான் அவர்களுக்குக் கிடைத்தது.

    பொலிஸ்நிலையத்துக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது அவரது வீட்டினர், உறவினரின் மனதில் எவ்வாறான வேதனையெழும்பும்? அதுவும் இந் நாட்டு காவல்துறையினரின் நடத்தைகளை அறிந்தவர்களது மனது என்ன பாடுபடும்? எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காதவிடத்து, மீண்டும் இரவாகி அவரது மனைவியும், தங்கையும் பொலிஸ்நிலையம் வந்தனர். முன்னைய பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், லாலகவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நபர் அங்கு கூண்டுக்குள்ளிருப்பதை அவர்கள் கண்டனர்.

'நாங்கள் உன்னுடன் சேர்த்து வேறு யாரையும் இங்கு கொண்டுவரவில்லைதானே?' பொலிஸார், அவர்கள் முன்பே அந் நபரிடம் வினவினர். அவரும் இல்லையென்று தலையசைத்தார். கொடுக்கப்பட்டிருந்த அடி காயங்கள் அவரை அவ்வாறு சொல்லவைத்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்கள் இருவரையும் நகரில் வைத்து பொலிஸ் தங்கள் ஜீப்பில் ஏற்றியதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருந்தனர். அப் பெண்கள் பெருந் துயரத்தோடு வீட்டுக்கு வந்தனர்.

    அடுத்தநாள் விடிகாலை 6.30 மணியளவில் திரும்பவும் லாலகவின் தங்கை பொலிஸ்நிலையம் வந்து விசாரித்துள்ளார். முந்தைய நாள் அவருக்குக் கிடைத்த அதே பதில்தான் மீண்டும் கிடைத்தது. அவர் வீட்டுக்கு வந்தார். காலை 9 மணிக்கு காவல்துறையிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

'அண்ணனுக்கு ஏதேனும் சுகவீனம் இருந்ததா? உனது அண்ணன் நேற்று செத்துப் போய்விட்டார். உடனே பொலிஸுக்கு வா.'

    உடனே அவர், லாலகவின் மனைவியையும், இன்னுமொரு சகோதரனையும் அழைத்துக் கொண்டு பொலிஸ்நிலையம் வந்துள்ளார். அங்கு பொலிஸ் மேசைக் காலொன்றில் கட்டப்பட்டு, இறந்துபோயிருந்த லாலகவைக் கண்டனர். கைகளிரண்டிலும் விலங்கிடப்பட்டு, காது அருகில் காயத்தோடும், உடல் முழுவதும் சப்பாத்து அடையாளங்களோடும், வாயிலிருந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்த அண்ணனின் சடலத்தைக் கண்ணுற்றதாக அவரது சகோதரன் கூறுகிறார். 23ம் திகதி, தங்களால் கைது செய்யப்படவில்லையெனச் சொல்லப்பட்ட ஒருவர், 24ம் திகதி பொலிஸ்நிலையத்துக்குள்ளேயே இறந்துபோயிருந்தது எப்படி? இப்பொழுது லாலகவைக் கைது செய்யவே இல்லையெனச் சொல்லப் போவது யார்? பொலிஸாருக்கு கைதிகளை அடிப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும், கொலை செய்வதற்கும், அவர்கள் மேல் பொய்யான குற்றங்களைச் சோடிப்பதற்கும் இன்னும் பொய் சொல்வதற்கும் கூட இங்கு அனுமதி இருக்கிறது.

    பொலிஸாரின் கைதுக்குப் பின்னர் நிகழ்ந்த இப் படுகொலைக்குப் பிற்பாடு செய்யப்பட வேண்டிய அனைத்தும் வழமை போலவே நிகழ்ந்துமுடிந்தாயிற்று. அதாவது கொட்டாவ பொலிஸார் மூவருக்கு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இப் படுகொலை சம்பந்தமாக பூரண விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். இது நடக்குமா? இது போன்ற அறிக்கைகளை எத்தனை முறை கேட்டிருப்போம். ஆனால் எந்தச் சிறைச்சாலைப் படுகொலைக் குற்றத்திலும் பொலிஸுக்குத் தண்டனை கிடைத்ததாகத் தகவல்கள் இல்லை. இந்தச் சமூகத்தில் எவர்க்கும் யாரினதும் உயிரைப் பறிக்க உரிமையில்லை. பொலிஸுக்கு மட்டும் அந்த உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. குற்றவாளியென இனங்காணப்படும் வரை கைது செய்யப்படும் அனைவருமே சந்தேக நபர்கள் மாத்திரம்தான். அவர்கள் குற்றமிழைத்தவர்களா, நிரபராதிகளா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இங்கு சந்தேகநபருக்கு, எந்த நீதியுமின்றி தண்டனை வழங்கியாயிற்று.

    இது இவ்வாறெனில், தனக்கு நீதி வழங்குவார்களென அப்பாவித்தனமாக நம்பி, பொலிஸை நாடிய ஒருவரையே பொலிஸ் தண்டித்த இன்னுமொரு கதையும் இங்கு நிகழ்ந்துள்ளது. இது நடந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் நீதி கிடைக்கப்பெறவில்லை. கதையின் நாயகனின் பெயர் சரத் சந்திரசிறி. 43 வயதில் மெலிந்து, உயர்ந்த, ஏழ்மையான தோற்றம் கொண்ட நபர். தனது தந்தையின் மரண வீட்டுக்குப் புறப்பட்டவருக்கு நடந்ததைப் பார்ப்போம்.

    கடந்த பெப்ரவரி 21ம் திகதி தனது தந்தையின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததுமே, அவர் வாழ்ந்த நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தார் சந்திரசிறி. அப்பொழுது நேரம் விடிகாலை 2 மணி. நகரத்திலிருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு எடுத்து அவர் மரண வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தார். அதன்படியே சென்ற அவர், முச்சக்கர வண்டியை மரண வீட்டுக்கருகிலேயே கொண்டு செல்ல முடியாத காரணத்தால் மரண வீடு தென்படும் தூரத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கி, வாடகை எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். நூறு ரூபாய் கேட்ட சாரதியிடம் தன்னிடமிருந்த ஒரேயொரு ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுத்திருக்கிறார். வண்டிச் சாரதி தன்னிடம் மாற்றித்தர காசு இல்லை எனச் சொன்னதும் இவர் மரண வீட்டில் யாரிடமாவது வாங்கிவந்து தருவதாகச் சொல்லும்போதே சாரதி ஆயிரம் ரூபாய்த் தாளோடு வண்டியைச் செலுத்திச் சென்றுவிட்டார். இனி அவரே சொல்கிறார் கேளுங்கள்.

" அப்பொழுது விடிகாலை 3 மணியிருக்கும். நான் ஆட்டோவைத் துரத்திக் கொண்டு சந்திவரை ஓடினேன். அவர் எந்நாளும் ஆட்டோவை நிறுத்திவைக்கும் இடத்திலேயே தனது ஆட்டோவுடன் இருந்தார். 'தம்பி, நான் கொடுத்த ஆயிரம் ரூபாயோட மீதியத் தாங்கோ' என்று அவரிடம் போய்க் கேட்டேன். 'உனக்கென்ன பைத்தியமா ஓய்? நீ எனக்கு நூறு ரூபா மட்டும்தான் கொடுத்தாய்.' என்று அவர் மிரட்டினார். நான் ஏதும் செய்ய வழியற்று நின்றிருந்தேன். அப்பாவுடைய மரண வீட்டுக்குப் போகவும் கையில் காசில்லை. அப்பொழுது வீதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த இரண்டு பொலிஸாரைக் கண்டேன். நான் அவர்களிடம் போய் விடயத்தைக் கூறினேன். அவர்களால் எதுவும் செய்யமுடியாதென்றும் வேண்டுமென்றால் போய் பொலிஸ்நிலையத்தில் ஒரு முறைப்பாடு கொடு என்றும் அவர்கள் கூறினார்கள். நான் அப்பொழுதே நடந்து பொலிஸ்நிலையம் புறப்பட்டேன். நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது சம்பந்தப்பட்ட ஆட்டோ சாரதியும், பொலிஸ் சார்ஜனும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சார்ஜன் என்னைக் கண்டதும் எனதருகில் வந்தார். செருப்பைக் கழற்றச் சொன்னார். நான் கழற்றியதும் என்னை இழுத்துக் கொண்டுபோய் சிறைக் கூண்டுக்குள் தள்ளினார். நான் ஏனெனக் கேட்டேன். அதற்கு, 'வாயை மூடிக் கொண்டிரு..ரொம்பப் பேசினா வாயிலிருக்கும் பல்லெல்லாத்தையும் வயித்துக்குள்ள அனுப்பிடுவேன்' என்று மிரட்டினார்."

    22ம் திகதிதான் அவர் விடுவிக்கப்பட்டார். எந்தக் குற்றமும் செய்யாத ஒருவரை, நீதி கேட்டு வந்த ஒருவரை தண்டித்தனுப்புவது எந்த விதத்தில் நியாயமானது? அந்த அப்பாவி மனிதன், தனி மனிதனாக இதற்கு நீதி கேட்டுப் போராடத் தொடங்கியுள்ளார். பொலிஸ் மட்டத்தில் ஒவ்வொரு உயரதிகாரிகளாகச் சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விளக்கமளித்திருக்கிறார். எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. தான் இறுதியாகச் சந்தித்த பொலிஸ் உயரதிகாரியிடம் விடயத்தைக் கூறியதும் 'கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்க்காகவா இவ்வளவு அலையுற?' எனக் கேட்டிருக்கிறார். அந்த ஆயிரம் ரூபாய் கூட தனக்குப் பெறுமதியானது எனக் கூறும் சந்திரசிறி, தன்னை அநியாயமாக சிறையில் வைத்திருந்தமைக்கு நீதி கேட்டே நான் இப்பொழுது போராடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்தும் துரத்தப்பட்ட அவர், பல தொலைக்காட்சி ஊடகங்களைச் சந்தித்து விடயத்தைக் கூறியிருக்கிறார். எங்கும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

"நான் ஒரு விவசாயி. அப்பாவுடைய மரண வீட்டுக்குச் செல்வதற்காகவே பாடுபட்டு ஆயிரம் ரூபாய் தேடிக் கொண்டேன். இன்று வரை ஒவ்வொருவரும் சொல்லுமிடங்களுக்கு நீதி கேட்டு அலைந்து பத்தாயிரம் ரூபா போல செலவாகிவிட்டது. ஆனாலும் நான் ஓய மாட்டேன். எனது பணத்தைத் திருடிய திருடனே பொலிஸுடன் சேர்ந்து என்னை அச்சுறுத்தினான். அவர்கள் என்னை வீணாகக் கூண்டுக்குள் தள்ளினர். இதற்கு எனக்கு நீதி தேவை. "  அவர் குறிப்பிடும் முச்சக்கர வண்டியின் இலக்கம் 7644. சாரதியின் பெயர் 'சுபுன்'. சந்திரசிறியைப் பார்க்கும்போதே பாமரனெனத் தெரிகிறது. ஆனாலும் அவரினுள்ளே பெரும் தைரியமொன்று இருக்கிறது. அவ்வாறில்லையெனில் தனக்கு நிகழ்ந்த அநீதியொன்றுக்கு நீதி வேண்டி இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வாறு எல்லோராலும் இயலுமா என்பதே கேள்வி.

    காலத்தோடு இந்த அசம்பாவிதங்கள் மறக்கடிக்கப்படலாம். ஆனால் அநீதமாக துயரிழைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இதனை எவ்வாறு இலகுவில் மறந்துவிட இயலும்? இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசு உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்காது விடின், பொலிஸுக்குச் செல்வதென்பது தனது கல்லறைக்குத் தானே நடந்து செல்வதற்கு ஒப்பாகும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் பொதுமக்களிடம் தொடரும்.

    இலங்கையில் காவல்துறை எனப்படுவது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு இடமாகவும், அங்கு நீதியைக் காப்பதற்குப் பதிலாக, மரணத்தைத் தேடித் தருமிடமாகவும் மக்கள் மனதில் ஆழப் பதிந்தாயிற்று. லத்திக் கம்போடு மட்டும் நின்று விட்டிருந்த பொலிஸ், ஈழக் கலவரத்துக்குப் பிறகு துப்பாக்கியாலும் தண்டனை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். பொலிஸுக்கு எதிராக யாரும் விரல்நீட்டத் தயங்குவதாலேயே கைது செய்து அழைத்துச் செல்லப்படும் சந்தேகநபர்கள் எல்லோருக்கும் சித்திரவதையும், அடி, உதையும் தாராளமாகக் கிடைக்கிறது. கைது செய்யப்படும் நபருக்கு அடிப்பதென்பது நீதிக்கு மாற்றமானதென வாதம் புரிவது இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் நகைச்சுவையாக உருமாறியுள்ளது. பொலிஸ் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகள் கொல்லப்படுவதென்பது திகைப்பளிக்கக் கூடிய  ஒன்றாகவும் இங்கு இல்லை. சிக்கல் என்னவெனில், காவல்துறையின் நாளைய பலி நீங்களா, நானா என்பது மட்டுமே.

(தகவல் உதவி - டிரன்குமார பங்ககம ஆரச்சி)

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
21.06.2010



நன்றி
# காலச்சுவடு இதழ் 129, செப்டம்பர் 2010 
# KKY NEWS

Tuesday, September 7, 2010

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் !

    நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம். 'எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது' என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல்தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.

    ரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். "நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது. புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை". இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது.

    உண்மைதான். இக் காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும்தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள், நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெறுமதியானதாகவும் வாங்கி உடுத்து, அவற்றின் பெருமையைப் பீற்றிக் கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும், பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டுவிடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.

    'பெறுமதியானதை வாங்கிவிட்டேன்.ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது.' என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்? நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை..ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை..அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலுமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன? உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா?

    நமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும், தோட்டவேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக் காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை. ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.

    மறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.

    முதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்துவிடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்கப்படவேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்துவிடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கிவிடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும், கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரீகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.

    ஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் காலநிலைக்கும் அவை ஒத்துவருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள். பிரமாண்டமான கடைகளிலுள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே  நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.

    இன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களை படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துகொள்ளுங்கள்.

    வளர்ந்துவரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துக்களை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவிலுள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

    இவ்வாறாக பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றை பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு? அவற்றைக் கழுவி, அலுமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா? எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக் கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவுபெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும்? தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்?

    ரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலுமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும். ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டனவென்று மூலையில் போட்டுவைத்திருக்கும் சப்பாத்துக்கள், கல்லும், முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்கு கொடுத்துதவுவது உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
"ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!" என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி - 1897)


    ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகமதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவமன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

    இது ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்துவையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும்போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப் படுத்துங்கள். குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந் நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகிவிடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும். சிந்திப்போம் சகோதரர்களே!

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

# அல்ஹசனாத் மாத இதழ் - செப்டம்பர், 2010
# வல்லமை இதழ்

Tuesday, August 3, 2010

முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிக்கப்பட்ட ஆதித் தீ

கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின. தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன.

எனினும், சிங்கக் கொடியசைந்த அந்த வெற்றிக் கணத்தில் மகிழ்ந்து, எழுத மறந்த கதையொன்றும் உள்ளது. முத்தையா முரளிதரனின் இவ் வெற்றிக் களிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக மரண பயமும், கண்ணீரும், இழப்பும் மட்டுமே அவருக்கென எஞ்சியிருந்த நாட்களும் இதே போன்றதொரு ஜூலை மாதத்திலேயே வந்தன. சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு ஓர் நாள், சிங்கக் கொடியை அசைத்தபடி கூக்குரலிட்ட ஒரு கும்பல், கண்டி, நத்தரம்பொத, குண்டசாலையில் அமைந்திருக்கும் முத்தையா முரளிதரனின் வீட்டைச் சூழ்ந்தது. முரளியின் தந்தைக்குச் சொந்தமான தொழிற்சாலை அக் கும்பல் வைத்த தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது. அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?

இறுதியாக முத்தையா முரளிதரன் சாதனையை நிலைநாட்டியது 2010, ஜூலை 22. அன்று முரளிதரனின் இருப்பிடங்களைச் சேதப்படுத்திய நெருப்பெரிந்தது 1983, ஜூலை 23. எரித்துக் கருக்கியபடி தொடர்ந்து சென்ற அந்த ஊழித் தீ எத்தனை முரளிதரன்களைப் பழி கொண்டிருக்குமென்று அறிந்துகொள்ளும் வழி கூட எப்பொழுதுமே எமக்குக் கிடைத்ததில்லை. 1983 கறுப்பு ஜூலைக்கு இப்பொழுது வயது இருபத்தேழு.

இரத்தக் கறை படிந்த ஆதி வரலாற்றின் பக்கங்களை இன்று மீளப்புரட்டுவது எதனாலென உங்களில் சிலர் சிலவேளை எண்ணக் கூடும். ஆனாலும், இலகுவாக மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கிடையில் சிக்கியிருக்கும் இருள் சூழ்ந்த வரலாற்றின் நினைவுகளை இதுபோல இலகுவாக ஒளித்துவைக்க ஒருபோதும் முடியாது. கறுப்பு ஜூலை - காலத்தால் அழிக்கப்பட முடியாத, இருள் சூழ்ந்த வரலாற்றில் தேங்கியிருக்கும் நினைவுகளிலொன்று. அந்தத் தீயிலிருந்து தப்பி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளங்களிலும், அந்த இருள் சூழ்ந்த நாட்களில் நெருப்பில் மறைந்துபோனவர்கள் குறித்து கைவிட முடியாத துக்கத்தைச் சுமந்தலையும் உள்ளங்களிலும் மட்டுமே அது நினைவுகளாகத் தேங்கியிருக்கிறது .

அறிவும், தொடர்ந்து வந்த சகோதரத்துவமும் குறித்த எங்கள் தேசத்துப் பாரம்பரியக் கீதங்கள் இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு இருளாய் வந்த கறுப்பு ஜூலைக்குள் மறைந்தே போயின. அப்பாவிகளைக் கொன்றொழித்த அந்த மிலேச்சத்தனமான செயல்களைக் கூட வெற்றிக் களிப்போடு செய்த நாட்களவை. தென்னிலங்கையின் வீதிகளில் வீடுகள், கடைகள், வாகனங்கள், சொத்துக்கள் எல்லாவற்றோடும் ஆயிரக்கணக்கில் எரிந்து மாண்டுபோன உயிர்கள், தமது குடியுரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான வன்முறையின் சாட்சிகள்.

அது 'அறிவீனர்கள் சிலரால்' நிகழ்த்தப்பட்ட வன்முறையொன்றெனச் சொல்வதற்கு வளரும் சந்ததி இன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதைக் கேட்டு வளரும் சந்ததியின் இதயங்களில் கேள்வியொன்று உள்ளது. அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்? நாட்டில் பிரசித்தமாக இக் கேள்வியைக் கேட்கமுடியாத போதும் இப்பொழுதும் கூட தட்டிக் கழித்துவிட முடியாத கேள்வியொன்று இது. இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் படிந்த இரத்தக் கறை இன்றும் கூட முழுதாக நீங்கியிருக்கிறதா என்ன?

இன்று கொட்டாஞ்சேனை சாந்த லூசியா தேவாலயத்திலோ, வெள்ளவத்தை இந்துக் கல்லூரி சரஸ்வதி மண்டபத்திலோ, கொள்ளுப்பிட்டிய மெதடிஸ்த தேவாலயத்திலோ கறுப்பு ஜூலைத் தீக்கு தங்கள் உடைமைகளை எரியக் கொடுத்துத் தப்பி வந்து தஞ்சமடைந்தவர்கள் எவரும் இல்லை. அண்மைய வருடங்களைப் போல வடக்கு வீதிகளில், ஒழுங்கைகளில் பிணங்களெரியும் வாடைகளை முகர்ந்தபடி தப்பித்து விரையும் எவரையும் இன்று காண்பதற்கில்லை. எனினும் இச் சரணாலய முகாம்களும் மயான வாசமும் வேறு நிலங்களில் எழுப்பப்பட்டுள்ளன இன்று. தவறிழைத்தவர்கள் பகிரங்கமாக எல்லா சௌபாக்கியங்களுடனும் வாழ, அன்று தொட்டு இன்று வரை தமிழ் பேசும் இனங்கள் மட்டும் இனவாத வன்முறையின் சிலுவையை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் தோள்களில் சுமந்தவாறு ஒழுங்கான இருப்பிடமற்று அச்சத்தோடு அலைய விதிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் உயிர் தப்பிய முத்தையா முரளிதரன் கூட இன்று தேசாபிமானத்தின் ஒரு குறியீடு. எனினும், அவரைப் போல உயிர் தப்பிய இலட்சக்கணக்கான மக்களால் இன்றும் கூட மறந்துவிட முடியாத இந்த ஜூலை மாதத்தில், அந்தத் தேசாபிமானத்துக்கும் குடியுரிமைக்குமான இடைவெளி, மற்ற மாதங்களை விடவும் அதிகமாகத்தான் இருக்கிறது.

(சுமுது திவங்க கமகேயின் கருத்தினை வைத்து எழுதியது)

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com



நன்றி
# உயிர்மை
# திண்ணை
# இனியொரு

Wednesday, June 2, 2010

மீள் குடியமர்த்தல்: மறைந்திருக்கும் உண்மைகள்

    "கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக் கொள்ளப் பழக்கப்பட்டுப் போயுள்ளனர்.

    இது இப்படியிருக்க, 'ஷெல் விழுந்தபொழுது நாங்கள் அன்றே செத்துப் போயிருந்தால் இதை விடவும் நன்றாக இருந்திருக்கும்' என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள். 1.5 லீற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும், அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணைய் வழங்கப்படுவதோடு ஒரு கிழமையின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத்தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை.

    ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள்,  மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்தலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்பொழுது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இரு மடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இம் மக்களினது விருப்புவாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதிமக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பமே வழங்கப்படவில்லையென்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

    இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தினைக் கொண்டும், அரச வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தினைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள்.

    வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியை சமீபத்தில்தான் இம் முகாம் வாசிகளுக்கு வழங்கியுள்ளது அரசு. அதுவும் கூட அதிகபட்சமாக இரு மாதங்களுக்கு மட்டும்தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொரு முறை முகாமுக்கு சமூகமளித்து, வெளியே சென்று வேலை பார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபை பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவு முறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய் சந்திக்க இருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும்.  அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும் கூடக் குறிப்பிட வேண்டும்.

    முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள் கூட அதி நவீன பார்கோட் இலச்சினைகளுடனானவையாக இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியுடைய அனைத்துத் தகவல்களும் அடங்கப் பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள் கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை.


    முகாம்வாசிகளுக்கு தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பி விட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது சம்பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால் கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றி கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இரு புறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ, கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி மக்கள்.

    "நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால் கூட காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம்."

    தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையைக் கொண்டு சென்ற இம் மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய்  விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்கு பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமைகளை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக் கொள்கின்றனர். தற்பொழுது வவுனியாவிலும் தற்காலிக தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்து போயிருக்கிறது.

    குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காக சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக் கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்த போதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள்.

    மீள் குடியேற்றம் என்ற பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக் கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்த போதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள் குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான்.

    இந்தக் கொத்தடிமை முள் வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம் முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும், முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை.

"இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டு செத்துப் போனார்கள். எப்படியாவது உயிர் பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடி வந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்பொழுது தோன்றுகிறது" அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 124, ஏப்ரல் 2010
# Global Tamil News
# வியப்பு 
# இனியொரு

Sunday, May 2, 2010

இலங்கை - வறுமையும், புனித வேடமணியும் கோமாளிகளும்!

    "...... ஒரு திரைப்படத்தில், தொலைக்காட்சி நாடகமொன்றில் அல்லது வேறு பிரிவில் பிரதானமானவர்களாக இருப்பதால் மட்டுமே அவர்கள் அரசியலுக்கும் பொருத்தமானவர்களாவது எப்படி என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியவர்கள், குற்றவாளிகள், சூதாட்ட விடுதிகளை நடத்தி வருபவர்கள் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கின்றனர். அவர்கள் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து தங்களது விம்பங்களை உயர்த்திக் காட்டச் செய்யும் முயற்சிகளை மதில்கள், மின்கம்பங்களைப் பார்க்கும்போது தெளிவாகிறது. இவ்வாறானவர்களை பொதுமக்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது எங்கள் மத்தியிலிருக்கும் இன்னுமொரு பிரச்சினை" - பேராசிரியர் மயுர சமரகோன்.

    இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் முடிவடைந்து, இன்னுமொரு டெஸ்ட் ஆட்டம் தொடங்கியிருக்கின்றது. 20-20 ஆட்டத்தில் தவறான மத்தியஸ்தம், வன்முறைகளெனப் பல விமர்சனங்கள் உலக பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தாலும், விறுவிறுப்பாக இருந்தது ஆட்டம். அதற்குப் பிறகு ஆடப்படப் போகும் டெஸ்ட் ஆட்டமோ மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகவே தோன்றுகிறது. உலக நாடுகளைக் கூட இந்த ஆட்டம் அவ்வளவாக ஈர்த்துக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும் ஏப்ரல் எட்டாம் திகதி இந்த ஆட்டத்தின் முடிவு தெரியவரும். அன்றுதான் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்.

இம் முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக தெருவிலிறங்கி வாக்குக் கேட்டுத் திரிந்த பல நடிக, நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல் முன்னனுபவமோ, சேவை மனப்பான்மையோ சிறிதும் தென்படாத இவர்களின் மேடைப் பேச்சுக்கள் மூலைக்கு மூலை பொதுமக்களை நகைக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவர்களைக் குறித்த 'பொதுமக்களுக்காகவே வாழும்', 'பொதுமக்களுக்காகவே சிந்திக்கும்' போன்ற அப்பட்டமான பொய் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளைக் கழுதைகள் கூடச் சீண்டாது. சினிமா கவர்ச்சி ஆட்டத்திலும் கிரிக்கெட் ஆட்டத்திலும் பொதுமக்களுக்காக என்ன வாழ்ந்தார்களோ, பொதுமக்களை என்ன சிந்திக்கச் செய்தார்களோ?

அந்த ஆட்டங்களின் மூலம் பல கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டு, இப்பொழுது ஓய்வெடுக்கும் வயதில் 'சும்மா' இருக்கப் பிடிக்காமல் ஒரேயடியாக அரசியலில் குதித்து, வென்று அதன் பிறகு 'சும்மா' இருக்கலாமெனத் தீர்மானித்திருக்கிறார்கள் போல.

    இவர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் சமூகத்தின் கலாச்சாரக் காவலர்களாக மாறி, நாட்டின் தேசிய உடை அணிந்துகொள்கிறார்கள். தோளில் துண்டு, முகத்தில் மீசை, உதடுகளில் எப்பொழுதுமொரு புன்சிரிப்பு என வளைய வருகிறார்கள். தெருவில் காணும் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுகிறார்கள். மதத் தலைவர்களைச் சென்று பார்த்து காலில் விழுகிறார்கள். இவ்வாறாக, பொதுமக்களின் வாக்குவேட்டைக்காக இவர்கள் செய்யும் கோமாளித்தனமும் மாறுவேடமும் இவர்களது ஆட்டங்களை விடவும் சிலவேளைகளில் ரசிக்கச் செய்கிறது.

    எவ்வாறாயினும் இந்தத் தேர்தலின் காரணத்தால் இலங்கையில் தற்பொழுது அமைதியான ஒரு அந்தி நேரம் போன்ற ஒரு மந்த நிலை நிலவுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்த விலையேற்றம் குறையவில்லை எனினும் அதே போல மீண்டும் அதிகரிக்கவும் இல்லை. எந்த வற்புறுத்தல்களின் காரணமோ ஊடகங்களில் வெளியிடப்படும் வன்முறைகள் குறித்த செய்திகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அமைச்சர்களிடம் கையளிக்கப்படும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, அமைச்சர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாம் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரைதான். எனினும் அதுவரை இந்த 'நரக வாழ்வின் இடைவேளை' மக்களுக்கு சற்று அமைதியளிக்கத்தான் செய்கிறது. 

    ஏப்ரல் எட்டாம் திகதிக்குப் பின்னர் இந்த இடைவேளை முடிவுக்கு வரும். அதன்பிறகு உண்மையான வாழ்வின் நெருக்கடிகள் மீண்டும் தலைகாட்டத் தொடங்கும். ஏற்கெனவே இலங்கையில் தனிநபர் செலவு வீதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் நாட்டில் அதிகளவான மக்கள் வறுமையிலும், பொருளாதார, வாழ்க்கை வசதிகளின் மந்த நிலையிலும் வாட வேண்டியிருக்கிறது. இனி, தேர்தல் காரணமாக நிலவும் தற்போதைய அமைதி நிலையை இனி எப்பொழுதும் இப்படித்தானென நம்பி உறங்கிக் கொண்டிருப்பவர்கள் தூக்கத்திலிருந்து விழிக்க வேண்டியிருக்கும்.

    தற்போதைய இலங்கையில் சராசரி தனி நபர் வருமான வீதம் $2000 என அமைச்சர்கள் சொல்லிச் சொல்லிக் குதூகலிக்கிறார்கள். இதைக் கேட்டு தாங்கள் வாழ்வது உலகத்திலேயே உன்னதமான ஒரு தேசத்திலென கனவுலகில் மிதக்கும் பொதுமக்கள் வாக்குகளை முன்னின்று அளிப்பார்கள். நாட்டில் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது. ஊதிய அதிகரிப்பு என்ற ஒன்று இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நிலையான வருமானம் இல்லை. ஒரு தேங்காய் முப்பத்தைந்து ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் அரிசி நூற்றி முப்பது ரூபாவுக்கும் விற்கப்படும் ஒரு நாட்டில் இந்த வருமானம் எப்படிப் போதுமானதாகும்? சீனி, தேயிலை, பால்மா, கிழங்குவகைகள், பருப்பு, சமையல் பொருட்கள் என அனைத்தின் விலையுமே நூறு ரூபாய்த் தாள்களைக் கொடுக்கும்போது மட்டுமே வாங்கக் கூடியதாக இருக்கும்போது ஒரு சராசரி பொதுமகனால் இவற்றை வாங்கமுடியாத நிலையும், பட்டினியில் நாட்களைக் கழிக்கவேண்டிய நிலையுமே இன்று உருவாகியுள்ளது. பெற்றோர்களால், குழந்தைகளுக்கு உண்ணக் குடிக்கக் கொடுக்க வழியில்லை.
    அண்மையில் ஒரு தாய் தனது மூன்று வயதைச் சமீபிக்கும் குழந்தையை களுத்துறை பெரிய பௌத்த விகாரை அருகே பெருக்கெடுத்தோடும் களு கங்கையில் மிதக்க விட்டுச் சென்றார். குழந்தையொன்று நீரில் மிதந்துவரும் காட்சியை கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர், புத்தரை வழிபட வந்திருந்த பக்தர்கள் எனப் பலரும் குழந்தையின் துடிப்பை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க, அந்த வழியால் சென்ற ஒரு லாரி சாரதி, உடனே ஆற்றில் குதித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். அந்தச் சாரதி ஒரு கிறிஸ்துவர். மனிதாபிமானத்துக்கு இனமோ, மதமோ, மொழியோ எதுவுமே தடையாக இருக்காது என்பதற்கொரு உதாரணமாகக் கொள்ளப்படக் கூடியவர். அந்தத் தாய்க்கு முப்பது வயது. இந்தக் குழந்தையுடன் சேர்த்து மொத்தமாக ஐந்து குழந்தைகள் வேறு. மிதந்து சென்ற குழந்தை காப்பாற்றப்பட்டது. தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை ஆற்றில் விட நேர்ந்தமைக்கான காரணத்தை அத் தாய் அழுதழுது சொல்கிறார். 'வறுமை. உணவுக்கு வழியில்லை'.

    கணவன் மதுபோதைக்கு அடிமையான பிறகு, தனது பட்டினியைக் கண்டுகொள்ளாமல் தெருவில் யாசித்து, இதுகால வரையிலும், அந்தக் குழந்தையை ஆற்றில் விடப் போகும் கணத்துக்கு முன்பும் கூட அந்தக் குழந்தையின் பசி போக்க உணவூட்டியது அந்தத் தாயன்றி வேறு யார்? நீதிமன்றமா? அந்தத் தாயை சிறைக்கனுப்பி, எல்லாக் குழந்தைகளையும் அனாதை விடுதிகளுக்கு அனுப்பிவைக்க முன்னின்ற சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம், இவ்வளவு காலமாக அந்தத் தாயை, குழந்தைகளை தெருவில் யாசகர்களாகக் கண்டபோதெல்லாம் எங்கே இருந்தது? இதுபோன்ற நிர்க்கதி நிலையிலிருக்கும் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவென்றே அரசு சம்பளம் கொடுத்து நியமித்திருக்கும் உத்தியோகத்தர்களும், ஒவ்வொரு பொதுமகனுக்காகவும் தான் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தேசத் தந்தையும், எங்கே போயிருந்தார்கள்?

    இந்தப் பெண், சுனாமியால் இடம்பெயர்ந்து ஒரு கூடாரமமைத்துத் தன் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கடந்த காலங்களில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகையாக வந்த பல கோடி ரூபாய் பணத்தில், சுனாமியால் சிறிதும் பாதிக்கப்படாத அமைச்சர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டபோது இந்தத் தாய்க்கு மட்டும் எந்த உதவியும் கிட்டாமல் போனது எதனால்? குழந்தையை வளர்க்க முடியாமல் ஆற்றில் விடுவது குற்றம்தான். ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டியதில் வறுமைக்கும், மேற்சொன்ன அனைவருக்கும் பங்கு இருக்கும்போது இவர்கள் எல்லோருமே தண்டிக்கப்படுவதுதானே நியாயம்?

    குழந்தையை விட்ட ஆற்றின் கரையிலேயே விலைமதிப்பு மிக்க பெரிய பெரிய கட்அவுட், சுவரொட்டி, பதாதைகளில் அமைச்சர்கள் சிரிக்கிறார்கள். அந்த பௌத்த விகாரையின் உண்டியலை தங்களது வெற்றிக்காக வேண்டி பணக்கற்றைகளால் நிறைக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களது விளம்பரங்களுக்காகச் செலவழிக்கும் பணத்தில் இது போன்ற இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் பசியாற்ற முடியும். ஆனால் செய்வார்களில்லை. விளம்பரப் புகைப்படங்களில் மட்டும்தான் தெருக் குழந்தைகளைத் தூக்கிக் கொள்வதுவும், அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக எச்சில் தெறிக்க உரையாற்றுவதுவும் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் இலங்கை மக்கள் இன்னும் நெருக்கடிக்குள்ளாவது மட்டும் நிச்சயம். என்ன செய்வது? இலங்கை பல ஆறுகளைக் கொண்ட நாடு. எல்லாமும் கண்ணீரால் நிரம்பியோடுகிறது, இனி குழந்தைகளாலும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com


நன்றி

# வடக்குவாசல் இதழ் - ஏப்ரல், 2010






Monday, April 5, 2010

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

    நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப் பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பின், உங்களுக்குப் பிடித்த இடத்தைச் சொல்லி அங்கு உங்களால் மாறிக் கொள்ளலாம். அல்லது வேறு இடத்துக்கு மாறிக் கொள்வதற்காக வேண்டியே கூட ஆள் கொலை செய்யலாம்.

    இலங்கை, இக்கினியாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவல பிரதேசத்தில் வசித்துவந்த ஏழை இளைஞன் ஏ.ஆர்.சமன் திலகசிறி செய்த குற்றமென்ன என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. எனினும் கடந்த பெப்ரவரி 21ம் திகதி ஞாயிறு இரவு ஒன்பது மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் மூவர் அவரைத் தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். அவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வந்தவுடனே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரும்படி அவரது மனைவியை மிரட்டிச் சென்ற பொலிஸார் இடைவழியில் அவரது நண்பரது வீட்டுக்குள் நுழைந்தனர். சமன் அங்கிருந்தார்.

    "கொல்லப்பட்ட சமனும், நானும், இன்னுமொரு நண்பர் சந்தனவும் எனது வீட்டில் இருந்தோம். அப்பொழுது இரவு நேரம் ஒன்பது மணியிருக்கும். மோட்டார் சைக்கிளில் மூவர் வந்து சமனை அழைத்தனர். சமன் எழுந்து முன்னால் வந்தான். 'உடனே வா, உன்னிடம் வாக்குமூலமொன்று எடுக்கவேண்டும்..பொலிஸுக்குப் போகலாம்' என்று அவர்கள் கூறினர். 'நான்தான் குற்றமெதுவும் செய்யவில்லையே. சரி நான் இவர்களுடன் போய்வருகிறேன்' என்று சொல்லி அவன் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களுடன் ஏறிக் கொண்டான். அவர்கள் சென்ற உடனேயே நாங்களும் பொலிஸ் நிலையம் போனோம். செல்லும் வழியில் இக்கினியாகலை நீர்த் தேக்கத்துக்கருகில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் யாரும் இருக்கவில்லை. நாங்கள் இருளில் தேடமுடியாமல் நேராக பொலிஸ் நிலையம் சென்றோம். அங்கு போய் சமனைப் பற்றி விசாரித்ததும் எந்தப் பதிலுமில்லை. நிலையத்துக்குள் குழப்பமான ஒரு சூழ்நிலை. சமன் இருக்கவில்லை. காலையில் சமனின் உடல் நீரில் மிதந்தது." இது சமனின் தோழன் எல்.டீ.சந்திரசேனவின் வாக்குமூலம்.

    காவல்துறையினர், சமனை எந்தக் குற்றத்துக்காக அழைத்துச் சென்றார்கள் என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லையெனினும், அவரது உயிரைப் பறித்தெடுக்கவே அழைத்துப் போயிருப்பது மட்டும் நிதர்சனம். அவரைக் கொல்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்திருப்பது, பொலிஸ் நிலையத்துக்குக் கூட அவரைக் கொண்டுசெல்லாமல் இடைவழியில் கொன்றுபோட்டிருப்பதன் மூலம் தெளிவாகிறது. இதன் மூலம் தெளிவாகும் இன்னுமொரு விடயம், பொதுமக்களை அடிக்க, வதைக்க, கொலைசெய்து குவிக்க காவல்துறைக்கு 'லைசன்ஸ்' இருக்கிறது என்பதுதான்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மரணமான பின்பு, வழமையாக நடப்பது போலவே இங்கும் நடந்திருக்கிறது. அதாவது இக்கினியாகலை பொலிஸ் நிலைய உயரதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட மூன்று காவல்துறையினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை அதிகாரி அனில் ஆரியவங்ஸ, 'இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனச் சொல்லியிருக்கிறார்.

    காவல்துறையினரின் இதுபோன்ற பதில்களைக் கேட்டு பொதுமக்கள் உடலின் எப்பாகத்தால் நகைப்பதெனப் புரியாமலிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் காவல்துறைக்கு புதிதில்லை. அத்தோடு இது போன்ற மழுப்பலான பதில்களைச் சொல்லித் தப்பித்துக் கொள்வதுவும் இது முதன்முறையில்லை. இலங்கை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் இயக்குனரின் மகன், தனது பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட காவல் அதிகாரிகளின் குழுவோடு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, நிபுண ராமநாயக்க எனும் மாணவனைக் கடத்திச் சென்று மிகக் குரூரமான முறையில் சித்திரவதைப்படுத்தியதுவும், பல நூறு மக்கள் பார்த்திருக்க பம்பலப்பிட்டிய கடற்கரையில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை அடித்துக் கொன்றதுவும் சமீப கால முறைப்பாடுகளாகக் கிடைத்தபோதிலும் எந்தவொரு நியாயமான தீர்ப்பும் இன்னும் வழங்கப்படவில்லை.

    இலங்கையில் யாருக்கு எந்த சட்டம் செல்லுபடியாகினும், காவல்துறைக்கு மட்டும் எந்த சட்டமும் இல்லை. சுருக்கமாக காவல்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் சந்தேகநபரொருவர் இறந்துபோய்விட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுதலென்பது, சாதாரணப் பொதுமகனொருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போலவன்று. பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து மற்றும் பொலிஸாரால் நிகழும் கொலை, வன்முறைகள் சம்பந்தமாக ஒரு காவல்துறை அதிகாரியேனும் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இதுவரை கைதாகியதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டதுமில்லை. சமனின் மரணத்தில் கூட சம்பந்தப்பட்டவர்களது பணிநிறுத்தம் செய்யப்படும். அவ்வளவே.

    சாதாரணமாக ஒரு கொலை நிகழ்ந்தவிடத்து உடனே செயல்படும் காவல்துறை, சந்தேகத்துக்குரியவர்கள் அனைவரையும் கைது செய்யும். வாக்குமூலம் பெற்று அதைக் குறித்துக் கொண்டு கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும். நீதிமன்றம் அவர்களை குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் சிறையிலடைக்கும். இதையெல்லாம் செய்யும் காவல்துறையே ஒரு கொலை செய்யுமிடத்து மேற்குறிப்பிட்ட எதுவும் நடைபெறாது.

    உண்மையில் சமனுக்கு என்ன நடந்ததென்று அறிந்தவர்கள் அவரைக் கொண்டுசென்ற மூவரும்தான். அவர்கள் பொலிஸ்காரர்கள். இப்பொழுதிருக்கும் வேறு சாட்சிகளெனில் சமனுடன் இருந்த மற்ற நண்பர்கள் இருவர். அவர்களுக்குக் கூட, வரும் நாட்களில் சாட்சி சொல்லவேண்டியிருப்பது காவல்துறையினருக்கு எதிராகத்தான். அது இலங்கையைப் பொருத்தவரையில் எளிதான விடயமில்லை. ஆகவே இவர்கள் கூட எதிர்காலத்தில் ஏதாவதொரு காரணத்துக்காக கைது செய்யப்பட இடமிருக்கிறது.

    எப்பொழுதும் காவல்துறையினரது கைதுக்குப் பிற்பாடு மரணித்த பலரதும் விபரங்கள் வெளிவருவதை விடவும், வராமலிருப்பது பொதுவானதுதான். இக்கினியாகலை சமனினது கொலை விபரங்களும், இது கால வரையில் நிகழ்ந்த காவல்துறை படுகொலைகளைப் போலவே காலத்தோடு அழிந்துபோகும். ஆனால் வாழ்நாள் முழுவதற்குமாக துயரப்பட வேண்டியிருப்பது சமனையே நம்பியிருந்த அவரது குடும்பமும், அப்பாவி மனைவியும், சிறு குழந்தையும்தான். அந்தத் துயரத்திலும் சிறிதளவாவது அமைதி கிடைப்பது கொலைகாரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்போதுதான். அது சாத்தியமற்றுப் போகும்போது நாட்டின் ஒவ்வொரு மனிதனினதும் ஐக்கியத்துக்காகவும், நிம்மதியான வாழ்வுக்காகவும் பாடுபடுவதாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் அரசும் இதற்குத் துணை போவதாகத்தான் கொள்ள வேண்டும்.

    காவல்துறைப்படுகொலைகள் உலகளாவிய ரீதியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைது செய்யப்படும் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் குறித்து எழுதப்போனால் இந்தக் கட்டுரை போதாது. இது போன்ற நாடுகளாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என சொல்லிக் கொண்டே போகலாம். உலகின் அநேக நாடுகளில் காவல்துறையினர் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். முரட்டு சீருடை. முரட்டு நடை. முரட்டு நடவடிக்கை. முரட்டு இதயங்கள். இந்த நிலையில் 'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் வாசகங்கள் பாடப்புத்தகங்களிலும் சில முட்டுச் சுவர்களிலும் மட்டுமே தெளிவாக எழுதப்பட்டிருக்கிறதே தவிர பொதுமக்களது மனங்களிலல்ல.

பின்குறிப்பு - 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த கொலை சந்தேகநபர்கள் இன்னும் கைதுசெய்யப்படாதது குறித்த முன்னைய கட்டுரைக்குப் பின்னர், உடனடியாக துப்பறியும் துறை, விசாரணைகளை நடத்திவருவதோடு, ஒரு ஆட்டோ சாரதி உட்பட 15 இராணுவக் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து விசாரித்துவருகிறது. அத்தோடு விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கல்கிசை பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ஷ சேதுங்க குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
05.03.2010



நன்றி
# உயிர்மை