Showing posts with label தமிழ்திசை. Show all posts
Showing posts with label தமிழ்திசை. Show all posts

Monday, June 6, 2022

தொடரும் இலங்கையின் நெருக்கடி நிலைமை; கண்காணிக்கப்பட வேண்டிய வெளிநாட்டு உதவிகள் - எம். ரிஷான் ஷெரீப்

 

    இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. எரிபொருட்களுக்காகவும், உணவுகளுக்காகவும், மருந்துகளுக்காகவும் பொதுமக்கள் நாளாந்தம் நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்களாகக் காத்திருக்க வேண்டிய நிலைமை தொடர்ந்தும் நீடித்திருக்கிறது.

    சிறிய தனித்த தீவான இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பெருங்கடலில் பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகொன்றாக இலங்கை தத்தளித்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.

    இந் நிலையில் ஒரு ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காத வரை இலங்கைக்கு தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால் வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமலிருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. பதவியேற்றதுமே அவர், நாட்டின் செலவுகளுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்கள் பணத்தை அச்சிட வேண்டும் என்றும் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பண வீக்கமானது நாற்பது சதவீதத்தைத் தாண்டும் என்றும் வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை எதிர்நோக்க மக்கள் தயாராக வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாட்டில் வறுமை நிலையும், வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.


  இலங்கையில் விவசாயத் துறையும் உரத் தட்டுப்பாட்டால் பாரிய நெருக்கடியைச் சந்தித்திருப்பதன் காரணத்தால் கடந்த மாதங்களிலும், இந்த மாதத்திலும் எவ்வித விதைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, வரும் மாதங்களில் மக்கள் அனைவரும் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டி வரும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்திருக்கிறார். நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு கூற வேண்டிய, முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் இவர்கள் அனைவரும் இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைக் கூறி, மக்களைக் கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயங்கள் அனைத்தும் மக்களைப் பேரச்சத்தில் தள்ளியுள்ளன.

    முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்த போது அவர் எவ்வாறு பண வீக்கத்துக்குக் காரணமாக, தொடர்ச்சியாக பணத்தை அச்சிட்டுக் கொண்டிருந்தாரோ அதே வழியில்தான் தற்போதைய பிரதமரும், நிதியமைச்சருமான ரணிலின் பாதையும் இருக்கிறது. எனவே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பிறகு பொருளாதாரத்திலும், தமது வாழ்க்கையிலும் ஏதேனும் முன்னேற்றம் உருவாகலாம் என்று மக்களிடம் காணப்பட்ட சிறிய எதிர்பார்ப்பும் கூட முழுவதுமாக தற்போது பொய்த்துப் போயுள்ளது.

    இவ்வாறான நெருக்கடி நிலைமையில், இந்திய மக்களால் சேகரிக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்துகள் உள்ளிட்ட 2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்தன. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மக்களிடம் பகிர்ந்தளிக்குமாறு கோரி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் அவற்றை மொத்தமாகக் கையளித்துள்ளார். ஏற்கெனவே 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருளாதார உதவி உள்ளிட்ட நிறைய உதவிகளை இந்தியா செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலைமையில் இந்தியாவினதும், ஜப்பானினதும் இந்த உதவிகள் மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கின்றன.



    என்றாலும், இந்த உதவிகள் உரிய விதத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச் சேருகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில், இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பெரும்பாலான பொதுமக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. சுனாமி, கொரோனா சமயங்களிலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வழங்கப்பட்ட நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. வழமையாக அமைச்சர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இவ்வாறான உதவிகளில் ஒரு சிலவற்றைப் பகிர்ந்தளித்து, புகைப்படங்களெடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்து மொத்த உதவிகளையும் பகிர்ந்தளித்து விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு அறிவிக்கிறார்கள். ஆனால், உண்மையில் உதவி தேவைப்படும் எளிய மக்களுக்கு அந்த உதவிகள் போய்ச் சேருவதில்லை.

    ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்திய உதவித் திட்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 11000 மெட்ரிக் டன் அரிசிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த மாதம் நடுப்பகுதியில் பொதுமக்கள் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தேடுதல்களை நடத்திய போது பல நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள், உர மூட்டைகள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை அந்த வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

    அடுத்த முக்கியமான விடயம், வழமையாக கொழும்பில் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும் இவ்வாறான உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம். தலைநகரமான கொழும்பிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் வறிய மற்றும் கஷ்டப் பிரதேசங்கள் நெடுங்காலமாக கவனத்திலேயே கொள்ளப்படாத பல பிரச்சினைகளாலும், நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில், அவற்றில் காணப்படும் பஞ்சமும், பட்டினியும், மருந்துத் தட்டுப்பாடுகளும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. கணக்கில் வராத அளவுக்கு மந்தபோஷணம், பட்டினி மற்றும் மருந்தின்மையால் ஏற்படும் மரணங்களும் அப் பகுதிகளில் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    எனவே உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாமல் தாம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் பகிரப்படுகின்றனவா என்பதை, உதவியளித்த நாடுகள் கண்காணிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தமக்கு ஏதேனும் உதவிகள் செய்யும் என்ற மக்கள் நம்பிக்கை முழுமையாக அற்றுப் போயுள்ள நிலையில், மக்களின் இறுதி எதிர்பார்ப்பாக தற்போதைக்கு இவ்வாறான வெளிநாட்டு உதவிகளே உள்ளன. அவை ஒழுங்காகவும், நீதமான விதத்திலும் உரிய மக்களுக்குப் போய்ச் சேருவதிலேயே நிதியுதவிகளை அளித்த நாடுகள் குறித்த அபிமானமும், நல்லபிப்ராயமும் மக்கள் மத்தியில் தங்கியிருக்கிறது.

____________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 01.06.2022






Monday, May 23, 2022

இலங்கையின் புதிய பிரதமரும், தொடரும் மக்கள் எழுச்சி போராட்டமும் - எம். ரிஷான் ஷெரீப்


    
கடந்த சில நாட்களில் இலங்கையில் மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, இரண்டு தினங்கள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் நாட்டில் வன்முறைகள் வெடித்தன. வீடுகளும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதோடு, உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. தெருக்களில் பல இராணுவ வாகனங்கள், ஆயுதந்தரித்த படையினரோடு உலா வந்து கொண்டிருந்ததோடு, அரச கட்டளைகளை மீறும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும் அதிகாரம் இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோ’ கிராமத்தில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று காவல்துறை ஒலிபெருக்கி வழியாக அறிவித்ததுமே, அருட்சகோதரிகளும், பௌத்த பிக்குகளும் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நேராத வண்ணம் காவல்துறையும், இராணுவமும் பிரவேசிக்கக் கூடிய வழிகளில் காவல் தேவதைகளாக இரவு முழுவதும் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

    அதிகபட்ச அதிகாரங்களையுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு, முப்படைகள் மற்றும் போலிஸ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்களை இயற்றும் திறன் ஆகிய அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது சகோதரரான மஹிந்த ராஜபக்‌ஷவால் ஏவி விடப்பட்ட அந்த வன்முறைகளைத் தடுக்க உடனடியாக எவ்வித முயற்சிகளையும் எடுக்காமலிருந்ததோடு, பொதுமக்களுக்கு ஆதரவாகவோ, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ எவ்வித உரையையும் ஆற்றாமல் மறைந்திருந்தார். பிறகு, எதிர்க்கட்சிகளினதும், சர்வதேசத்தினதும் அழுத்தம் காரணமாக இரண்டு நாட்கள் கழித்து தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய பிரதமர் ஒருவரையும், புதிய அமைச்சரவையொன்றையும் தான் நியமிக்கப் போவதாகத் தெரிவித்தார். நாட்டை திவாலாக்கி, நெருக்கடிக்குள்ளும் பஞ்சத்துக்குள்ளும் தள்ளியதற்கும், அண்மைய வன்முறைகளுக்கும் எவ்வித வருத்தத்தையும், மன்னிப்பையும் ஒரு ஜனாதிபதியாக அவர் கோரவில்லை. வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது, தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாத்திரம் தெரிவித்தார்.

    என்றாலும், வன்முறைகளுக்கு முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டிய அவரது சகோதரர் குடும்பத்தோடு திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குடும்பம் கப்பல் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்படுவதாக அறிந்து கொண்டதுமே நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது படகுகளோடு கப்பலைச் சூழ்ந்து மறித்து நின்று அவர்களைத் தப்பிச் செல்லவிடாமல் செய்தார்கள். அதேவேளை, பொதுமக்கள் மீது வன்முறையை ஏவி விட்ட மஹிந்த ராஜபக்‌ஷ மீதும், அவரது கூலிப்படை மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வரலாற்றில் முதற்தடவையாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், பல அரசியல்வாதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் விசாரணைகள் முடியும்வரை வெளிநாடுகளுக்குச் செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    நாட்டில் பிரதமர் இல்லாத நிலையில் இவ்வளவும் நடந்து கொண்டிருப்பதைக் கண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கிணங்க, மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த பன்னிரண்டாம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்‌ஷ குடும்பத்தின் மிக நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பதனால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்‌ஷ குடும்பத்தின் குற்றங்கள் மீது, தான் உக்கிரமாக இருப்பது போல அவர் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்பு ரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்து வருகிறது. இது ராஜபக்‌ஷ குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
    
    எனவே, மக்களால் எப்போதும் தோல்வியுற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் மீட்பரென்றும், இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார் என்றும் கருத முடியாது. அவர், இலங்கையின் சீரழிந்த அரசியலமைப்பில் நெடுங்காலமாக இருந்து வரும் ஒருவர் என்பது தவிர அவர் மீது பொதுமக்களுக்கு விஷேட வெறுப்போ, விருப்போ இல்லை. அவரையும், மஹிந்த ராஜபக்‌ஷவையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். என்றாலும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதை பொதுமக்கள் கடுமையாக எதிர்க்காமல் இருப்பதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.

    அவசரமாகவும், காலம் தாழ்த்தாமலும், இலங்கையில் ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை முதன்மையான காரணி. இலங்கையில் பிரதமரோ, அரசாங்கமோ இல்லாத நிலைமை நீடித்தால், உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என இலங்கை மக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் அனைத்தும் இன்னும் தீவிரமடையும். நாடு முழுவதும் வன்முறைகள் மேலோங்கி எவரும் தமக்குத் தேவையானவற்றைக் கொள்ளையடிக்க முற்படும் வாய்ப்புகள் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை என்பது அடுத்த முக்கிய காரணியாக இருந்தது. எனவே இவ்வாறான இக்கட்டான நேரத்தில், திவாலாகிப் போயுள்ள நாட்டைப் பொறுப்பேற்க தைரியமாகவும், நம்பிக்கையோடும் முன்வரும் ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டிய கட்டாயம் உருவானது.



    இவ்வாறான நிலைமையில், நாட்டை மீண்டும் சாதாரண நிலைமைக்குக் கொண்டு வருவதை நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகளை விடவும் ரணிலால் மாத்திரமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாகவிருக்கிறது. எதையும் பூசி மெழுகி மறைக்காமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டின் நெருக்கடி நிலைமை படுமோசமாக இருக்கும் என்று அவர் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரையில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு சர்வதேசத்திடமிருக்கும் வரவேற்பையும், நம்பிக்கையையும் பயன்படுத்தித்தான் அவர் இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கூடும். அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தையும், சிறந்த நட்பையும் பேணி வரும் அவரால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான கடனுதவிகளாலும், அவசர மருத்துவ உதவிகளாலும் நாட்டைச் சில மாதங்களுக்குள் மீட்டு விட முடியும். அது இக்கட்டான இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மிகப் பயனுள்ளதாக அமையும்.

    என்றாலும், இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வு மாத்திரமே கிடைக்கும் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தற்போதும் இலங்கையைத் தாங்க முடியாதளவு சர்வதேசக் கடன்கள் அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இன்னுமின்னும் கடனாளியாக ஆவதும், நாட்டின் இடங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டேயிருந்தால் அது எதிர்காலத்தில் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது குறித்தும் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    இலங்கையின் மீட்சிக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், நாட்டுக்குள் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். இலஞ்சம், ஊழல், இன மத பேதமற்ற அரசியல்வாதிகளாலும், சட்டத்தை மதித்து நேர்மையாக நடக்கக் கூடிய பொதுமக்களாலும் மாத்திரமே அதைச் செய்ய முடியும். அவ்வாறான நீண்ட காலத் திட்டத்தில், பிரதமர் ரணிலின் செயற்பாடுகளில்தான் ரணிலின் பிரதமர் பதவி நிலைப்பது தங்கியிருக்கிறது. எனவே, புதிய பிரதமர் வந்ததுமே மக்கள் எழுச்சிப் போராட்டம் கலைந்து விடும் என்ற அரசின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிக்கும் வகையில் தற்போதும் தொடர்ந்தும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 19.05.2022






Wednesday, May 11, 2022

இலங்கையில் கலவர அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ராஜினாமா - எம். ரிஷான் ஷெரீப்


    
கடைசியில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பதவியை நேற்று மே மாதம் ஒன்பதாம் திகதி ராஜினாமா செய்து விட்டார். இலங்கையில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் எதிரொலியாக, நாட்டின் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராகக் கிளம்பிய பாரிய அழுத்தத்துக்கு மத்தியில் இந்தத் தீர்மானத்தைப் பிரதமர் எடுத்திருக்கிறார். இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பல தடவைகள் பதவி வகித்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷ தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையை அவரே எதிர்பார்த்திராத ஒரு கணத்தில், எதிர்பார்த்திராத விதத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஏற்கெனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து விட்டதாக நாடு முழுவதும் நான்கு தடவைகள் வதந்திகள் கிளம்பியிருந்த போதிலும், இப்போதுதான் அந்தத் தகவல் அவரது உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் உண்மையாகியிருக்கிறது.

    கடந்த வாரம் பொதுமக்கள் எழுச்சிப் போராட்டமானது, அரசாங்கம் ஒன்று கூடும் பாராளுமன்றத்தைத் தைரியமாக முற்றுகையிட்டமையும், நாடு தழுவிய ஹர்த்தாலும் இந்த ராஜினாமாவிற்கான பிரதான காரணம் என்று கூறலாம். அத்தியாவசிய உணவுகள், மருந்துகள் தட்டுப்பாடுகளின் காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலை கண்டு அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியா வழங்கிய பில்லியன்கணக்கான கடன்தொகையில் எழுபத்தைந்து சதவீதமளவு பணத்தைச் செலவழித்து இரும்பு, உருக்கைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை கண்டு கொந்தளித்துப் போன சட்டத்தரணிகளும், பல்கலைக்கழக மாணவர் பேரணியும், பொதுமக்களும்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டிருந்தார்கள்.

 

   
அவ்வாறு முற்றுகையிட்ட மக்களை பல நாடுகளில் தடை செய்யப்பட்டதும், பல நூறு டாலர்கள் பெறுமதியானதுமான கொரியத் தயாரிப்பான N 500–CS Gas Hand Grenade வகை கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தாக்கியது. 2019-2020 காலப்பகுதியில் சிலியிலும், 2020 இல் போர்ட்லன்டிலும் பயன்படுத்தப்பட்ட இந்த வகை கண்ணீர்ப் புகைக்குண்டுகளால் பெரும்பாலானோர் பார்வையிழந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில் பலரும் உடனடியாக மயங்கி விழுந்ததைக் காண முடிந்தது. இந்த வகைக் குண்டுத் தாக்குதல்களால் தோலில் கடுமையான எரிச்சல்களோடு ஆழமான காயங்களும், கண் பார்வையிழப்பு, சுவாசப் பிரச்சினை, மண்டையோட்டில் எலும்பு முறிவுகள் போன்றவையும் ஏற்படுவதனால் திடீர் மரணங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதோடு, குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

    மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் பட்டினியைப் போக்குவதற்காக வெளிநாடுகள் வழங்கும் நிதியுதவிகளை இவ்வாறாக இரும்பும், உருக்கும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் கொள்வனவு செய்வதற்காகவா செலவழிக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்ததோடு, பொதுமக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும் மறுநாள் மே மாதம் ஆறாம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் நடைபெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது வீடுகளுக்குள் முடங்கி இந்த ஹர்த்தாலில் பங்கேற்றார்கள். சர்வதேச அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையானது, ‘ராஜபக்‌ஷேக்களைத் துரத்த மொத்த இலங்கை மக்களும் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்’ என்று இந்த ஹர்த்தாலைக் குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்களில் பிரதான செய்தியாக இந்த ஹர்த்தால் மாறியிருந்தது.

    அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நாடு முழுவதும் அவசர கால சட்டத்தை அமுல்படுத்திய நிலையிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், இந்த ராஜினாமாவுக்கு முன்பாக, தனக்கு இப்போதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட, ஆட்களைத் திரட்டி கொழும்பு, கண்டி போன்ற பிரதான நகரங்களில் அவர் செய்துள்ள ஒரு காரியத்தை காலத்துக்கும் மக்கள் மறக்க மாட்டார்கள்.


    
அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு சில மணித்தியாலத்துக்கு முன்பு, தனது கட்சியைச் சேர்ந்தவர்களையும், தனது ஆதரவாளர்களையும் சந்தித்து பிரதமராக தனது இறுதி உரையை ஆற்றியதோடு அதில் இன்று தான் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பேரூந்துகளும், வாகனங்களும் எரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களின் இருப்பிடங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நிலவும் இவ்வாறான கலவரச் சூழல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஏற்பாடு என்றும், அதனால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறே அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவும் தெரிவித்திருக்கிறார்.

    இவ்வாறாக, பொதுமக்களுக்கு எதிராக எவ்வளவுதான் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதிலும் இன்று தைரியமாகப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மூலமாக ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. சர்வாதிகாரம் மீதும், இலங்கையைத் தீவிரவாதத்திலிருந்தும், யுத்தங்களிலிருந்தும் மீட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் ‘ராஜபக்‌ஷேக்கள்’ எனும் அரசியல் குடும்பத்தின் மீதும் பொதுமக்களுக்கு இருந்த பேரச்சத்தை கடந்த பல மாதங்களாக இலங்கையில் உக்கிரமடைந்துள்ள நிதி நெருக்கடியும், இவ்வாறான தாக்குதல்களும் முழுவதுமாக நீக்கியிருக்கின்றன என்பதுவே அது.

 

   
பயம் நீங்கிய பொதுமக்கள் புதிய அரசியல் உத்வேகத்தையும், வலிமையையும் தற்போது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகத் திரண்டெழுந்து பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அத்திவாரத்தையே அசைக்க அவர்களால் முடிந்திருக்கிறது. இவ்வாறாக அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாகவும், விழுப்புணர்வோடுமுள்ள குடிமக்களையே ஜனநாயகத்தின் நிஜ ஆதாரமாகவும், உரிமையாளர்களாகவும் குறிப்பிடலாம். உண்மையில் தமது வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு ஆட்சியாளர்களை அனுப்பும் அவர்கள் வெறும் வாக்காளர்கள் மாத்திரமல்ல. வாக்களிப்பதோடு, நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் உரிமையையும் அவர்கள் இவ்வாறாகக் கோருகிறார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது கடமையைச் செய்யத் தவறும்போது தைரியமாகவும், நேரடியாகவும் அதனைத் தட்டிக் கேட்டு, பதவி விலகுமாறு அவர்களைக் கோருகிறார்கள்.

    அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதத்தை இன்று புதன்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வாரம் பிரதமர் பதவி வெற்றிடமாவதைத் தொடர்ந்து உடனடியாக அமைச்சரவையும் கலைவதோடு, அனைத்து அமைச்சுப் பதவிகளும் கூட செயலிழந்து விடுகின்றன. ஆகவே புதிய பிரதமர் ஒருவரின் கீழ், புதிய அமைச்சரவையொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. வரலாற்றில் பதியப்படப் போகும் மாபெரும் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தியவாறு இலங்கையின் மக்கள் எழுச்சிப் போராட்டம் முதன்முறையாக இப்போது ஒரு விடியல் கீற்றைக் கண்டிருக்கிறது.


______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 10.05.2022



கட்டுரையை ஒலி வடிவில் கேட்க





Thursday, May 5, 2022

இலங்கையில் தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள தேசிய கீதம் - எம். ரிஷான் ஷெரீப்

 

   
இலங்கையின் தேசிய கீதத்துக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல், அமைச்சரவையால் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய கீதத்தை புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிக் கொடுக்க, அவரது சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள இசைக்கலைஞரான ஆனந்த சமரகோன் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். 1952 ஆம் ஆண்டில் அந்தப் பாடல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறிஞரும், பண்டிதருமான புலவர் மு.நல்லதம்பியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் பாடப்பட்டு வந்த அந்தத் தேசிய கீதத்துக்கு 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.

    நாட்டில் அரசுக்கு எதிரான அரசியல் ஊர்வலங்கள், தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், இனவாத கலகச் செயற்பாடுகள், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஆகியவை தோன்றும்போதெல்லாம் அவை அனைத்துக்கும் காரணம் ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும் அந்தப் பாடல்தான் எனும் நியாயமற்ற கருத்தொன்று தலை தூக்கியிருந்தது. தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதமானது, 'ஸ்ரீலங்கா மாதா' என வரிகள் மாற்றப்பட்டே பாடப்பட்டது. இதைக் குறித்து மிகுந்த கவலைக்குள்ளாகியிருந்த ஆனந்த சமரகோன் பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மரணிப்பதற்கு முன்னர் Times of Ceylon பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியிருந்த அவர் அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    'தேசிய கீதத்தின் தலை அறுத்துப் போடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாடல் அழிந்தது மாத்திரமல்லாமல் பாடலாசிரியனின் ஜீவிதமும் அழிந்து போயுள்ளது. நான் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கிறேன். என்னைப் போன்றதொரு நேர்மையான இசைக் கலைஞனுக்கு இவ்வாறானதொன்றைச் செய்த நாட்டில் இனிமேலும் வாழ வேண்டியிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. இதை விடவும் மரணம் சுகமானது.'

    இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்டத்தினிடையே இன்று தேசிய கீதம் பற்றி எழுத நேர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கடற்கரை போராட்டத் திடலில் பல்லாயிரக்கணக்கான போராளி மக்களின் பேராதரவோடு தேசிய கீதமானது தமிழில் பாடப்பட்டது. மக்களின் முன்னிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதைக் கேட்டதும், அதைப் பாட வேண்டாம் என்று ஒரு பௌத்த பிக்கு அந்த இடத்தில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்த முற்பட்டார். உடனடியாக செயற்பட்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பிக்குவிற்கு பல விடயங்களைத் தெளிவுபடுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ‘நாம் ஒரு தாய் மக்கள், அன்பால் சகல பேதங்களையும் இல்லாதொழிப்போம்’ என்ற அர்த்தம் கொண்ட தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் பாடியவாறே தமிழ் பேசும் மக்களைத் தமது தாய்மொழியில் அதைப் பாட விடாமல் செய்வது என்னவிதமான அறம் என்பது அந்த பௌத்த பிக்குவுக்கும், தமிழில் பாடுவதை எதிர்க்கும் பெரும்பாலானோருக்கும் தெரியவில்லை.


    பல தசாப்த காலமாக, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களிலும், ஏனைய தேசிய நிகழ்வுகளிலும், உத்தியோகபூர்வ விழாக்களிலும் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்களாக இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தத் தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தேசிய கீதமானது எப்போதும் தமிழிலேயே பாடப்பட்டு வந்தது.

    இதை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பவில்லை. எனவே 2010 ஆம் ஆண்டு அவரது ஆட்சியில், அமைச்சரவை அறிக்கை மூலமாக தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை செல்லுபடியற்றதாக்கி சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தைப் பாடத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷவின் அந்த முடிவை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வன்மையாகக் கண்டித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவிடமிருந்தும், தனது கட்சியிலிருந்தும், இனவாதிகளிடமிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய கீதத்தைத் தமிழில் பாட அனுமதி வழங்கினார். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ மீண்டும் தேசிய கீதத்தை இலங்கையின் இரண்டாவது தேசிய மொழியான தமிழ்மொழியில் பாடுவதை முழுமையாகத் தடை செய்தார்.



    ஒருவரால் தனது தாய் நாட்டின் மீதுள்ள இயல்பான அபிமானத்தின் அடிப்படையில், அதை நிர்ணயிக்கும் விதமாகப் பாடப்படும் தேசாபிமான உணர்வுகளைக் கொண்ட பாடலாக ஒரு நாட்டின் தேசிய கீதத்தைக் குறிப்பிடலாம். இலங்கையில் தேசிய ரீதியாக ஏதேனும் வைபவங்கள் நடைபெறும்போதெல்லாம் தேசிய கீதம் பாடப்படுவது வழமையாகவிருக்கிறது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே அர்த்தத்தைக் கொண்ட தேசிய கீதம் உள்ள போதிலும், அவ்வாறான நிகழ்வுகளில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததுமே உத்தரவிட்டமை தமிழ் பேசும் மக்களின் மனம் நோகக் காரணமாயிற்று. இலங்கையில் தேசிய கீதத்தை விடவும், அது பாடப்படும் மொழிக்கேற்பவே நாட்டின் அமைதி, சமாதானம், தேசிய ஒற்றுமை ஆகியவை நிலைத்திருப்பதான ஜனாதிபதியின் நம்பிக்கை அதன் மூலமாக வெளிப்பட்டிருந்தது.

    நாட்டின் ஜனாதிபதியேயானாலும், கௌரவத்துக்குரிய பௌத்த பிக்குவேயானாலும், இவ்வாறான இனவாதக் கருத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் தற்போது வெகுண்டெழுந்துள்ளமை இங்கு பாராட்டத்தக்கது. தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் தமது தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தடுப்பது என்பது அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து அவர்கள் மீது பிரயோகிக்கும் அடையாளத் தாக்குதலாகும். இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையில்லை என்று பலவந்தமாக, நாட்டை விட்டுப் போகச் சொல்லும் தூண்டுதலாகும்.

    இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் முடிவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதியதொரு ஆட்சி அமைக்கப்படும்பொழுது தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கான உறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்மானம் எட்டப்பட வேண்டும். அனைவரும் போராடிப் பெறும் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் மிகப் பெறுமதியான உரிமைகளில் ஒன்றான இந்தத் தீர்வானது, காலாகாலத்துக்கும் எவராலும் மாற்றப்பட முடியாத ஒன்றாக எப்போதும் இருத்தல் வேண்டும்.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 03.05.2022






Saturday, April 23, 2022

மரணத் தருவாயில் இலங்கையின் அரச மருத்துவமனைகள் - எம். ரிஷான் ஷெரீப்

 

   
மருந்துகளாலோ, சத்திர சிகிச்சைகளாலோ நிவாரணம் பெற்று உயிர் பிழைக்க வேண்டும் என்றுதானே மக்கள் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்? அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் தினந்தோறும் புதிதுபுதிதாக மருத்துவமனைகளை நாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இல்லையென்பதால் அந்த மக்களை மரணிக்க விடுவதன்றி வேறு வழியற்ற நிலைமையில் தற்போது இலங்கை உள்ளது.

    ஒரு நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்றால் சாதாரண தலைவலி மாத்திரை, முதலுதவி மருந்துகள் போன்றவை தட்டுப்பாடாக இருக்கும் என்றுதான் பொதுவாக ஏனைய நாடுகள் கருதுகின்றன. ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை வியாபித்திருக்கிறது. இந்த நிலைமையும், இதன் விளைவுகளும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்படுவதில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு அரச மருத்துவமனைக்கு எந்த வேளையில் சென்று பார்த்தாலும் பிளாஸ்டர்கள், கையுறைகள், சிறுநீர்க் குழாய்கள், மயக்க மருந்துகள் முதல் நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, விஷக்கடிகள், நீர்வெறுப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் வரை இல்லை, ஆய்வு கூட இயந்திரங்கள் வேலை செய்யவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் தேவையான பொருட்களோடு மின்சாரமுமில்லை, அவசரத்துக்கு ஆம்பூலன்ஸ், ஜெனரேட்டர்களை இயக்க டீசல் இல்லை, குடிக்கவோ சுத்திகரிக்கவோ தேவையான தண்ணீரில்லை போன்ற புலம்பல்களைத் தற்போது நீங்கள் கேட்கலாம்.



    எவருக்கேனும் விபத்தோ, மாரடைப்போ ஏற்பட்டால் அரசாங்க மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதில் அர்த்தமில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. பிரசவத்தில் சிக்கலுள்ள பெண்களுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யக் கூட வழியில்லை. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் வளர ஊக்குவிக்கும் மருந்து, ஆன்ட்டிபயாடிக்ஸ், அவசர சிகிச்சை மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் உட்பட நானூறுக்கும் அதிகமான அத்தியாவசியமான மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு இலங்கையில் நிலவி வருகிறது. புற்றுநோய், தலசீமியா, சிறுநீரக வியாதிகள் போன்ற தொற்றாநோய்களுக்கான மருந்துகளின் தட்டுப்பாடு பல வாரங்களாக நீடித்திருக்கும் நிலையில் எண்ணிலடங்காத பல நோயாளிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான மின்சாரத் தட்டுப்பாட்டால் குளிர்சாதன வசதியின்றி கையிருப்பில் இருக்கும் ஊசி மருந்துகளும், ஏனைய மருந்துகளும் கூட வீணாகக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆய்வுகூட பரிசோதனைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதார அமைச்சு கூடிய விரைவில் இந்தப் பொருட்களையும், மருந்துகளையும், சத்திர சிகிச்சை உபகரணங்களையும் அரச மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெருவிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ‘அரச மருத்துவமனைகளில்தானே மருந்துகளில்லை, தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்கலாமே’ என்று யோசிப்பீர்கள். அரச மருத்துவமனைகளில் மருந்துகள் தீர்ந்ததும் அயலிலிருக்கும் மருந்தகங்களிலிருந்தும், தனியார் மருத்துவமனைகளிலிருந்தும்தான் அந்த மருந்துகள் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள் எனப்படுபவை எவராலும் அதிக காலத்துக்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடியாதவை என்பதோடு எளிதில் தீர்ந்து விடக் கூடியவை என்பதால், தனியாரின் கையிருப்பில் இருப்பவையும் வெகுவிரைவாகத் தீர்ந்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை கொவிட், சுனாமி மற்றும் போர்க்காலங்களில் ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்திருக்கிறது எனும்போது நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும்.



    மருந்துத் தட்டுப்பாடானது கண்கூடாக நேரடியாகக் காணக்கூடிய இவ்வாறான அபாய நிலைமைகளை ஏற்படுத்துவது போலவே மறைமுகவாகவும் மக்களினதும், சமூகத்தினதும் நீண்ட கால ஆரோக்கியத்தில் பாரியளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஒரு சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். சிறு குழந்தைகளுக்கு செலுத்தப்படும் சொட்டு மருந்துகளினதும், தடுப்பூசிகளினதும் தட்டுப்பாட்டால், இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போலியோ, காச நோய் போன்றவை மீண்டும் தலைதூக்கத் தொடங்கும். மின்சாரத் தடை காரணமாக கடைகளில் இயங்காத நிலையிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டுப்போன உணவுகளை மக்கள் உட்கொள்வதால் உணவு நஞ்சாகி மீண்டும் வாந்திபேதி பரவும். அவ்வாறான சூழ்நிலையில் மருந்துகளும், சேலைனும் இல்லாத நிலையில் அந்த நோயாளிகளைப் பிழைக்க வைப்பது கடினம். அவ்வாறே பாலியல் நோய்களும் இனி இலங்கையில் வேகமாக அதிகரிக்கும். பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு வீழ்ந்துள்ள நிலைமையில் பணத்துக்காக மாத்திரமல்லாமல் மருந்துக்காகவும், ஒரு ரொட்டித் துண்டுக்காகவும் கூட உடலை விற்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அதுவும் இலங்கையில் அதிகரிக்கும்.

    அடுத்ததாக, இந்த நெருக்கடிகளால் நாடு முழுவதும் மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமது பெற்றோரை, குழந்தைகளை மருந்தில்லாமல் சாகக் கொடுத்து விட்டோம் என்ற உணர்வு ஒருவருக்குத் தோன்றுவது எவ்வளவு கொடூரமானது. அவ்வாறாக உணவுகளும், மருந்துகளுமில்லாமல் தமது கண்முன்னே தமது உறவுகளைச் சாகக் கொடுத்து விட்டோமே என்ற மன உளைச்சலில் பலரும் தற்கொலையை நாடி வருகிறார்கள். இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும்.


    ஒரு நாட்டின் சுகாதார சேவை சீர்குலைந்தால் பொதுவாக இவ்வாறெல்லாம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், ஒரு நாட்டில் மருந்துத் தட்டுப்பாட்டால் நோயாளிகள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, அந்த நாட்டின் நிர்வாகத் திறனின்மையையே குறிக்கிறது. ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை தற்செயலாகவோ, மிக அண்மையிலோ ஏற்படக் கூடிய ஒன்றல்ல. இலங்கையில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்பது ஒரு வருடத்துக்கு முன்பே அரசாங்கத்துக்கும், ஆளுபவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது என்றபோதிலும், அரசாங்கம் மருந்துகளுக்குத் தேவையான பணத்தை அப்போது ஒதுக்கி வைக்கத் தவறி விட்டது. அதன் பலிகடாக்களாக தற்போது நாட்டு மக்கள் ஆகியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையையும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலைத்தேய நாடுகளில் இவ்வாறு நேர்ந்திருந்தால் அந்த நாடுகளின் நீதிமன்றம் அதற்குக் காரணமானவர்களை கூண்டிலேற்றியிருக்கும்.

    இலங்கையிலோ, இப்போதும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் தமது பதவிகளையும், சொத்துகளையும் பாதுகாக்கக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர இந்த அபாய நிலைமையைக் குறித்து யாரும் பேசுவதாக இல்லை. இத்தனைக்கும் மருத்துவ நிபுணர்களாக இருந்து அமைச்சர்களான கணிசமானோர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எவருமே மக்கள் நலனைக் குறித்து கவலைப்படுவதாகவோ இதைக் குறித்துப் பேசுவதாகவோ இல்லை. இப்படிப்பட்ட ஆளுபவர்களையோ, அமைச்சர்களையோ, இந்த நிலைமைக்குக் காரணமானவர்களையோ எதிர்த்துக் கேட்க யாருமற்ற காரணத்தால் இப்போதும் மக்களின் உயிர்களோடு விளையாடி அவர்களைப் பரிதவிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்கிறது அரசாங்கம்.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 22.04.2022





Wednesday, April 20, 2022

இலங்கையின் ஏப்ரல் புரட்சி - எம்.ரிஷான் ஷெரீப்

  

 
இலங்கையில், கொழும்பு கடற்கரையில் ஏப்ரல் ஒன்பதாம் திகதி பொதுமக்கள் ஒன்று கூடி ஆரம்பித்துள்ள போராட்டம் இப்போது வரை நீண்டு கொண்டேயிருக்கிறது. இப்படியொரு போராட்டம் ஆரம்பிக்கப்படப் போவதை அறிந்து கொண்ட அரசாங்கம், வழமையாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பதிலாக இந்த வருடம் ஒன்பதாம் திகதியே அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை வழங்குவதாக அறிவித்து அனைவரையும் ஊர்களுக்குப் போக உத்தரவிட்டிருந்தது. கொழும்புதான் தலைநகரம் என்பதால், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் கொழும்புக்கு வந்து தங்கி பணி புரிந்து வருகிறார்கள். அரசின் அந்த உத்தரவுக்குப் பிறகு மக்கள் கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் போவதற்குப் பதிலாக, சொந்த ஊர்களிலிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு கொழும்புக்கு வந்து கொழும்பில் இருந்தவர்களோடு சேர்ந்து கடற்கரையில் தங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

    ஆகவே போராளிகள் மத்தியில் அரசாங்கம் வாடகைக்கு எடுத்த குண்டர்களை அனுப்பி பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, வாகனங்களை எரித்தல், போலிஸுக்கும், இராணுவத்துக்கும், பொதுமக்களுக்குமிடையே கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல், இணையத்தொடர்பையும், சமூக வலைத்தளங்களையும் முடக்குதல், இனக் கலவரங்களைத் தூண்ட முற்படுதல், அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்புதல் போன்ற பல முட்டுக்கட்டைகளை அரசாங்கம் பொதுமக்களின் போராட்டத்தை நிறுத்துவதற்காகப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு மக்கள் பின்வாங்குவார்கள் என்பதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    என்றாலும் மக்கள் பின்வாங்குவதாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு ஏமாந்து இன்று பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மத்தியில் தெருவில் நிற்கும் மக்களின் இந்தப் போராட்டம் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இது முடிவுக்கு வருவதாக இல்லை. இதுவரை காலமும் அரசாங்கம் பிரயோகித்து வந்த அனைத்து சர்வாதிகாரங்களையும், திணித்தல்களையும் மக்கள் பொறுத்துக் கொண்டே வந்தார்கள். மக்கள் பொறுமையாக இருக்க இருக்க அரசாங்கமும் தொடர்ந்து மக்களைத் தாக்கிக் கொண்டே வந்தது. அது மக்களைத் தரையில் வீழ்த்தி கழுத்தை நெரிக்கும்போதுதான் ‘நமது அரசாங்கமே நம்மைக் கொல்லப் பார்க்கிறது’ என்பது மக்களுக்கு உரைத்தது. அந்தப் புள்ளியில்தான் மக்கள் ஒன்றாகத் திரண்டு எழுந்திருக்கிறார்கள்.



    கொழும்பு கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது எந்தவொரு அரசியல் கட்சியாலோ, தனி நபராலோ ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நூறு சதவீதம் முழுமையாக மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் நாடு முழுவதிலுமிருந்து சுயேச்சையாகவே கிளம்பி வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் போன்ற பேதங்களற்று, இன, மத, ஜாதிபேதமற்று மக்கள் அனைவரும் அடைமழைக்கு மத்தியிலும் இரவும், பகலும் ஒன்றாகச் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடமே இப்போது சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவ நிலையம் போன்றவற்றை உள்ளடக்கிய ‘கோட்டா கோ’ எனும் மாதிரி கிராமமாக உருமாறியிருக்கிறது. அந்தக் கிராமத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல மொழிகளைப் பேசுபவர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் அந்தப் போராட்டக்களம் மக்களால் மிகவும் சுத்தமாகவே பேணப்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    ஒற்றுமை, சுய ஒழுங்கு, விடாமுயற்சி, கொடை போன்றவற்றை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் இறுக்கமாகப் பற்றியிருக்கிறார்கள். மக்கள் இந்தளவு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்தப் போராட்டக் களத்துக்குத் தேவையான பொருட்களை, உணவுகளை, கூடாரங்களை, முதலுதவிப் பொருட்களை, சேவைகளை என தம்மால் இயன்ற அனைத்தையும் இலவசமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்தவை. மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களுக்காக இலவசமாக வாதாட சட்டத்தரணிகளும், சிகிச்சையளிக்க மருத்துவர்களும் மக்களுடன் சேர்ந்து காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இவ்வாறு செய்யத் தூண்டியது எது? கடந்த ஓரிரு வாரங்களாகத் தொடரும் அந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் இதுவரை சாதித்தது என்ன?

    மக்கள் தமது அடிமை நிலையிலிருந்து மீண்டு, இலங்கை அரசியல் அமைப்பை மாற்றத்தான் ஒன்றாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற்றிருந்த அரசு தற்போது தனது பெரும்பான்மை ஆதரவையும், செல்வாக்கையும் இழந்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான முக்கிய புள்ளியான மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைப் பதவி விலகச் செய்து இலங்கையின் சிரேஷ்ட பொருளியல் நிபுணர்களில் ஒருவரான கலாநிதி நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு அந்தப் போராட்டத்துக்கு இருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் தவிர்த்து உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்த அந்தக் குடும்பத்திலிருந்த ஏனைய அனைவரும் பதவிகளை இழந்திருக்கிறார்கள். அமைச்சர்களான ஊழல் பேர்வழிகளும், மோசடி அரசியல்வாதிகளும் பகிரங்கமாகவும், சுதந்திரமாகவும் மக்கள் மத்தியில் நடமாட முடியாத சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஜனாதிபதி முக்கியமானவர்களை நேரில் சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்தப் போராட்டத்தினால் கிடைத்த இந்த வெற்றிகள் அனைத்துமே பிரதான வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் சில எட்டுகள் மாத்திரம்தான். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும், ஜனாதிபதி கோத்தாபயவினதும் பதவிகள் பறிக்கப்பட்டு, ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சியிலிருந்து இலங்கை முழுமையாக மீண்டு, பொதுமக்களுக்கு உரித்தான ஒழுங்கானதும் நேர்மையானதுமான ஜனநாயக ஆட்சி உருவாகும் நாளைத்தான் மக்கள் முழுமையான வெற்றியை அடைந்த நாளாகக் கருதுவார்கள்.


    அத்தோடு ராஜபக்‌ஷ ஆட்சியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், எண்ணற்ற மனிதர்களுக்கும் என்னவானது என்பது குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆகவே, அந்தப் போராட்டம் வெற்றியடைந்து தம்மை அடிமைகளாக வைத்திருக்கும் ராஜபக்‌ஷ ஆட்சி பதவியிறங்கியதுமே மக்களின் அடுத்த போராட்டம் தொடரப் போகிறது. அது நாட்டில் கொள்ளையடித்த அனைத்து சொத்துகளையும் ராஜபக்‌ஷ குடும்பத்திடமிருந்தும், ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்கும் போராட்டம். அதிலும் வென்றால், அத்தனை சொத்துகளும் மீண்டும் திரும்பக் கிடைத்தால் மாத்திரம்தான் இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் முழுமையான மீட்சி கிடைக்கும்.

    இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் எப்போது முழுமையான வெற்றி பெறும் என்பது இந்த மக்கள் போராளிகளுக்குத் தெரியாது. அது இன்றோ நாளையாகவோ இருக்கக் கூடும். பல ஆண்டுகள் கூட கழியலாம். அந்தப் போராட்டத்தின் முதல் எட்டு தோல்வியடையக் கூடும். பத்தாயிரமாவது எட்டு கூட தோல்வியடையக் கூடும். ஆனால் எப்போதாவது வெற்றியளிக்கும் ஒரு தருணம் வந்தே தீரும். அன்று இந்தப் போராளிகள் எவரும் உயிருடன் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றியை அவர்களது சந்ததிகள் நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆகவேதான் தாம் தொடங்கிய போதிருந்த போராட்டத்தின் வீரியத்தை நீர்த்துப் போக விடாமல் இப்போது வரை, இந்தத் தருணம் வரை அந்த மக்கள் போராளிகள் பேணிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆசியாவினதும், இலங்கையினதும் வரலாற்றில் இந்த ஏப்ரல் 2022 இற்கு ஒரு அழுத்தமானதும், காத்திரமானதும், பெருமையானதுமான இடமிருக்கும். இந்தக் கால கட்டத்தில் நாமும் அந்தப் போராளிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவே பெருமிதம் தருகிறது, அல்லவா?

________________________________________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 18.04.2022







Wednesday, April 13, 2022

இலங்கையிலிருந்து தப்பிச் செல்லும் ராஜபக்‌ஷவின் உறவுகள் - எம். ரிஷான் ஷெரீப்

     இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றும் போதெல்லாம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகளை வழங்கி வந்ததுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த வாரம் கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பசில், சமல், நாமல் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ராஜபக்‌ஷ குடும்பம் அதிகாரத்திலிருந்த காலப்பகுதி முழுவதும் அவர்கள் செய்த ஊழல்களினதும், மோசடிகளினதும் விளைவாகும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.

            ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே சரிவது இது முதற்தடவையல்ல. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுறுவதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற ஊழல்களும் காரணமாக இருந்தன. அந்தக் குடும்பத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்களையும், பண மோசடிகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மிதமிஞ்சியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாமல் ராஜபக்‌ஷ கத்தார் தேசத்திலுள்ள ALBG எனும் நிறுவனத்தின் நிதி இயக்குனராகப் பதவி வகிக்கிறார். இலங்கையானது டாலர்கள் இல்லாமல் திவாலாகியுள்ள நிலைமையில் இலங்கையிலிருந்த டாலர்கள் எங்கே போயிருக்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாகும்.


    2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியதோடு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீள்வருகைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. அப்போது இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் ராஜபக்‌ஷ குடும்பமே உள்ளதாக இப்போதும் குற்றம் சாட்டப்படும் நிலையில் அதைக் குறித்து தெளிவானதும், விரிவானதும், வெளிப்படையானதுமான விசாரணையை மேற்கொள்ள அரசாங்கம் தயங்கி வருவது அந்தக் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

        2019 ஆம் ஆண்டில் கடுமையான சிங்கள தேசியவாத பாதையில் பயணித்த கோத்தாபய ராஜபக்‌ஷ பேரினவாதத்தைத் தூண்டும் விதத்தில் நடந்து நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுத்தார். அந்தப் பேரினவாத செயற்பாடு பலனளித்ததால், தேர்தலில் வென்று ஜனாதிபதியானதுமே இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நீக்கி, ஜனாதிபதிக்கு மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் வகையில் இருபதாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்து அதிகாரங்களையும் தன் வசமாக்கியுள்ளார்.

    இவ்வாறாக ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதோடு சர்வ அதிகாரங்களோடும் நாட்டை மிகவும் தன்னிச்சையான திசையில் இப்போது வரை வழிநடத்தி வருகிறார். இவையனைத்தும் மக்களுக்குத் தெரிய வந்துள்ள நிலையில், அந்தக் குடும்பத்தின் மீது மக்கள் கடும்வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமரும், ஜனாதிபதியும் தவிர்ந்த ஏனைய ராஜபக்‌ஷ குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


          உலகத் தலைவர்களின் இரகசிய சொத்து விபரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வான பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணத்தில் குற்றவாளியாக இடம்பெற்றுள்ளவரும், இலங்கைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உறவினருமான நிருபமா ராஜபக்‌ஷ கடந்த வாரம் இலங்கையிலிருந்து அவ்வாறு இரகசியமாக வெளியேறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நீர்வழங்கல் பிரதியமைச்சராகக் கடமையாற்றிய நிருபமா ராஜபக்‌ஷவும், கணவரான திருக்குமார் நடேசனும் அமெரிக்கா, நியூஸிலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் எட்டு நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதையும், அவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்பட்டுள்ள 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்பலப்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து இலங்கையில் கண்துடைப்பான விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அரசியல் தலையீடுகளின் காரணமாக இதுவரை எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

    அவரைப் போலவே ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும், அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிஸ்ஸங்க சேனாதிபதியும் இலங்கையை விட்டு இரவோடிரவாக தப்பித்துச் சென்றிருக்கிறார். மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலைக்கு அனுமதி வழங்கியமை மற்றும் 355 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றமை போன்ற வழக்குகளில் சிக்கியிருந்த நிஸ்ஸங்கவை, கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் வழக்குகளிலிருந்து விடுவித்தார். தொடர்ந்து அவர் ஜனாதிபதியோடு நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததோடு, தற்போது ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலைமையில் தனது குடும்பத்தோடு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையத்தினூடாகச் செல்லும் போது, மேலிட உத்தரவின் கீழ் விமான நிலையத்திலுள்ள தானியங்கி கேமராக்கள் எதுவும் செயற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே தற்போது நாட்டை விட்டுச் செல்ல முடியாத நிலையிலுள்ள அமைச்சர்கள் பலரும் தமது குடும்பத்தினரோடு நாட்டிலுள்ள முன்னணி ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். என்றாலும் இலங்கையில் தற்போது நிதியமைச்சரோ, மத்திய வங்கி ஆளுநரோ, செயலாளரோ இல்லாத நிலையிலும் கடந்த வாரமும் 119 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

        இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளன. எனவே மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு தினந்தோறும் அதிகளவான பொதுமக்கள் சேர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வளையங்களுக்குள் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகமூடியணிந்த இனந்தெரியாத நபர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு வலம்வந்து பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதும் நடந்து வருகிறது. அவ்வாறான ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு ஆபத்து நேராதவாறு பாதுகாத்த போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஒன்றாக குரலெழுப்பியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டு, பொதுமக்களின் இந்தப் போராட்டத்தில் வன்முறைகளைப் பிரயோகிக்காதிருக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மக்களை ஒடுக்க அரசாங்கம் வன்முறையைப் பிரயோகிக்கிறதா என்பதைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அந்த அலுவலகம் எச்சரித்திருக்கிறது.

    கடந்த மாதம் வரைக்கும், ராஜபக்‌ஷ குடும்பமானது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாம் வாழ்ந்து வரும் சுகபோக வாழ்க்கையை புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். நாடு முழுவதும் பஞ்சமும், நெருக்கடியும், பட்டினியும் மேலோங்கியிருக்கும் நிலையில் அந்தக் குடும்பத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்களை மேலும் அவர்களை வெறுக்கச் செய்ததோடு, போராட்டங்களை மேற்கொள்ளவும் தூண்டியிருக்கின்றன. அந்தப் போராட்டங்கள் இப்போது வலுத்து வருகின்றன. ஜனாதிபதி அவர்களுக்கு மத்தியில் ஆயுததாரிகளை அனுப்பி விட்டு தைரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவர் ஆட்சிக்கு வந்தவுடனே அவருக்கு சார்பாக திருத்தியமைத்த சட்டத்தின் பிரகாரம் சர்வ அதிகாரங்களும் இப்போதும் அவர் வசம் மாத்திரமே இருக்கின்றன.

________________________________________________________________________________


mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 12.04.2022


Saturday, April 9, 2022

இலங்கையில் தீவிரமாகும் ‘மக்கள் எழுச்சி’ போராட்டம் - எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.

    மக்கள் எழுச்சி போராட்டம் தொடங்கியதன் பிறகு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன்முதலாக பாராளுமன்றம் கூடியதும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் மக்கள் ஒன்று கூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு வேளையில் பாராளுமன்றத்தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. சாகும்தருவாயிலுள்ள நாயின் உடலிலிருந்து உண்ணிகள் மெதுவாக அகன்று விடுவதைப் போல, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை முடியப் போவதை அறிந்து கொண்ட கூட்டணிக் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சில தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாம் வசிக்கும் இடங்களின் பிரதான நகரங்களில் பொதுமக்கள் இரவும், பகலும் வெயிலிலும், மழையிலும் ஒன்று திரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கெதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.


    என்னதான் அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைத்தளங்களைத் தடை செய்திருந்தும் அனைத்து சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, அன்று பிறந்த குழந்தைகளைக் கூட கைகளில் ஏந்தியவாறு இரவும், பகலுமாக தெருவிலிறங்கி கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எந்த அரசியல் கட்சியையோ, அமைப்பையோ, இனத்தையோ, சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக் கொள்வதற்காக தெருக்களில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரமாண்டமானதும், ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.

    உண்மையில், உயிர் வாழ்வதற்காக மக்கள் படும் சிரமங்கள்தான் பொதுமக்களை இவ்வாறு ஒன்றுகூடச் செய்திருக்கின்றன. அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள அனுபவிக்க வேண்டியிருக்கும் இன்னல்கள்தான் அரசாங்கத்துக்கு எதிராக அவர்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றன. அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களினதும், நெருங்கிய உறவினர்களினதும், நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடிரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய் விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் கொள்ளையடித்த மக்கள் சொத்துக்களையும் களவாக எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது. இதற்காகவா கோடிக் கணக்கான மக்கள் தெருவிலிறங்கிப் போறாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

    ஆகவே மக்கள் ஒன்றாகத் திரண்டு ஜனாதிபதியினதும், பிரதமரினதும், அமைச்சர்களினதும் வீடுகளையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், அவர்களுக்கு சார்பான அதிகாரிகளும் இன்று பயந்து போயிருக்கிறார்கள். எந்தளவுக்கென்றால், மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து பதவி விலகியுள்ள ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாமல் ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, சசீந்திர ராஜபக்‌ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் தாம் பதவிகள் எவற்றையும் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியும் உடனடியாக அவசர கால சட்டத்தை நீக்கியிருக்கிறார்.

   தற்போதைய ஜனாதிபதியையும், பிரதமரையும், அவர்களது அடிவருடிகளான அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முற்றுமுழுதாக பதவிகளிலிருந்து அகற்றி விட்டு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் உட்பட அனைத்து பிரதான அமைச்சுகளிலும், துறைகளிலும் அறிவும், நிபுணத்துவமும் கொண்ட தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பதவியில் அமர்த்தத்தான் மக்கள் இவ்வளவு தூரம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, பொதுச்சொத்துக்களை தமது ஊழல்களுக்குப் பயன்படுத்தி, மோசடி செய்து முறையற்ற விதத்தில் செல்வத்தைக் குவித்து, நாட்டைக் கடனுக்குள்ளாக்கிக் கறுப்புப் பணத்தை சம்பாதித்து இலங்கையை வறுமைக் கோட்டுக்குள் தள்ளியிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்கி அவர்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய பிறகுதான் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எழுச்சியின் தற்போதைய இலக்காக இருக்கிறது.

    இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த ‘மக்கள் எழுச்சி’ போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டம் ஆகும். காவல்துறையாலும், இராணுவத்தாலும் எவ்வேளையிலும் கைது செய்யப்படக்கூடுமான, சித்திரவதை செய்யப்படக்கூடுமான ஒரு சூழ்நிலையில் பொதுமக்கள் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தெருவிலிறங்கியும், வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடியைத் தொங்க விட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.



    இலங்கையில் இன்று தெருக்கள் முழுதும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமானது, இன்னும் பெருக்கெடுத்து வழிந்தோடி ஊழல் பெருச்சாளிகளை விரைவில் இல்லாதொழிக்கும் என்று நம்பலாம். அந்த வெள்ளத்தில் அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டுப் போய் நாடே தூய்மையாகி விடும். இந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜனநாயகமும், ஊடக சுதந்திரமும், மனித உரிமைகளும் பேணப்படக்கூடிய நாடு உருவாகும். தமது உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியமுள்ள மக்கள் உருவாகுவார்கள். இந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படா விட்டாலும், வருங்காலத்தில் அது நிச்சயமாக நடக்கும். இன்று போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும் சந்ததிகள் அன்று அவ்வாறான உரிமைகளையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.

    ஜனநாயகத்திற்காக பொதுமக்கள் ஒன்று திரண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆனது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும், ஊழல்களும், சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தைப் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும்.

________________________________________________________________________________


mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 07.04.2022



இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க