Thursday, June 11, 2015

Breaking News Live - சௌம்யா, வித்யா மரணம்

இந்த வீடியோக் காட்சி ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ‘Breaking News Live’ எனும் மலையாளத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. ஆனால் காட்சியில் இடம்பெறும் சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்த ஒன்று.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, 23 வயதான இளம்பெண் சௌம்யா, வேலை முடிந்து ரயிலில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, 33 வயதான கோவிந்தசாமி என்பவரால் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பின்னர் படுகாயத்துக்குள்ளான நிலையிலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் மரணமடைந்தார். கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு உச்சபட்ச தண்டனையாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


உண்மையான நிகழ்வுகளைத் திரைப்படமாக்கி, மக்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் கேரள மாநிலத்தில் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
தமிழ்த் திரைப்படங்களில் இன்னும் நாம் காதலையும், பேய் பிசாசுகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கதாநாயகர்களின் உருவப்படங்களுக்கு பாலூற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்?!

தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் வரும், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் / வர்ணிக்கும் காட்சிகளைப் பார்த்துப் பார்த்தே நமது சமூகம் வளர்ந்து வருகிறது. அவ்வாறான காட்சிகளைப் பார்த்தே வன்முறைகளைச் செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சமூகத்தில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்களில் வித்யா முதன்மையானவரல்ல. ஆனால் இறுதியானவராக இருக்க வேண்டும் என்பதே எமது அவா.

- எம்.ரிஷான் ஷெரீப்
11.06.2015

Thursday, June 4, 2015

பட்டினி போடப்பட்டதால் மரணமடைந்த இளைஞன்

21 நாட்கள் பட்டினி போடப்பட்டதால் இளைஞனொருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று எனது ஊரில் நிகழ்ந்தது.

16 வயது மாந்திரீகரின் பேச்சை நம்பி, இச் சாகசத்தை நிகழ்த்தியது, மரணமடைந்த இளைஞன் பிரசன்னா ப்ரியலாலின் பெற்றோர் என்பது இன்னுமொரு பரிதாபத்துக்குரிய விடயம்.

செய்த குற்றம் தமது மதத்தில் தடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாட்டிறைச்சியை பிரசன்னா தவறுதலாக உட்கொண்டமையாகும். இதற்குப் பரிகாரமாக, அந்தத் தீட்டு கழிய வேண்டுமெனில் உட்கொண்டவர் 28 நாட்கள் பட்டினி போடப்பட வேண்டுமென மாந்திரீகர் கூறியிருக்கிறார்.


ஏற்கெனவே இருதய நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்த இளைஞர், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் மருந்து, ஆகாரமேதுமின்றி தனியறையில் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போடப்பட்டிருக்கிறார். பிரசன்னாவுக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் இருந்தபோதும் பெற்றோரின் பிடிவாதத்துக்கு மத்தியில் அவரைக் காப்பாற்ற எவருமே முன்வரவில்லை.

இக் காலப்பகுதியில் ஊராட்களையோ, உறவினரையோ தமது வீட்டுக்கு அண்டவிடாமல் சுற்றி வர வேலிகளையடைத்து பெற்றோரும் மாந்திரீகரும் மறைத்திருக்கின்றனர். இளைஞனின் முனகல்கள் அயல்வீடுகளுக்குக் கேட்ட போதும், எவரும் காவல்துறை உதவியை நாடவில்லை.

காரணம் ஆழமான மூட நம்பிக்கை. போலிஸ் உதவியோடு இளைஞனைக் காப்பாற்றப் போனால் இறைவனின் கோபமும், தீட்டும் தம் மீது படிந்து விடுமோ என்ற அச்சம்.

பிரசன்னாவின் மரணத்தோடு இன்று விடிந்திருக்கிறது இப் பிரதேசத்தின்
மூட நம்பிக்கைக்கான விடிவு காலம். இளைஞனின் வீட்டைச் சூழ்ந்த ஊராட்களும், உறவினரும் அவர்களது கரங்களாலேயே பூஜைப் பொருட்களையும், வேலிகளையும் முற்றாக அழித்து நொருக்கியிருக்கின்றனர்.

நவீன நூற்றாண்டு என்கிறோம். எல்லாமும் நாகரீகமடைந்து விட்டன என்கிறோம். ஆனால் இன்னும் கூட கிராமங்களில் போல, நகரங்களிலும் மூட நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவராவது திருந்த இவ்வாறான அசம்பாவிதங்கள்தான் வழிகாட்டும் போலிருக்கிறது.

- எம்.ரிஷான் ஷெரீப்
04.06.2015

Wednesday, June 3, 2015

விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள்

கைது செய்யப்பட்டிருந்த கொலையாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் அண்மைக்காலமாக நீதிமன்றத்தால் உடனுக்குடனே விடுதலை செய்யப்படுவது சம்பந்தமாகவே ஊடகங்களின் அண்மைய கேலிச் சித்திரங்கள் அமைந்திருக்கின்றன.

அரசியல் தலையீடுகளின் காரணங்களால் விடுதலை செய்யப்படும் இக் குற்றவாளிகள் சார்பாக நீதிமன்றம் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான். அது 'தகுந்த சாட்சிகள் இல்லாததன் காரணமாக விடுதலை செய்யப்படுகின்றனர்.'
உணர்ச்சி வேகத்தில் கொலை செய்பவர்களைத் தவிர, ஏனைய எந்தக் குற்றவாளியும், 'சாட்சி'களை வைத்துக் கொண்டு குற்றத்தைச் செய்வதில்லை. 'சாட்சி'கள் இல்லையென்பதற்காக குற்றவாளிகள் நிரபராதிகளாகி விட முடியாது.

ஆனால் இன்றைய நீதி தேவதைக்கு 'சாட்சி'கள் அவசியமாக இருக்கிறது. குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் சட்டத்தரணிகளுக்கு பணம் ஒன்றே பெரிதாக இருக்கிறது.






- எம்.ரிஷான் ஷெரீப்

Monday, June 1, 2015

கடத்தப்படும் சிறுமிகள்

இன்று கடத்திச் செல்லப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுமியை ஒரு ஊரே திரண்டு காப்பாற்றியிருப்பதானது மகிழ்ச்சியைத் தருகிறது. மூவின மக்களுமாக சுமார் 2000 பேர் இணைந்து, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் பாடுபட்டு சிறுமிக்கு எதுவும் அசம்பாவிதம் நிகழாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை வரவேற்க வேண்டும்.


ஆனால் கடந்த சில மாதங்களாக எத்தனை எத்தனை பாலியல் வன்முறைச் சம்பவங்களும் கடத்தல்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன? இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றம் வழியாக தண்டனைகள் ஏதுமற்று விடுதலை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.

ஒரு வன்முறையாளனுக்காவது பகிரங்கமாகத் தண்டனை கொடுத்தால்தான் இச் சம்பவங்கள் மட்டுப்படுத்தப்படுமெனத் தோன்றுகிறது.

- எம்.ரிஷான் ஷெரீப்
01.06.2015