Tuesday, August 3, 2010

முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிக்கப்பட்ட ஆதித் தீ

கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின. தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன.

எனினும், சிங்கக் கொடியசைந்த அந்த வெற்றிக் கணத்தில் மகிழ்ந்து, எழுத மறந்த கதையொன்றும் உள்ளது. முத்தையா முரளிதரனின் இவ் வெற்றிக் களிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக மரண பயமும், கண்ணீரும், இழப்பும் மட்டுமே அவருக்கென எஞ்சியிருந்த நாட்களும் இதே போன்றதொரு ஜூலை மாதத்திலேயே வந்தன. சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு ஓர் நாள், சிங்கக் கொடியை அசைத்தபடி கூக்குரலிட்ட ஒரு கும்பல், கண்டி, நத்தரம்பொத, குண்டசாலையில் அமைந்திருக்கும் முத்தையா முரளிதரனின் வீட்டைச் சூழ்ந்தது. முரளியின் தந்தைக்குச் சொந்தமான தொழிற்சாலை அக் கும்பல் வைத்த தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது. அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?

இறுதியாக முத்தையா முரளிதரன் சாதனையை நிலைநாட்டியது 2010, ஜூலை 22. அன்று முரளிதரனின் இருப்பிடங்களைச் சேதப்படுத்திய நெருப்பெரிந்தது 1983, ஜூலை 23. எரித்துக் கருக்கியபடி தொடர்ந்து சென்ற அந்த ஊழித் தீ எத்தனை முரளிதரன்களைப் பழி கொண்டிருக்குமென்று அறிந்துகொள்ளும் வழி கூட எப்பொழுதுமே எமக்குக் கிடைத்ததில்லை. 1983 கறுப்பு ஜூலைக்கு இப்பொழுது வயது இருபத்தேழு.

இரத்தக் கறை படிந்த ஆதி வரலாற்றின் பக்கங்களை இன்று மீளப்புரட்டுவது எதனாலென உங்களில் சிலர் சிலவேளை எண்ணக் கூடும். ஆனாலும், இலகுவாக மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கிடையில் சிக்கியிருக்கும் இருள் சூழ்ந்த வரலாற்றின் நினைவுகளை இதுபோல இலகுவாக ஒளித்துவைக்க ஒருபோதும் முடியாது. கறுப்பு ஜூலை - காலத்தால் அழிக்கப்பட முடியாத, இருள் சூழ்ந்த வரலாற்றில் தேங்கியிருக்கும் நினைவுகளிலொன்று. அந்தத் தீயிலிருந்து தப்பி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளங்களிலும், அந்த இருள் சூழ்ந்த நாட்களில் நெருப்பில் மறைந்துபோனவர்கள் குறித்து கைவிட முடியாத துக்கத்தைச் சுமந்தலையும் உள்ளங்களிலும் மட்டுமே அது நினைவுகளாகத் தேங்கியிருக்கிறது .

அறிவும், தொடர்ந்து வந்த சகோதரத்துவமும் குறித்த எங்கள் தேசத்துப் பாரம்பரியக் கீதங்கள் இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு இருளாய் வந்த கறுப்பு ஜூலைக்குள் மறைந்தே போயின. அப்பாவிகளைக் கொன்றொழித்த அந்த மிலேச்சத்தனமான செயல்களைக் கூட வெற்றிக் களிப்போடு செய்த நாட்களவை. தென்னிலங்கையின் வீதிகளில் வீடுகள், கடைகள், வாகனங்கள், சொத்துக்கள் எல்லாவற்றோடும் ஆயிரக்கணக்கில் எரிந்து மாண்டுபோன உயிர்கள், தமது குடியுரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான வன்முறையின் சாட்சிகள்.

அது 'அறிவீனர்கள் சிலரால்' நிகழ்த்தப்பட்ட வன்முறையொன்றெனச் சொல்வதற்கு வளரும் சந்ததி இன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதைக் கேட்டு வளரும் சந்ததியின் இதயங்களில் கேள்வியொன்று உள்ளது. அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்? நாட்டில் பிரசித்தமாக இக் கேள்வியைக் கேட்கமுடியாத போதும் இப்பொழுதும் கூட தட்டிக் கழித்துவிட முடியாத கேள்வியொன்று இது. இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் படிந்த இரத்தக் கறை இன்றும் கூட முழுதாக நீங்கியிருக்கிறதா என்ன?

இன்று கொட்டாஞ்சேனை சாந்த லூசியா தேவாலயத்திலோ, வெள்ளவத்தை இந்துக் கல்லூரி சரஸ்வதி மண்டபத்திலோ, கொள்ளுப்பிட்டிய மெதடிஸ்த தேவாலயத்திலோ கறுப்பு ஜூலைத் தீக்கு தங்கள் உடைமைகளை எரியக் கொடுத்துத் தப்பி வந்து தஞ்சமடைந்தவர்கள் எவரும் இல்லை. அண்மைய வருடங்களைப் போல வடக்கு வீதிகளில், ஒழுங்கைகளில் பிணங்களெரியும் வாடைகளை முகர்ந்தபடி தப்பித்து விரையும் எவரையும் இன்று காண்பதற்கில்லை. எனினும் இச் சரணாலய முகாம்களும் மயான வாசமும் வேறு நிலங்களில் எழுப்பப்பட்டுள்ளன இன்று. தவறிழைத்தவர்கள் பகிரங்கமாக எல்லா சௌபாக்கியங்களுடனும் வாழ, அன்று தொட்டு இன்று வரை தமிழ் பேசும் இனங்கள் மட்டும் இனவாத வன்முறையின் சிலுவையை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் தோள்களில் சுமந்தவாறு ஒழுங்கான இருப்பிடமற்று அச்சத்தோடு அலைய விதிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் உயிர் தப்பிய முத்தையா முரளிதரன் கூட இன்று தேசாபிமானத்தின் ஒரு குறியீடு. எனினும், அவரைப் போல உயிர் தப்பிய இலட்சக்கணக்கான மக்களால் இன்றும் கூட மறந்துவிட முடியாத இந்த ஜூலை மாதத்தில், அந்தத் தேசாபிமானத்துக்கும் குடியுரிமைக்குமான இடைவெளி, மற்ற மாதங்களை விடவும் அதிகமாகத்தான் இருக்கிறது.

(சுமுது திவங்க கமகேயின் கருத்தினை வைத்து எழுதியது)

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com



நன்றி
# உயிர்மை
# திண்ணை
# இனியொரு

31 comments:

Elangovan Anban said...

//அது 'அறிவீனர்கள் சிலரால்' நிகழ்த்தப்பட்ட வன்முறையொன்றெனச் சொல்வதற்கு வளரும் சந்ததி இன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதைக் கேட்டு வளரும் சந்ததியின் இதயங்களில் கேள்வியொன்று உள்ளது. அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை ...நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்? //

இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கேட்கப்படவேண்டிய காலத்தின் கேள்வி.

ரங்கா said...

முரளீதரன் மீது எனக்கு ஒரு மரியாதை இருந்தது. 2000 ஆம் ஆண்டில் உலகக் கோப்பைக்கான போட்டியில் எந்த உதைபந்தாட்ட அணியை ஆதரிக்கிறீர்கள் என்று கிரிகட் இடைவேளையில் பீபீசி ஊடகம் கேட்டது. அதற்கு தான் ஏதாவது ஆபிரிக்க நாடு வெல்ல வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். தனக்கு நடந்த கொடூரத்தையே பணத்துக்காக மறைக்கும் முரளீ போன்ற எத்தனை பேர் நம் மத்தியில்?

SriKanth said...

Many thanks for this Rishan Sherif

அகிலன் said...

//அது 'அறிவீனர்கள் சிலரால்' நிகழ்த்தப்பட்ட வன்முறையொன்றெனச் சொல்வதற்கு வளரும் சந்ததி இன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.//

ஆமாம் உண்மைதான் நாங்கள் பழக்கப்பட்டுத்தான் விட்டோம். இந்த வகையான சாட்டுப்போக்குகள் எல்லாத் தரப்புகளும் மக்களை ஏமாற்றப் பயன்படுத்தும் சொற்றறொடர் ஆகிவிட்டது. தளபதிக்குத் தெரியாமல் சரணடைந்தவர்கள் சுடப்பட்டார்கள் எனவும் அல்லது தலைமைக்குத் தெரியாமல் மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் எனவும் கதைவிடுவது மிகவும் சாதாரணம் நம்பத்தான் நாங்கள் தயாராயிருக்கிறோமே.

Anonymous said...

27 வருடங்கள் பின் இதை ஏன் துசி தட்டி எடுக்க வேண்டும்!

Anonymous said...

ஹையோ ரிஷான் நீங்களுமா?
போய் வேறு வேலை பாருங்கள்.
ஆயுதம் தூகியவர்களே இப்போது அரசு கட்டிலில் ஒய்யாரமாக இருக்கையில்,புலம்பெயர்ந்தவர்கள் இப்போது போர்ப் போதையில் உலருவதைஎல்லாம் வேத வாக்குகள் ஆக்கி சுகம் காணாதீர்கள்

Anonymous said...

தனக்கு நடந்த கொடூரத்தையே பணத்துக்காக மறைக்கும் முரளீ போன்ற எத்தனை பேர் நம் மத்தியில்?
//

எந்த முரளிதரன் பற்றி சொல்கிறீர்கள்?

அனானி said...

த.தே.கூ பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
டக்லஸ் பற்றி பேசப் பயம்..
பிள்ளையான்,கருணா பற்றிப் பேசப் பீப் பயம்.
சரணடைந்த புலிகள் பற்றி மூச்சும் விட மாட்டார்கள்.


கிடைத்தது இந்த அப்பாவி முரளி தானே?

சோழியான் said...

*கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு*

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால்
காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி
ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும்,
அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில
அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும்,
தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக்
கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில்
அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும்
செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி
ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப்
பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால்
துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால்
வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை
அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு
இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின்
போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம்
அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட
செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச
படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால்,
குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக
இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது. (Cont)

சோழியான் said...

ஈழத்தமிழனின்
கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச்
சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த
அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர்
வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான
ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில்
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு
அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ்
குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று
கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்"
என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று
1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள்.
சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு
எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க
வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு
செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில்
கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும்
திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல்.
திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம்
செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால்
அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு
செல்லக்கூடியதாக இருந்தது.

சோழியான் said...

மறுநாள் காலை ஏழு
மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு
எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள
தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று
கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக
இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து
விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம்.
அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி
விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன்.
அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து
நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை
கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள்.
கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன்
நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை.
தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக்
கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக
திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்"
வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு
வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது
சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும்
பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்? (cont)

சோழியான் said...

எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல,
கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு
உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று
குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை
வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான்.
அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே
பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.

பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம்
பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே
பாதுகாப்பானதாகத் தோன்றியது. (cont)

சோழியான் said...

மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில
நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக்
கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின்
பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள்
வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள்.
தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள
மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு
விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக
இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா
போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச்
சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு
மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும்
மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள்
உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின்
ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக்
கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின்
பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை
வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர்
அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம்
நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக்
கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால்
அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம்
குபீரெனப் பாய்ந்தது. (cont)

சோழியான் said...

கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய
நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு
பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக்
கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு,
மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன்
கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள
தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த
வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல்
காற்றிலே கலந்துகொண்டிருந்தது.

நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப்
பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன்
வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில்
போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும்
தாண்டியாகவேண்டும். (Cont)

சோழியான் said...

கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால்
மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும்
சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான
அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த
புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம்
என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல
தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.

அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக்
கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய,
மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே
நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும்
கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன்
முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை
விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள்
என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக்
காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ,
அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார். (cont)

சோழியான் said...

சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத்
தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.

சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும்
எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து
கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி
வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து
என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள்
மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச்
சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே
ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம்
எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில்
ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன்
எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு
எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக்
கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான
பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய்
சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில்
போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல
கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி. (cont)

சோழியான் said...

இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை
போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப்
பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம்
எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத்
தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற
வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு
ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது
செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே
எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண்
பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண்
அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின்
உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள்
உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள்
என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி
அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம்
செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில்
நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம்
கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம். (cont)

சோழியான் said...

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு
யூலையானது
சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது
தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும்
சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.

துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு.
அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து
தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள்
கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம்.
நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட
அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.
யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்

திவாகர் said...

>>>எழுத மறந்த கதையொன்றும் உள்ளது. முத்தையா முரளிதரனின் இவ் வெற்றிக்
களிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக மரண பயமும், கண்ணீரும், இழப்பும் மட்டுமே
அவருக்கென எஞ்சியிருந்த நாட்களும் இதே போன்றதொரு ஜூலை மாதத்திலேயே வந்தன.
சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு ஓர் நாள், சிங்கக் கொடியை அசைத்தபடி
கூக்குரலிட்ட ஒரு கும்பல், கண்டி, நத்தரம்பொத, குண்டசாலையில் அமைந்திருக்கும்
முத்தையா முரளிதரனின் வீட்டைச் சூழ்ந்தது. முரளியின் தந்தைக்குச் சொந்தமான
தொழிற்சாலை அக் கும்பல் வைத்த தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக்
கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக்
காப்பாற்றப்பட்டது. அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று
சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி
என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?

இறுதியாக முத்தையா முரளிதரன் சாதனையை நிலைநாட்டியது 2010, ஜூலை 22.
அன்று முரளிதரனின் இருப்பிடங்களைச் சேதப்படுத்திய நெருப்பெரிந்தது 1983, ஜூலை
23.<<<

ரிஷான், நல்ல கட்டுரை.
நினைவுபடுத்தவேண்டிய ஒன்றினை சரியான சமயத்தில் நினைவு படுத்தியே ஆகவேண்டும்.
எனக்கு மிக மிக நெருக்கமான குடும்பப் பெண்மணி, (தமிழராய்ப் பிறந்த
குற்றத்துக்காக) அங்கு அதே ஜூலை 83 இல் கொல்லப்பட்டதும் நினைவுக்கு் வருகிறது.

காலம் எத்தனை வேகமாகப் பறந்தாலும் செய்த குற்றம் குற்றமே.. அது யார்
செய்தாலும்..

- திவாகர்

M.Rishan Shareef said...
This comment has been removed by the author.
நாகராசன் said...

இனவாத அரசியலில் ஒரு இனத்தை மற்றொறு இனம் அழிப்பது ஒரு போர் அடிப்படையின்
நிகழக் கூடிய சம்பவம். அது ஒரு இனத்தை வெற்றி கொள்ளுவதற்கு மேற்கொள்ளப்படும்
பல்வேறு நடவடிக்கைகள்.
போரிலும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டு அதை மீறுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது
ஆயினும் நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள் ஒரு உள்நாட்டு நிக்ழ்வு
என்றும் அது ஒரு போர் அல்ல என்றும் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது
யூதர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக வலிமை மிக்க நாடுகள் குரல் கொடுத்தன.
தொடர் ஆய்வின் மூலமாக குற்றம் இழைத்தவர்கள் தப்பியோடி உலகின் பல பகுதிகளிலு
மறைந்து வாழ்ந்த போதும் அடையாளம் காணப்பட்டு நீதி மன்றத்தின் மூலம் தண்டிக்கப்
பட்டுள்ளனர்
இலங்கை அரசின் உள்நாட்டுச் சிக்கல் என்ற நிலைப்பாடு, வம்சாவளிக்காகக் குரல்
கொடுக்க வேண்டிய இந்தியாவின் தயக்கம், உலகம் தழுவி வாழ் தமிழர்களிடையே ஒருமித்த
கருத்த்தின்மை, தமிழகம் வாழ் தமிழர்களின் ஆதரவின்மை ஆகியவை இனப் படுகொலை
செய்தவர்களை நீதியின் முன் நிற்கவைத்து த்ண்டிப்பதற்கு ஏதுவாக இல்லை

அறிவு செல்வன் said...

முத்தையா முரளிதரன் ஒரு துரோகி என்பது ராஜபக்சேயை ஆதரித்து நான்கு நாள் முன்பு
பேசிய போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. சீமான், வைகோ, நெடுமாறன் போன்ற
தமிழ் மேதைகள் இனி முரளிதரன் கொடும்பாவி எரிப்பார்கள். முரளிதரனுக்கு அறிவுரை
கடிதங்கள் பல எழுதப்படும். முரளிதரன் பங்கேற்கும் ஐபிஎல் பந்தயங்கள் தமிழ்
பற்றாளர்களால் புறக்கணிக்கப்படும். கவிஞர் தாமரை ஏன் சுழல் பந்து போடுபவர்கள்,
நேராக வேகப்பந்து போடுபவர்கள் போல் நேர்மையானவர்கள் இல்லை என்று விளக்கி ஒரு
ஆக்ரோஷமான வீர உரை நிகழ்த்துவார்.

விஜி said...

கனத்த இதயத்துடன்;.....
சாம்பலில் இருந்து மீண்டெழுவோம் என்றொரு நம்பிக்கை நெருப்பு நெஞ்சோரங்களில்
தகித்துக்கொண்டுதான் இருக்கிறது!.

எரியூட்டப்பட்டவர்கள் தானே நாம்?

அன்புரசிகன் said...

அன்று காவுகொள்ளப்பார்த்த அந்த கொடி இன்று அவரை சோடனை செய்ய வைத்ததும் முரளியின் சாதனை என கொள்ளலாம் தானே.

உயிர் தப்பாத எத்தனையோ முரளிகள்... கோடி மழைத்துளிகளில் சிப்பிக்குள் அகப்பட்டவர் தான் முரளி என்று நினைக்கிறென்.

//அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்? நாட்டில் பிரசித்தமாக இக் கேள்வியைக் கேட்கமுடியாத போதும் இப்பொழுதும் கூட தட்டிக் கழித்துவிட முடியாத கேள்வியொன்று இது.//

இதில் இரண்டு முரண்பாடு உண்டு.
ஒன்று. அறிவாளிகள் என்று யார் யாரை சொல்லப்படுகிறது. அதாவது பொதுமக்களில் உள்ள அறிவுஜீவிகளையா? அரசாளுமையுடன் இருந்த அரசாங்கத்திடம் இருந்த அறிவு ஜீவிகளையா???

என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற பிரசித்த கேள்வியிலும் என்ன செய்யவேண்டும் என்ற முடிவை சொல்ல விளைவது தான் சாதூர்யம்.

வியாசன் said...

சேர்.பொன்.இராமநாதனை பல்லாக்கில் இருத்தி சிங்கள அரசியல்வாதிகள் தூக்கி வந்ததாக ஒரு அரசியல் வரலாறை மறந்திருக்க மாட்டீர்கள்.அவர்கள் தூக்கினால் காலை வாருவதற்குதான் நண்பர்களே.

சுதி said...

//அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்?//

இந்த இடத்தில் எட்வின் அவர்களின் அந்த கூற்றுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது..!!

“சமூகம் சாக்கடையாவது...
கெட்டவர்களின் செயல்களால் அல்ல
நல்லவ்ர்களின் செயலின்மையால்தான்..!”

கண்ணன் said...

முரளிதரனின் சாதனை பாராட்டுக்குறியது என்பதில் சந்தேகமில்லை. நான் விடுமுறையில் இந்தியாவில் இருந்தபோது அதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இலங்கையின் அதிபர் முரளியின் தந்தையுடன் பேசுவதையும் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அவர் மிக எளிமையாக் (வெள்ளை 4 முழ வேட்டி, சட்டை) தோன்றினார். சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

ரிஷான் விவரித்த முரளியின் இளமைச் சம்பவம் நான் கேள்விப்படாதது. நன்றி.

முரளியின் விளையாட்டு வாழ்க்கை முழுவதும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. ஒரு தமிழன் இலங்கை அணியில் விளையாடியது, எஞ்சிய தமிழர்களால் எப்படி பார்க்கப்பட்டது? துரோகம் என நினைத்தார்களா அல்லது தமிழன் என்று பெருமைப்பட்டார்களா?

அந்த இளமைக்கால சம்பவம் உண்மையானால், முரளிக்கு மனதளவில் சிறிதாவது சிங்களர்கள் மேல் வெறுப்பு இருக்கும்தானே? முரளி, உள்நாட்டு யுத்தத்தைப் பற்றி எப்பொழுதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா?

Swaminathan Venkat said...

எனக்கும் ரிஷான் ஷெரீப் கருத்துக்களுடன் உடன்பாடு. முரளீதரன் போன்ற
புகழ்பெற்றவர்கள், சிங்களவர்களாலும் கொண்டாடப்படுபவர்கள், அவர் சாதனைகளைத்
தங்களதாக சிங்களவர்களால் கொண்டாடப்படும் நிலையில் உள்ள முரளீதரன், அந்த
தருணத்தில் மாத்திரமல்ல என்றுமே சமயம் நேரும்போதெல்லாம் சிங்களவர்களுக்கு
அவர்கள் தமிழ்ர்களுக்கு உரியதைக் கொடுக்க மறுப்பதை, அதற்காக போரிடுவதைச்
சுட்டிக்கட்ட வேண்டும். இல்லையெனில், முரளீதரனும், பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில்
இங்கு ஜஸ்டீஸ் பார்ட்டியும், திராவிட கழகமும் நடந்து கொண்ட கேவலத்தை
முரளீதரனும் செய்வதாகும். பேசவேண்டும். மௌனம் சுய லாபத்தின், தன்
சௌகரியங்களுக்காக் தமிழ்னத்தைக் காட்டிக் கொடுத்ததாகும்.

தேனுஷா said...

போன வருசம் நடந்தையே நம்மாட்கள் மறந்திட்டமாம் நீங்க இருபதேழு வருசத்துக்கு முதின
விசயம் எல்லாம் சொல்லுறியள்

ம.தி.சுதா said...

முரளி போன்றோருக்கு இது சாதாரணம் தான். உலக அணிக்கு தலைமை தாங்கியவரால் தன் சொந்த அணியில் முடியாமல் போய் விட்டதே. ஒரு உண்மையை சொன்ன உங்களுக்கு இத்தனை கீழ்த்தரமான ஓட்டுக்கள் விழுந்தது மிகவும் கீழ்த்தரமான விடயம். நிச்சயம் இதனையும் ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான்........ நாளை எனக்கும் இதே கதி வரலாம்

சுவாதி said...

இதே முரளிதரன் தான் ரூபவாஹினிக்கு கொடுத்த பேட்டியில் 30 வருசமா இலங்கையை
ஆட்டிப்படைத்த பிரச்சினையை முறியடித்த ஜனாதிபதியை நினைத்து பெருமைப்படுவதாக
குறிப்பிட்டிருக்கிறார், அதற்கு எலும்புதுண்ட்டாக ராசபக்சே ஒரு விளையாட்டு
மைதானத்துக்கு முரளியின் பெயரால் இனி அழைக்கப்படும் என்று
சொல்லியிருக்கிறாராம்..

மேலும் விரிவான செய்தி இதோ:

இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் அதிகம் பெருமை அடைவதாக நட்சத்திர
சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தினால் நடத்தப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு
ஒன்றில் கலந்து கொண்ட போது முரளீதரன் இதன...ைக் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் முத்தையா முரளீதரன் முதல்
தடவையாக தொலைக்காட்சி ஊடகமொன்றில் தோன்றி ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.

30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த
ஜனாதிபதிக்கு தமது விசேட நன்றியை தெரிவிப்பதாக முரளீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் என பிரிவினை பாராட்ட வேண்டிய அவசியம்
கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

18 ஆண்டுகள் இலங்கை அணிக்காக கிரிக்கட் விளையாடிய தமக்கு எந்த நேரத்திலும்
தமிழர் என்பதனால் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சில குறுகிய லாபங்களை அடைய எத்தனிக்கும் ஒரு சக்திகள் தமிழர், சிங்களவர் அல்லது
முஸ்லிம் என்பதனை வெளிப்படுத்த முனைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேதங்களை மறந்து இலங்கையர் என வாழ்வது மிகவும் பயனுடையதென அவர்
குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி விடுதியில் தங்கி படித்த தமக்கு தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என
பேதம் பாராட்டத் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார்.

முரளீதரனின் இந்த நேரடி செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து தமது
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கிரிக்கட் விளையாட்டின் மூலம் தாம் அதிக நண்பர்களை ஈட்டிக் கொண்டதாக முரளீதரன்
குறிப்பிட்டுள்ளார்.

முத்தையா முரளீதரனினால் கிரிக்கட் துறைக்கு ஆற்றப்பட்ட சேவையை கௌரவிக்கும்
நோக்கில் பல்லேகலே சர்வதேச விளையாட்டு அரங்கு நேற்று முதல் முத்தையா முரளீதரன்
சர்வதேச கிரிக்கட் மைதானமாக அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.