Thursday, June 2, 2011

ரஜினி, கனிமொழி மற்றும் சின்னக் குத்தூசி

             கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும் மிக முக்கியமான இரு நபர்கள் குறித்த உரையாடல்களைத்தான் காணக் கிடைக்கின்றன. தினம் தினம் விதம் விதமாகக் காணக் கிடைத்ததால் ஒரு கட்டத்தில் அச் செய்திகள் அலுத்து விட்டன. அண்ணாச்சி, ஜீவஜோதி, நித்யானந்தா, ரஞ்சிதா போல அண்மைய காலத்தில் உலகத் தமிழர் உரையாடல்களை ஆக்கிரமித்துக் கொண்ட இரு இந்திய ஜோடிகள் ரஜினிகாந்த் மற்றும் கனிமொழி.

                 இருவருமே பிரபலங்கள். இருவர் குறித்தும் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவர் மருத்துவமனையிலும் மற்றவர் திஹார் சிறைச்சாலையிலும் சிறைப்பட்டிருக்கிறார்கள். இருவர் குறித்தும் உரையாட, சமூகத்தில் பல விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் ஊடகங்களும் கலந்துரையாடல்களும் அவர்களது மர்மப் பக்கங்களையே திறக்கப் பார்க்கின்றன. ரஜினியைப் பற்றிப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரது உடல் நலப் பிரார்த்தனைகளே அதிகமதிகம் சமூக இணையத் தளங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் கனிமொழி பற்றிய உரையாடல்களும், விவாதங்களும், 'அவர் ஒரு பெண்' என்ற அர்த்தமும், அடிப்படைக் காழ்ப்புணர்ச்சியும் மிகைத்த கருத்துப் பரிமாற்றங்களாகவே இருக்கின்றன.

           ஜெயலலிதாவின் வெற்றியை இலங்கை அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே இலங்கைத் தமிழ் மக்களின் இன்னல்களைத் தீர்ப்பேன் எனவும், கச்சதீவினை எப்பாடு பட்டேனும் பெற்றுத் தருவேன் எனவும் ஜெயலலிதா வழங்கிய வாக்குறுதிகளோடு தொடர்ந்த ஜெயலலிதாவின் வெற்றியானது இலங்கை அரசினைப் பெரிதும் அச்சுறுத்தியபடியே இருக்கிறது. முகத்துக்கு நேராகப் புன்னகைத்தபடியே தான் செய்துவரும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் படைத்தவராக, ஓர் நாள் முன்னே வந்து நிற்பார் என ஜெயலலிதா குறித்து, மஹிந்த ஒரு போதும் எண்ணியிருந்திருக்க மாட்டார் எனத் தெரிகிறது.

              யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இந்திய அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் அவசியமாக இருந்ததெனவும், பொது மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய அரசாங்கம் நன்கு அறிந்திருந்ததென்றும் தான் நம்புவதாக ஐ.நா.சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் திரு. கோர்டன் வைஸ் இப்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லவேளை, அக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலில்லை. அதுவே ஈழ யுத்தம் குறித்து கருணாநிதி ஆட்சியின் மீது ஜெயலலிதா பல குற்றச் சாட்டுக்களை தைரியமாக முன்வைக்கக் காரணம் எனவும் கூறலாம். அக் குற்றச் சாட்டுக்களும், அதற்கான தீர்வுகளென்ற சூளுரைகளும், பெண்களுக்கான தங்கப் புதையல் மற்றும் இன்ன  பிற வாக்குறுதிகளும்தான் அவரை வெற்றியின் பக்கம் இழுத்துச் செல்லக் காரணங்களாக இருக்கக் கூடும். எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, எத்தனை வாக்குறுதிகள் மறக்கடிக்கப்படுகின்றன என இனி பொறுத்திருந்து பார்க்கலாம்.

                ஜெயலலிதாவின் வெற்றியோடு எழுந்திருக்கிறது கனிமொழியின் தோல்வி. அவருடனேயே போய் சிறைக்குள்ளும் எட்டிப் பார்க்கின்றன ஊடகங்கள். அவரது சிறையறை எப்படியிருக்கும் என்ற ஊகத்தோடு, நேரடியாகப் பார்த்த அறிவிப்புக்களும் தவறாது இடம்பெறுகின்றன. பதினைந்துக்குப் பத்து அடி அளவேயான அறையானது மூன்று பக்கங்கள் சுவராலும் ஒரு பக்கம் கம்பிகளாலும் ஆனதென பிரபலமான ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. எழுதியவரை அழைத்து 'ராசா அப்படியிருந்தால்தான் அது சிறை' எனத் தெளிவுபடுத்த வேண்டும் போலிருக்கிறது. பழங்கால வடிவத்துக் கழிப்பறையும் அதே அறையில் அமைந்திருந்ததாக அதே ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 'அவ்வாறான கழிப்பறைகளைத் தன் வாழ்நாளில் பயன்படுத்தியிருப்பாரா கனிமொழி?' என்ற 'முக்கியமான' விவாதம் சமூக இணையத்தளங்களில் இடம்பெறுகின்றன. குற்றம் புரிந்திருப்பினும், அவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர் என்ற உண்மையை எளிதாக மறந்துவிடுகின்றனர் வாதங்களில் பங்கெடுப்பவர்கள்.

பெண்கள், அதிலும் பிரபலமான பெண்கள் பொது வாழ்க்கையில் ஏதேனுமொன்றைச் செய்துவிடுகையில் அவர்கள் குறித்த, மட்டமான கருத்துக்கள் பரவுவது இன்று, நேற்று நிகழ்ந்ததில்லை. அக் காலத்திலும் நடந்தவைதான். ஆனால் நாம் இன்னும் அக் காலத்தில்தான் இருக்கிறோமா? திரைப்படங்களில் நடிக்கும் பெண்கள் திரையில் அழும்போது சேர்ந்து துடிக்கும் சமூகத்திடம், பொதுவெளியில் அவர்கள் குறித்தான பார்வை இன்னும் ஒரு நிலையைத் தாண்டி உயரவில்லை. பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கப் பழக்கப்படுத்தும் விளம்பரங்கள் சாலை முனைகளிலும், வீட்டுக் கூடங்களிலும், வெள்ளித் திரைகளிலும், ஊடகங்களிலும் இப்பொழுதும் கூட அதிகளவு மின்னிக் கொண்டிருக்கையில் இளஞ் சமுதாயத்தினரிடம் பெண்கள் குறித்தான பார்வை உயர்ந்திருக்குமென எண்ணுவது கூடப் பிழையானது. சிறையில் கனிமொழிக்கு மூக்குத்தி மறுக்கப்படுதலும், முப்பது அடி உயரத்தில் மின்விசிறி பொருத்தப்பட்டிருப்பதுவும் கூட கிண்டல் உரையாடல்களுக்கான கருப்பொருள்களாக இணையத்தளங்களில் வலம் வருகின்றன.

                இச் சிறை வாழ்க்கை, ஒரு வகையில் கனிமொழிக்குக் கிடைத்த ஓய்வு எனச் சொல்லலாம். தேர்தல் காலங்களில் அலைய நேர்ந்த உடல் மற்றும் மன உளைச்சலைக் குணப்படுத்தும் ஒரு ஓய்வாக இதை அவர் ஏற்றுக் கொள்ளலாம். புத்தகங்கள் வாசிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. 'கண்காணாத தீவொன்றுக்கு சிறை செல்ல நேரிட்டால் என்ன புத்தகங்களைக் கொண்டு செல்வீர்?' என உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான அமினாட்டா ஃபோர்னாவிடம் கேட்டபோது, அவர் 'அகராதியைக் கொண்டு செல்வேன்' எனச் சொன்னது போல (நன்றி - 'வியத்தலும் இலமே' அ.முத்துலிங்கம்) கனிமொழியிடம் விசாரித்திருக்கிறார்கள். அவரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இருந்ததாகப் பட்டியலிடுகின்றன ஊடகங்கள்.

            இந்த வகையில் ரஜினிக்கு எந்தத் தொந்தரவுமில்லை. மருத்துவமனை எல்லா வசதிகளோடும் அவரை கணம் கணமாகக் கவனித்துச் சிகிச்சையளிக்கிறது. வைத்தியர்கள் பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள். ரசிகர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். நடிகர் தனுஷ், தனது மனைவியோடு மாமனார் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் சற்று ஆறுதலடைகின்றனர். 'ரஜினி நலம்' என்ற செய்தியோடு அப் புகைப்படம் உலகெங்கும் அனுப்பப்படுகிறது. அடுத்த நாள் செய்திப் பத்திரிகைகளுக்கு முன்பக்கத்தில் வெளியிட புகைப்படத்தோடு ஒரு செய்தி கிடைத்தாயிற்று. பத்திரிகைகள் விற்பனையோடு எல்லாம் நலம். இதே செய்தி சமூக இணையத்தளங்களில் மாற்றி மாற்றிப் பகிரப்படும்போதுதான் பெரும் அலுப்பு தோன்றுகிறது. இதற்காகவே ரஜினி சீக்கிரமே முழுமையாகக் குணமாகி வீடு போனால் நல்லது என்ற எண்ணம் எழுகிறது.

                 இப் பிரபலங்கள் குறித்து இங்கு கவனிக்கவும், விவாதிக்கவும் வேண்டிய விடயமே வேறு. ஒருவர், எங்கோ ஒரு கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்து, இந்திய நட்சத்திரமாக உயர்ந்து, மிகுந்த புகழுக்குரியவராகி, இன்னும் மக்களின் வேண்டுதலில் இருப்பவர். மற்றவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, புகழுக்குரியவராகி, தான் இருந்த உயரத்தினின்றும் வீழ்ந்து இன்று மக்களின் தூற்றுதல்களுக்கு ஆளாகி இருப்பவர். இதற்கான காரணங்களும், திறமைகளும், வெற்றி பெற்றவரின் முயற்சிகளும்தான் விவாதிக்கப்படுகையில் நல்ல கருத்துக்களை எழுப்பக் கூடியன. அதைத் தவிர்த்து கிளம்பும் விவாதங்கள் எதுவும் நல்ல விளைவைப் பெற்றுத் தருதல் சாத்தியமேயில்லை.

                இவ்விருவர் குறித்த செய்திகளால் நிறைந்த இணையத் தளங்களும் வலைப்பூக்களும் பெரிதாகச் சொல்ல மறந்த மறைவுச் செய்தியொன்றும் இருக்கிறது. அது எழுத்தாளர் சின்னக்குத்தூசியின் மறைவு. சின்னக்குத்தூசி, கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட இவரின் சொந்தப் பெயர் இரா.தியாகராஜன். எனினும் வாசகர்களால் 'சின்னக்குத்தூசி' என்றே பெரிதும் அறியப்பட்டவர். ஒரு பிரபலமான அரசியல் எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.

               உண்மையைச் சொல்லப் போனால் சின்னக்குத்தூசியின் எந்தவொரு எழுத்தையுமே நான் வாசித்ததில்லை. நான் வாசித்திருப்பதெல்லாம் ஒரு நேர்காணல். எழுத்தாளர்கள் கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரால் நேர்காணப்பட்டு, காலச்சுவடு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்ட 'உண்மை சார்ந்த உரையாடல்கள்' தொகுப்பிலிருக்கும் சின்னக்குத்தூசியின் நீண்ட நேர்காணல். நேர்த்தியானதும் நேர்மையானதுமான பதில்களால் தன் வசம் ஈர்க்கிறார் சின்னக்குத்தூசி. இதுவே அவர் மீதான அபிமானம் எழக் காரணமாயிற்று. சமூகம், சாதி நிலவரம், மதக் கலவரங்கள், அரசியல், கட்சி நிலைப்பாடுகள், பெருந் தலைவர்களுடன் தனக்கிருந்த உறவு முறை எனப் பலவற்றை வெளிப்படையாக உரையாடியிருக்கிறார் சின்னக்குத்தூசி. இவ்வாறான ஒரு அரசியல் எழுத்தாளரை இழந்தமை தொடர்பில் எவ்விதமான துயரோ, கருத்துப் பகிர்வுகளோ சமூக வலைத்தளங்களில் இல்லை. எல்லாவற்றிலும் நான் மேற்சொன்ன இரு பிரபலங்களும் மட்டும்தான் நிறைந்திருக்கிறார்கள்.

                    ஊடகங்கள் இப்பொழுதும் கனிமொழியின் சிறையருகேயும், ரஜினியின் மருத்துவமனை அறை வாயிலிலும் காத்துக் கொண்டிருக்கக் கூடும். கனிமொழி விடும் சிறு தும்மல் கூட உடனடியாக பெரிய செய்தியாக்கப்பட்டு, இணையத் தளங்களில் பகிரப்பட்டு, அடுத்த கலந்துரையாடலுக்கான தலைப்பாகக் கூடும். நடிகர் தனுஷ் தனது மாமனாரின் புதிய புகைப்படங்களைத் தொடர்ந்தும் ட்விட்டரில் வெளியிடக் கூடும். இவற்றோடு விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு, வேலையின்மை எல்லாவற்றையும் மறந்த சனங்கள் இப் பிரபலங்கள் குறித்த புதிய செய்திகளுக்காக தினந்தோறும் காத்துக் கொண்டிருப்பதுவும் தொடரும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை

13 comments:

ஆதவா said...

நல்ல கட்டுரை!! சிறப்பாக இருக்கிறது தொகுப்பு..
இப்பொழுது இன்னொரு பெயர் அடிபட்டு வருவதைக் கவனித்தீர்களா?
அது தயாநிதிமாறன்.... சண்டிவிக்கு அவர் “உதவியதை” தினமணி கிழித்திருக்கிறது!!

நாடு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.

Ravee said...

பெரியவர் சின்ன குத்தூசியுடன் திருவல்லிகேணியில் மேன்சனில் சிலகாலம் தங்கி இருந்திருக்கிறேன். மிகவும் எளிமையான மனிதர்... அவரும் அவர் சகோதரரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அந்த மேன்சனில் தங்கி இருந்தனர். மிகவும் குறிப்பாக மட்டுமே பேசுவார் ... முன்னாள் முதல்வருக்கு நல்ல நெருக்கம் ஆனாலும் எந்த உரிமையும் வேண்டி பெறாத மனிதர். சில மாதங்களே அவருக்கு அருகில் இருந்திருக்கிறேன் என்றாலும் அதுவும் ஒரு சந்தோசமே....:)

அப்துல் ஜப்பார் said...
This comment has been removed by a blog administrator.
சுவாதி said...

கனிமொழி பெண் தான்; பெண்ணின் அந்தரங்க சேதிகளை ஊடகங்கள் விலாவாரியாக வெளிச்சம்
போட துடிப்பதும் வர்த்தக நிமித்தம் தான்....எல்லாம் சரி தான்..!

ஆனால் இந்தப் பெண்மணி சராசரி பெண்ணாக நடந்து கொள்ளவில்லை; நாட்டின் மிகப்பெரிய
ஊழலில் பங்குதாரி; சமூக சேவகியாகவும், பெண்ணியப் போராளியாகவும் , கவிஞராகவும்
தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு நபர் மறைமுகமாக சொந்த சொத்துக் குவிப்பை
ஊலழ் மூலம் நிரப்பியிருக்கிறார்; அதற்காக அவர் தரகர்களுடன் பேரம் பேசுதல்,
திட்டமிடுதல் நடத்தியிருப்பதும் ஆதாரபூர்வமாக வெளி வந்திருக்கிறது.
இப்பேர்ப்பட்ட ஒரு நபரை பெண் ஆண் என்ற உடற்கூற்று வித்தியாசத்தை வைத்து
பரிதாபம் சம்பாதிக்கவோ, அல்லது மன்னித்துவிடுதலோ வேண்டுமென்றோ சொல்ல
முடியுமா?? ஆணுடனான சம உரிமை கேட்கும் பெண்ணினம் தண்டனை பெறுதலில் மட்டும் ஏன்
குறைந்த பட்ச நிபந்தனையை எதிர்பார்க்க வேண்டும்?? கனிமொழிக்கு பச்சாதாபம்
காட்டப்பட வேண்டுமெனில் இதே ஊழலில் சிறைவாசமிருக்கும் ஆர்.ராசாவிடம் ஏன்
பச்சாதாபம் காட்டக் கூடாது ?? ஆர்.ராசா பினாமியே தவிர சூத்திரதாரியல்லவே??

கனிமொழியின் சிறை வாசம் எப்படியிருக்குமென்று அத்தனை பொதுமக்களும் அறிந்து
கொள்ளத் தான் வேண்டும்; இன்னொரு தடவை மக்களையும் நாட்டையும் சுரண்ட நினைக்கும்
அத்தனை பண முதலைகளுக்கும் , பேராசை பிடித்த அரசியல்வாதிகளுக்கும் எச்சரிக்கை
மணி அடிக்க இவை வெளிவருவதில் தவறே இல்லை;

பெண் என்றும் பாராமல் என்ற பரிதாப வார்த்தைகளை இப்பேற்பட்ட குற்றவாளிகளுக்கு
அனுசரணையாக உபயோகிப்பது மன்னிக்கமுடியாத விசயம்.

பெண் போராளிகள் அங்கங்கள் கூறுபோடப்பட்டு, பகிரங்கமாக நிர்வாணமாக கிடக்கும்
படங்கள், வீடியோக்கள் இணையம் முதல் அத்தனை ஊடகங்களிலும் வந்த போது இந்த ஒப்பீடு
வந்திருக்க வேண்டும்....!

பொதுமக்கள் கண்ட மேனிக்கு நாயைப் போல் சுடப்பட்டு , கொல்லப்பட்டு உடல் சிதறிய
காட்சிகள், சரணடைந்தவர்களை சன்னம் சன்னமாக சித்திரைவதை செய்த ஒளிப்பேழைகள்
ஊடக்ங்கள் முழுவதும் வந்த போது வந்திருக்க வேண்டும் இந்த ஒப்பீடுகள்...!

இத்தனை பெரிய ஊழல் செய்கிறோமே...பிடிபட்டால் எங்கள் கதி எப்படியிருக்குமோ என்ற
பயம் கிஞ்சித்தேனும் இருந்திருந்தால் , இத்தனை கோடி மக்களை ஏமாற்றுகிறோமே என்ற
மனிதாபிமான உணார்விருந்திருந்தால் இந்த மனிதர்கள் இத்தகைய ஊழலுக்குள்
புகுந்திருக்க மாட்டார்கள்..எல்லா தவறுகளையும் பணம் கொண்டு திருத்திவிடலாமென்ற
திமிர் தான் இவர்களை வழிநடத்தியதே தவிர மனிதத்துக்குரிய எந்த அம்சங்களுடனும்
இவர்கள் எப்போதும் நடந்து கொள்ளவில்லை..! மனிதத்துக்குரிய
லட்சணமில்லாதவர்களுக்காக இப்படி மினக்கெட்டு பச்சாதப்படுவது தேவையே
இல்லை...ஒவ்வொருஅரும் தங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள் நீங்கள்
உங்கள் கருத்தை இந்ஹ்டப் பதிவின் மூலம் தெரிவிப்பதைப் போல..அவை இணையத்தை
நிரப்புவதும் எந்த தவறுமில்லை. எல்லா கருத்துகளையும் ஒன்று விடாமல் தேடி தேடி
படிக்காமல் விடால் போதும்...

நான் ரஜனி பற்றிய எந்த செய்தியும் படிப்பதில்லை. ரஜனி என்றில்லை பொதுவாகவே
சினிமா செய்திகளை படிப்பதை தவிர்த்துவ்விடுவேன்.. அதனால் எந்த நடிகர் பற்றிய
செய்தி அதிகமாக வருகிறது என்ற கணக்கு எனக்கு தெரியாது. அதே போல் தான்
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததா இல்லையா ? சிறையில் போட்டார்களா இல்லையா? இந்த
ஊழல் பிரச்சினையில் நீதித்துறை நியாயமாக நடக்கிறதா இல்லையா இந்த தரவுகளுடனான
செய்திகள் மட்டும் போதும்...அவை தவிர்த்து மற்ற விசயங்கள் பக்கம்
போகமாட்டேன்.. :):)

அன்புடன்
சுவாதி

இவர்கள் அவமானப்பட வேண்டியவர்கள்! அவமானப்படுத்தப்பட வேண்டியவர்கள்!

அப்துல் ஜப்பார் said...

உள்ளதை உள்ளபடி சொல்லும் அருமையான பதிவு.

சிவா.ஜி said...

அருமையான அலசல். வாழ்த்துக்கள் ரிஷான். ஆதவா சொன்னதைப்போல.....இன்னும் கொஞ்ச நாளில் இந்தக் கட்டுரையில் அந்த “நிதி”யும் இடம்பெறக்கூடும்.

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//நல்ல கட்டுரை!! சிறப்பாக இருக்கிறது தொகுப்பு..
இப்பொழுது இன்னொரு பெயர் அடிபட்டு வருவதைக் கவனித்தீர்களா?
அது தயாநிதிமாறன்.... சண்டிவிக்கு அவர் “உதவியதை” தினமணி கிழித்திருக்கிறது!!

நாடு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. //

நிச்சயமாக நண்பரே. எப்படியோ ஊழல்கள் ஒழிந்தால் சரி..ஆனால் ஒழியுமா? ஒளியுமா?

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ரவீ,

//பெரியவர் சின்ன குத்தூசியுடன் திருவல்லிகேணியில் மேன்சனில் சிலகாலம் தங்கி இருந்திருக்கிறேன். மிகவும் எளிமையான மனிதர்... அவரும் அவர் சகோதரரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அந்த மேன்சனில் தங்கி இருந்தனர். மிகவும் குறிப்பாக மட்டுமே பேசுவார் ... முன்னாள் முதல்வருக்கு நல்ல நெருக்கம் ஆனாலும் எந்த உரிமையும் வேண்டி பெறாத மனிதர். சில மாதங்களே அவருக்கு அருகில் இருந்திருக்கிறேன் என்றாலும் அதுவும் ஒரு சந்தோசமே....//

ஆமாம் நண்பரே.

பெரியார் போன்ற பல பிரபலங்களோடு சிறு வயது தொடக்கம் நெருக்கமாக இருந்தவர், சிறிதும் போலி மரியாதையை ஒரு போதும் எதிர்பார்க்காதவர். அவரது எழுத்துக்களை நான் வாசித்ததில்லை. எனினும் ஒரு நேர்காணல் அவரது நேர்மையை வெளிப்படுத்திவிட்டது.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி சுவாதி,

நீண்ட கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,

கருத்துக்கு நன்றி ஐயா !

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

//அருமையான அலசல். வாழ்த்துக்கள் ரிஷான். ஆதவா சொன்னதைப்போல.....இன்னும் கொஞ்ச நாளில் இந்தக் கட்டுரையில் அந்த “நிதி”யும் இடம்பெறக்கூடும். //

நிச்சயமாக...அடுத்தது அவராக இருக்கக் கூடும்.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

mohamedali jinnah said...

நல்ல கட்டுரை .
ஆற்ற வேண்டிய காரியங்களை விடுத்து வீணான செய்திகளுக்கு முக்கியம் கொடுத்து மக்கள் மனதில் நம்பிக்கை அற்ற நிலை உண்டாக்குவது சிறப்பாக இல்லை. தவறான செயலை கண்டிப்பது தவறல்ல .அதே நேரத்தில் தவறு செய்தவரை ஒதுக்குவதும் வெறுப்பதும் சிறந்ததாக இருக்க முடியாது. குடியை வெறு குடிப்பவனை வெறுக்காதே .நல் வழி படுத்த முயல்வதே சிறப்பு . நம் பார்வையில் கெட்டது தெரிகிறது .நல்லவை தெரிவதில்லை . இது தாழ்ந்த மனதின் வெளிப்பாடு . குறை இல்லாத மனிதன் யார் ! இவர் செய்த நல்ல காரியங்களை மற்றவர் மறைக்க முயல்கிறார். அவர் செய்த நல்ல காரியங்களை இவர் மறைக்க முயல்கிறார். இது தமிழ்நாட்டின் பண்பாடாக மாறும் நிலையாக உள்ளது .
கனிமொழி கலைஞரின் வாரிசுகளில் சிறந்த கல்வியும், நல்கலையும் அறிந்த இளம் வயது மங்கை.ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமையுடன் கவிதை,கட்டுரை எழுதும் ஆற்றலுடையவர். அவர் அறிவு தந்தை வழி வந்தவை.
தாய் மீது பற்றும் பாசமும் அதிகமுண்டு.பாசம் நல்லது கெட்டது என்பதனை அறியாமல் செய்துவிடும்.இந்த இள வயதிலேயே வாழ்வில் பல துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலை. அனைவரையும் நம்பி பல இன்னலுக்கு ஆனாலும் இடிந்து போகாமல் இருப்பது பாராட்டுக்குரியது.அவர் அடைந்த வேதனை அவரை பண்படுத்தும் என்பது உறுதி .அரசியலில் நுழையாமலேயே கனிமொழி தனது அறிவின் ஆற்றலினால் பல சாதனைகள் செய்யும் வல்லமை கொண்டவர். அம்பு எய்தவனை விடுத்து அம்பினை குறை சொல்வது போல் உள்ளது எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று கூறுவதும் வழக்கம் அல்லவா.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் நீடூர் அலி,

நல்ல கருத்தினைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே :-)