Saturday, April 23, 2022

மரணத் தருவாயில் இலங்கையின் அரச மருத்துவமனைகள் - எம். ரிஷான் ஷெரீப்

 

   
மருந்துகளாலோ, சத்திர சிகிச்சைகளாலோ நிவாரணம் பெற்று உயிர் பிழைக்க வேண்டும் என்றுதானே மக்கள் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்? அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் தினந்தோறும் புதிதுபுதிதாக மருத்துவமனைகளை நாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இல்லையென்பதால் அந்த மக்களை மரணிக்க விடுவதன்றி வேறு வழியற்ற நிலைமையில் தற்போது இலங்கை உள்ளது.

    ஒரு நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்றால் சாதாரண தலைவலி மாத்திரை, முதலுதவி மருந்துகள் போன்றவை தட்டுப்பாடாக இருக்கும் என்றுதான் பொதுவாக ஏனைய நாடுகள் கருதுகின்றன. ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை வியாபித்திருக்கிறது. இந்த நிலைமையும், இதன் விளைவுகளும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்படுவதில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு அரச மருத்துவமனைக்கு எந்த வேளையில் சென்று பார்த்தாலும் பிளாஸ்டர்கள், கையுறைகள், சிறுநீர்க் குழாய்கள், மயக்க மருந்துகள் முதல் நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, விஷக்கடிகள், நீர்வெறுப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் வரை இல்லை, ஆய்வு கூட இயந்திரங்கள் வேலை செய்யவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் தேவையான பொருட்களோடு மின்சாரமுமில்லை, அவசரத்துக்கு ஆம்பூலன்ஸ், ஜெனரேட்டர்களை இயக்க டீசல் இல்லை, குடிக்கவோ சுத்திகரிக்கவோ தேவையான தண்ணீரில்லை போன்ற புலம்பல்களைத் தற்போது நீங்கள் கேட்கலாம்.



    எவருக்கேனும் விபத்தோ, மாரடைப்போ ஏற்பட்டால் அரசாங்க மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதில் அர்த்தமில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. பிரசவத்தில் சிக்கலுள்ள பெண்களுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யக் கூட வழியில்லை. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் வளர ஊக்குவிக்கும் மருந்து, ஆன்ட்டிபயாடிக்ஸ், அவசர சிகிச்சை மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் உட்பட நானூறுக்கும் அதிகமான அத்தியாவசியமான மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு இலங்கையில் நிலவி வருகிறது. புற்றுநோய், தலசீமியா, சிறுநீரக வியாதிகள் போன்ற தொற்றாநோய்களுக்கான மருந்துகளின் தட்டுப்பாடு பல வாரங்களாக நீடித்திருக்கும் நிலையில் எண்ணிலடங்காத பல நோயாளிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான மின்சாரத் தட்டுப்பாட்டால் குளிர்சாதன வசதியின்றி கையிருப்பில் இருக்கும் ஊசி மருந்துகளும், ஏனைய மருந்துகளும் கூட வீணாகக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆய்வுகூட பரிசோதனைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதார அமைச்சு கூடிய விரைவில் இந்தப் பொருட்களையும், மருந்துகளையும், சத்திர சிகிச்சை உபகரணங்களையும் அரச மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெருவிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ‘அரச மருத்துவமனைகளில்தானே மருந்துகளில்லை, தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்கலாமே’ என்று யோசிப்பீர்கள். அரச மருத்துவமனைகளில் மருந்துகள் தீர்ந்ததும் அயலிலிருக்கும் மருந்தகங்களிலிருந்தும், தனியார் மருத்துவமனைகளிலிருந்தும்தான் அந்த மருந்துகள் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள் எனப்படுபவை எவராலும் அதிக காலத்துக்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடியாதவை என்பதோடு எளிதில் தீர்ந்து விடக் கூடியவை என்பதால், தனியாரின் கையிருப்பில் இருப்பவையும் வெகுவிரைவாகத் தீர்ந்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை கொவிட், சுனாமி மற்றும் போர்க்காலங்களில் ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்திருக்கிறது எனும்போது நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும்.



    மருந்துத் தட்டுப்பாடானது கண்கூடாக நேரடியாகக் காணக்கூடிய இவ்வாறான அபாய நிலைமைகளை ஏற்படுத்துவது போலவே மறைமுகவாகவும் மக்களினதும், சமூகத்தினதும் நீண்ட கால ஆரோக்கியத்தில் பாரியளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஒரு சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். சிறு குழந்தைகளுக்கு செலுத்தப்படும் சொட்டு மருந்துகளினதும், தடுப்பூசிகளினதும் தட்டுப்பாட்டால், இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போலியோ, காச நோய் போன்றவை மீண்டும் தலைதூக்கத் தொடங்கும். மின்சாரத் தடை காரணமாக கடைகளில் இயங்காத நிலையிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டுப்போன உணவுகளை மக்கள் உட்கொள்வதால் உணவு நஞ்சாகி மீண்டும் வாந்திபேதி பரவும். அவ்வாறான சூழ்நிலையில் மருந்துகளும், சேலைனும் இல்லாத நிலையில் அந்த நோயாளிகளைப் பிழைக்க வைப்பது கடினம். அவ்வாறே பாலியல் நோய்களும் இனி இலங்கையில் வேகமாக அதிகரிக்கும். பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு வீழ்ந்துள்ள நிலைமையில் பணத்துக்காக மாத்திரமல்லாமல் மருந்துக்காகவும், ஒரு ரொட்டித் துண்டுக்காகவும் கூட உடலை விற்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அதுவும் இலங்கையில் அதிகரிக்கும்.

    அடுத்ததாக, இந்த நெருக்கடிகளால் நாடு முழுவதும் மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமது பெற்றோரை, குழந்தைகளை மருந்தில்லாமல் சாகக் கொடுத்து விட்டோம் என்ற உணர்வு ஒருவருக்குத் தோன்றுவது எவ்வளவு கொடூரமானது. அவ்வாறாக உணவுகளும், மருந்துகளுமில்லாமல் தமது கண்முன்னே தமது உறவுகளைச் சாகக் கொடுத்து விட்டோமே என்ற மன உளைச்சலில் பலரும் தற்கொலையை நாடி வருகிறார்கள். இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும்.


    ஒரு நாட்டின் சுகாதார சேவை சீர்குலைந்தால் பொதுவாக இவ்வாறெல்லாம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், ஒரு நாட்டில் மருந்துத் தட்டுப்பாட்டால் நோயாளிகள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, அந்த நாட்டின் நிர்வாகத் திறனின்மையையே குறிக்கிறது. ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை தற்செயலாகவோ, மிக அண்மையிலோ ஏற்படக் கூடிய ஒன்றல்ல. இலங்கையில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்பது ஒரு வருடத்துக்கு முன்பே அரசாங்கத்துக்கும், ஆளுபவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது என்றபோதிலும், அரசாங்கம் மருந்துகளுக்குத் தேவையான பணத்தை அப்போது ஒதுக்கி வைக்கத் தவறி விட்டது. அதன் பலிகடாக்களாக தற்போது நாட்டு மக்கள் ஆகியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையையும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலைத்தேய நாடுகளில் இவ்வாறு நேர்ந்திருந்தால் அந்த நாடுகளின் நீதிமன்றம் அதற்குக் காரணமானவர்களை கூண்டிலேற்றியிருக்கும்.

    இலங்கையிலோ, இப்போதும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் தமது பதவிகளையும், சொத்துகளையும் பாதுகாக்கக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர இந்த அபாய நிலைமையைக் குறித்து யாரும் பேசுவதாக இல்லை. இத்தனைக்கும் மருத்துவ நிபுணர்களாக இருந்து அமைச்சர்களான கணிசமானோர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எவருமே மக்கள் நலனைக் குறித்து கவலைப்படுவதாகவோ இதைக் குறித்துப் பேசுவதாகவோ இல்லை. இப்படிப்பட்ட ஆளுபவர்களையோ, அமைச்சர்களையோ, இந்த நிலைமைக்குக் காரணமானவர்களையோ எதிர்த்துக் கேட்க யாருமற்ற காரணத்தால் இப்போதும் மக்களின் உயிர்களோடு விளையாடி அவர்களைப் பரிதவிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்கிறது அரசாங்கம்.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 22.04.2022





Wednesday, April 20, 2022

இலங்கையின் ஏப்ரல் புரட்சி - எம்.ரிஷான் ஷெரீப்

  

 
இலங்கையில், கொழும்பு கடற்கரையில் ஏப்ரல் ஒன்பதாம் திகதி பொதுமக்கள் ஒன்று கூடி ஆரம்பித்துள்ள போராட்டம் இப்போது வரை நீண்டு கொண்டேயிருக்கிறது. இப்படியொரு போராட்டம் ஆரம்பிக்கப்படப் போவதை அறிந்து கொண்ட அரசாங்கம், வழமையாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பதிலாக இந்த வருடம் ஒன்பதாம் திகதியே அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை வழங்குவதாக அறிவித்து அனைவரையும் ஊர்களுக்குப் போக உத்தரவிட்டிருந்தது. கொழும்புதான் தலைநகரம் என்பதால், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் கொழும்புக்கு வந்து தங்கி பணி புரிந்து வருகிறார்கள். அரசின் அந்த உத்தரவுக்குப் பிறகு மக்கள் கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் போவதற்குப் பதிலாக, சொந்த ஊர்களிலிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு கொழும்புக்கு வந்து கொழும்பில் இருந்தவர்களோடு சேர்ந்து கடற்கரையில் தங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

    ஆகவே போராளிகள் மத்தியில் அரசாங்கம் வாடகைக்கு எடுத்த குண்டர்களை அனுப்பி பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, வாகனங்களை எரித்தல், போலிஸுக்கும், இராணுவத்துக்கும், பொதுமக்களுக்குமிடையே கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல், இணையத்தொடர்பையும், சமூக வலைத்தளங்களையும் முடக்குதல், இனக் கலவரங்களைத் தூண்ட முற்படுதல், அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்புதல் போன்ற பல முட்டுக்கட்டைகளை அரசாங்கம் பொதுமக்களின் போராட்டத்தை நிறுத்துவதற்காகப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு மக்கள் பின்வாங்குவார்கள் என்பதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    என்றாலும் மக்கள் பின்வாங்குவதாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு ஏமாந்து இன்று பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மத்தியில் தெருவில் நிற்கும் மக்களின் இந்தப் போராட்டம் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இது முடிவுக்கு வருவதாக இல்லை. இதுவரை காலமும் அரசாங்கம் பிரயோகித்து வந்த அனைத்து சர்வாதிகாரங்களையும், திணித்தல்களையும் மக்கள் பொறுத்துக் கொண்டே வந்தார்கள். மக்கள் பொறுமையாக இருக்க இருக்க அரசாங்கமும் தொடர்ந்து மக்களைத் தாக்கிக் கொண்டே வந்தது. அது மக்களைத் தரையில் வீழ்த்தி கழுத்தை நெரிக்கும்போதுதான் ‘நமது அரசாங்கமே நம்மைக் கொல்லப் பார்க்கிறது’ என்பது மக்களுக்கு உரைத்தது. அந்தப் புள்ளியில்தான் மக்கள் ஒன்றாகத் திரண்டு எழுந்திருக்கிறார்கள்.



    கொழும்பு கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது எந்தவொரு அரசியல் கட்சியாலோ, தனி நபராலோ ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நூறு சதவீதம் முழுமையாக மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் நாடு முழுவதிலுமிருந்து சுயேச்சையாகவே கிளம்பி வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் போன்ற பேதங்களற்று, இன, மத, ஜாதிபேதமற்று மக்கள் அனைவரும் அடைமழைக்கு மத்தியிலும் இரவும், பகலும் ஒன்றாகச் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடமே இப்போது சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவ நிலையம் போன்றவற்றை உள்ளடக்கிய ‘கோட்டா கோ’ எனும் மாதிரி கிராமமாக உருமாறியிருக்கிறது. அந்தக் கிராமத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல மொழிகளைப் பேசுபவர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் அந்தப் போராட்டக்களம் மக்களால் மிகவும் சுத்தமாகவே பேணப்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    ஒற்றுமை, சுய ஒழுங்கு, விடாமுயற்சி, கொடை போன்றவற்றை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் இறுக்கமாகப் பற்றியிருக்கிறார்கள். மக்கள் இந்தளவு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்தப் போராட்டக் களத்துக்குத் தேவையான பொருட்களை, உணவுகளை, கூடாரங்களை, முதலுதவிப் பொருட்களை, சேவைகளை என தம்மால் இயன்ற அனைத்தையும் இலவசமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்தவை. மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களுக்காக இலவசமாக வாதாட சட்டத்தரணிகளும், சிகிச்சையளிக்க மருத்துவர்களும் மக்களுடன் சேர்ந்து காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இவ்வாறு செய்யத் தூண்டியது எது? கடந்த ஓரிரு வாரங்களாகத் தொடரும் அந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் இதுவரை சாதித்தது என்ன?

    மக்கள் தமது அடிமை நிலையிலிருந்து மீண்டு, இலங்கை அரசியல் அமைப்பை மாற்றத்தான் ஒன்றாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற்றிருந்த அரசு தற்போது தனது பெரும்பான்மை ஆதரவையும், செல்வாக்கையும் இழந்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான முக்கிய புள்ளியான மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைப் பதவி விலகச் செய்து இலங்கையின் சிரேஷ்ட பொருளியல் நிபுணர்களில் ஒருவரான கலாநிதி நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு அந்தப் போராட்டத்துக்கு இருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் தவிர்த்து உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்த அந்தக் குடும்பத்திலிருந்த ஏனைய அனைவரும் பதவிகளை இழந்திருக்கிறார்கள். அமைச்சர்களான ஊழல் பேர்வழிகளும், மோசடி அரசியல்வாதிகளும் பகிரங்கமாகவும், சுதந்திரமாகவும் மக்கள் மத்தியில் நடமாட முடியாத சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஜனாதிபதி முக்கியமானவர்களை நேரில் சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்தப் போராட்டத்தினால் கிடைத்த இந்த வெற்றிகள் அனைத்துமே பிரதான வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் சில எட்டுகள் மாத்திரம்தான். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும், ஜனாதிபதி கோத்தாபயவினதும் பதவிகள் பறிக்கப்பட்டு, ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சியிலிருந்து இலங்கை முழுமையாக மீண்டு, பொதுமக்களுக்கு உரித்தான ஒழுங்கானதும் நேர்மையானதுமான ஜனநாயக ஆட்சி உருவாகும் நாளைத்தான் மக்கள் முழுமையான வெற்றியை அடைந்த நாளாகக் கருதுவார்கள்.


    அத்தோடு ராஜபக்‌ஷ ஆட்சியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், எண்ணற்ற மனிதர்களுக்கும் என்னவானது என்பது குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆகவே, அந்தப் போராட்டம் வெற்றியடைந்து தம்மை அடிமைகளாக வைத்திருக்கும் ராஜபக்‌ஷ ஆட்சி பதவியிறங்கியதுமே மக்களின் அடுத்த போராட்டம் தொடரப் போகிறது. அது நாட்டில் கொள்ளையடித்த அனைத்து சொத்துகளையும் ராஜபக்‌ஷ குடும்பத்திடமிருந்தும், ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்கும் போராட்டம். அதிலும் வென்றால், அத்தனை சொத்துகளும் மீண்டும் திரும்பக் கிடைத்தால் மாத்திரம்தான் இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் முழுமையான மீட்சி கிடைக்கும்.

    இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் எப்போது முழுமையான வெற்றி பெறும் என்பது இந்த மக்கள் போராளிகளுக்குத் தெரியாது. அது இன்றோ நாளையாகவோ இருக்கக் கூடும். பல ஆண்டுகள் கூட கழியலாம். அந்தப் போராட்டத்தின் முதல் எட்டு தோல்வியடையக் கூடும். பத்தாயிரமாவது எட்டு கூட தோல்வியடையக் கூடும். ஆனால் எப்போதாவது வெற்றியளிக்கும் ஒரு தருணம் வந்தே தீரும். அன்று இந்தப் போராளிகள் எவரும் உயிருடன் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றியை அவர்களது சந்ததிகள் நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆகவேதான் தாம் தொடங்கிய போதிருந்த போராட்டத்தின் வீரியத்தை நீர்த்துப் போக விடாமல் இப்போது வரை, இந்தத் தருணம் வரை அந்த மக்கள் போராளிகள் பேணிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆசியாவினதும், இலங்கையினதும் வரலாற்றில் இந்த ஏப்ரல் 2022 இற்கு ஒரு அழுத்தமானதும், காத்திரமானதும், பெருமையானதுமான இடமிருக்கும். இந்தக் கால கட்டத்தில் நாமும் அந்தப் போராளிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவே பெருமிதம் தருகிறது, அல்லவா?

________________________________________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 18.04.2022







Wednesday, April 13, 2022

இலங்கையிலிருந்து தப்பிச் செல்லும் ராஜபக்‌ஷவின் உறவுகள் - எம். ரிஷான் ஷெரீப்

     இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றும் போதெல்லாம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகளை வழங்கி வந்ததுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த வாரம் கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பசில், சமல், நாமல் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ராஜபக்‌ஷ குடும்பம் அதிகாரத்திலிருந்த காலப்பகுதி முழுவதும் அவர்கள் செய்த ஊழல்களினதும், மோசடிகளினதும் விளைவாகும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.

            ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே சரிவது இது முதற்தடவையல்ல. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுறுவதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற ஊழல்களும் காரணமாக இருந்தன. அந்தக் குடும்பத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்களையும், பண மோசடிகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மிதமிஞ்சியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாமல் ராஜபக்‌ஷ கத்தார் தேசத்திலுள்ள ALBG எனும் நிறுவனத்தின் நிதி இயக்குனராகப் பதவி வகிக்கிறார். இலங்கையானது டாலர்கள் இல்லாமல் திவாலாகியுள்ள நிலைமையில் இலங்கையிலிருந்த டாலர்கள் எங்கே போயிருக்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாகும்.


    2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியதோடு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீள்வருகைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. அப்போது இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் ராஜபக்‌ஷ குடும்பமே உள்ளதாக இப்போதும் குற்றம் சாட்டப்படும் நிலையில் அதைக் குறித்து தெளிவானதும், விரிவானதும், வெளிப்படையானதுமான விசாரணையை மேற்கொள்ள அரசாங்கம் தயங்கி வருவது அந்தக் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

        2019 ஆம் ஆண்டில் கடுமையான சிங்கள தேசியவாத பாதையில் பயணித்த கோத்தாபய ராஜபக்‌ஷ பேரினவாதத்தைத் தூண்டும் விதத்தில் நடந்து நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுத்தார். அந்தப் பேரினவாத செயற்பாடு பலனளித்ததால், தேர்தலில் வென்று ஜனாதிபதியானதுமே இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நீக்கி, ஜனாதிபதிக்கு மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் வகையில் இருபதாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்து அதிகாரங்களையும் தன் வசமாக்கியுள்ளார்.

    இவ்வாறாக ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதோடு சர்வ அதிகாரங்களோடும் நாட்டை மிகவும் தன்னிச்சையான திசையில் இப்போது வரை வழிநடத்தி வருகிறார். இவையனைத்தும் மக்களுக்குத் தெரிய வந்துள்ள நிலையில், அந்தக் குடும்பத்தின் மீது மக்கள் கடும்வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமரும், ஜனாதிபதியும் தவிர்ந்த ஏனைய ராஜபக்‌ஷ குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


          உலகத் தலைவர்களின் இரகசிய சொத்து விபரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வான பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணத்தில் குற்றவாளியாக இடம்பெற்றுள்ளவரும், இலங்கைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உறவினருமான நிருபமா ராஜபக்‌ஷ கடந்த வாரம் இலங்கையிலிருந்து அவ்வாறு இரகசியமாக வெளியேறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நீர்வழங்கல் பிரதியமைச்சராகக் கடமையாற்றிய நிருபமா ராஜபக்‌ஷவும், கணவரான திருக்குமார் நடேசனும் அமெரிக்கா, நியூஸிலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் எட்டு நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதையும், அவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்பட்டுள்ள 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்பலப்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து இலங்கையில் கண்துடைப்பான விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அரசியல் தலையீடுகளின் காரணமாக இதுவரை எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

    அவரைப் போலவே ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும், அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிஸ்ஸங்க சேனாதிபதியும் இலங்கையை விட்டு இரவோடிரவாக தப்பித்துச் சென்றிருக்கிறார். மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலைக்கு அனுமதி வழங்கியமை மற்றும் 355 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றமை போன்ற வழக்குகளில் சிக்கியிருந்த நிஸ்ஸங்கவை, கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் வழக்குகளிலிருந்து விடுவித்தார். தொடர்ந்து அவர் ஜனாதிபதியோடு நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததோடு, தற்போது ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலைமையில் தனது குடும்பத்தோடு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையத்தினூடாகச் செல்லும் போது, மேலிட உத்தரவின் கீழ் விமான நிலையத்திலுள்ள தானியங்கி கேமராக்கள் எதுவும் செயற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே தற்போது நாட்டை விட்டுச் செல்ல முடியாத நிலையிலுள்ள அமைச்சர்கள் பலரும் தமது குடும்பத்தினரோடு நாட்டிலுள்ள முன்னணி ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். என்றாலும் இலங்கையில் தற்போது நிதியமைச்சரோ, மத்திய வங்கி ஆளுநரோ, செயலாளரோ இல்லாத நிலையிலும் கடந்த வாரமும் 119 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

        இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளன. எனவே மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு தினந்தோறும் அதிகளவான பொதுமக்கள் சேர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வளையங்களுக்குள் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகமூடியணிந்த இனந்தெரியாத நபர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு வலம்வந்து பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதும் நடந்து வருகிறது. அவ்வாறான ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு ஆபத்து நேராதவாறு பாதுகாத்த போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஒன்றாக குரலெழுப்பியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டு, பொதுமக்களின் இந்தப் போராட்டத்தில் வன்முறைகளைப் பிரயோகிக்காதிருக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மக்களை ஒடுக்க அரசாங்கம் வன்முறையைப் பிரயோகிக்கிறதா என்பதைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அந்த அலுவலகம் எச்சரித்திருக்கிறது.

    கடந்த மாதம் வரைக்கும், ராஜபக்‌ஷ குடும்பமானது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாம் வாழ்ந்து வரும் சுகபோக வாழ்க்கையை புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். நாடு முழுவதும் பஞ்சமும், நெருக்கடியும், பட்டினியும் மேலோங்கியிருக்கும் நிலையில் அந்தக் குடும்பத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்களை மேலும் அவர்களை வெறுக்கச் செய்ததோடு, போராட்டங்களை மேற்கொள்ளவும் தூண்டியிருக்கின்றன. அந்தப் போராட்டங்கள் இப்போது வலுத்து வருகின்றன. ஜனாதிபதி அவர்களுக்கு மத்தியில் ஆயுததாரிகளை அனுப்பி விட்டு தைரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவர் ஆட்சிக்கு வந்தவுடனே அவருக்கு சார்பாக திருத்தியமைத்த சட்டத்தின் பிரகாரம் சர்வ அதிகாரங்களும் இப்போதும் அவர் வசம் மாத்திரமே இருக்கின்றன.

________________________________________________________________________________


mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 12.04.2022


Saturday, April 9, 2022

இலங்கையில் தீவிரமாகும் ‘மக்கள் எழுச்சி’ போராட்டம் - எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.

    மக்கள் எழுச்சி போராட்டம் தொடங்கியதன் பிறகு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன்முதலாக பாராளுமன்றம் கூடியதும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் மக்கள் ஒன்று கூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு வேளையில் பாராளுமன்றத்தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. சாகும்தருவாயிலுள்ள நாயின் உடலிலிருந்து உண்ணிகள் மெதுவாக அகன்று விடுவதைப் போல, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை முடியப் போவதை அறிந்து கொண்ட கூட்டணிக் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சில தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாம் வசிக்கும் இடங்களின் பிரதான நகரங்களில் பொதுமக்கள் இரவும், பகலும் வெயிலிலும், மழையிலும் ஒன்று திரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கெதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.


    என்னதான் அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைத்தளங்களைத் தடை செய்திருந்தும் அனைத்து சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, அன்று பிறந்த குழந்தைகளைக் கூட கைகளில் ஏந்தியவாறு இரவும், பகலுமாக தெருவிலிறங்கி கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எந்த அரசியல் கட்சியையோ, அமைப்பையோ, இனத்தையோ, சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக் கொள்வதற்காக தெருக்களில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரமாண்டமானதும், ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.

    உண்மையில், உயிர் வாழ்வதற்காக மக்கள் படும் சிரமங்கள்தான் பொதுமக்களை இவ்வாறு ஒன்றுகூடச் செய்திருக்கின்றன. அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள அனுபவிக்க வேண்டியிருக்கும் இன்னல்கள்தான் அரசாங்கத்துக்கு எதிராக அவர்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றன. அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களினதும், நெருங்கிய உறவினர்களினதும், நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடிரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய் விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் கொள்ளையடித்த மக்கள் சொத்துக்களையும் களவாக எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது. இதற்காகவா கோடிக் கணக்கான மக்கள் தெருவிலிறங்கிப் போறாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

    ஆகவே மக்கள் ஒன்றாகத் திரண்டு ஜனாதிபதியினதும், பிரதமரினதும், அமைச்சர்களினதும் வீடுகளையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், அவர்களுக்கு சார்பான அதிகாரிகளும் இன்று பயந்து போயிருக்கிறார்கள். எந்தளவுக்கென்றால், மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து பதவி விலகியுள்ள ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாமல் ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, சசீந்திர ராஜபக்‌ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் தாம் பதவிகள் எவற்றையும் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியும் உடனடியாக அவசர கால சட்டத்தை நீக்கியிருக்கிறார்.

   தற்போதைய ஜனாதிபதியையும், பிரதமரையும், அவர்களது அடிவருடிகளான அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முற்றுமுழுதாக பதவிகளிலிருந்து அகற்றி விட்டு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் உட்பட அனைத்து பிரதான அமைச்சுகளிலும், துறைகளிலும் அறிவும், நிபுணத்துவமும் கொண்ட தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பதவியில் அமர்த்தத்தான் மக்கள் இவ்வளவு தூரம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, பொதுச்சொத்துக்களை தமது ஊழல்களுக்குப் பயன்படுத்தி, மோசடி செய்து முறையற்ற விதத்தில் செல்வத்தைக் குவித்து, நாட்டைக் கடனுக்குள்ளாக்கிக் கறுப்புப் பணத்தை சம்பாதித்து இலங்கையை வறுமைக் கோட்டுக்குள் தள்ளியிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்கி அவர்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய பிறகுதான் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எழுச்சியின் தற்போதைய இலக்காக இருக்கிறது.

    இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த ‘மக்கள் எழுச்சி’ போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டம் ஆகும். காவல்துறையாலும், இராணுவத்தாலும் எவ்வேளையிலும் கைது செய்யப்படக்கூடுமான, சித்திரவதை செய்யப்படக்கூடுமான ஒரு சூழ்நிலையில் பொதுமக்கள் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தெருவிலிறங்கியும், வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடியைத் தொங்க விட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.



    இலங்கையில் இன்று தெருக்கள் முழுதும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமானது, இன்னும் பெருக்கெடுத்து வழிந்தோடி ஊழல் பெருச்சாளிகளை விரைவில் இல்லாதொழிக்கும் என்று நம்பலாம். அந்த வெள்ளத்தில் அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டுப் போய் நாடே தூய்மையாகி விடும். இந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜனநாயகமும், ஊடக சுதந்திரமும், மனித உரிமைகளும் பேணப்படக்கூடிய நாடு உருவாகும். தமது உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியமுள்ள மக்கள் உருவாகுவார்கள். இந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படா விட்டாலும், வருங்காலத்தில் அது நிச்சயமாக நடக்கும். இன்று போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும் சந்ததிகள் அன்று அவ்வாறான உரிமைகளையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.

    ஜனநாயகத்திற்காக பொதுமக்கள் ஒன்று திரண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆனது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும், ஊழல்களும், சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தைப் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும்.

________________________________________________________________________________


mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 07.04.2022



இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க







Wednesday, April 6, 2022

இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கு - எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைப் பதவி விலகக் கோரி அனைத்துப் பொதுமக்களும் ஒன்று திரண்டு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் 31 ஆம் திகதி முன்னிரவில் கொழும்பு, மிரிஹானையிலுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவும் பொதுமக்கள் தமது கைக் குழந்தைகளையும் சுமந்து கொண்டு மெழுகுதிரிகளையும், ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரும் பதாகைகளையும் ஏந்திக் கொண்டு அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களோ, தடிகளோ இருக்கவில்லை. எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக ஒன்று சேர்ந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும், துப்பாக்கி வேட்டுகளையும் பயன்படுத்தியது இலங்கை காவல்துறை. ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் பாதைக்குக் குறுக்காக ஒரு பேரூந்து நிறுத்தப்பட்டு அதை இனந்தெரியாத ஒருவர் பற்ற வைக்கும் காணொலிகளும், போலிஸ் வாகனமொன்றைப் பற்ற வைக்கும் காணொலிகளும் சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவத் தொடங்கின. உடனடியாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு 'தீவிரவாதிகள் ஒன்று கூடித் தாக்குதல் நடத்தினர்' என்று அறிவிக்க, காவல்துறையும், இராணுவமும் அங்கிருந்த மக்களைக் கண்மூடித்தனமாகச் சுடவும், தாக்கவும், கைது செய்யவும் தொடங்கின. அந்த வாகனங்களைப் பற்ற வைக்கும் போதோ, அவை பற்றியெரியும்போதோ காவல்துறையோ, இராணுவமோ அவற்றை அணைக்க எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

   
ஒரு நாளைக்கு பதினைந்து மணித்தியாலங்களுக்கும் மேலான மின்சாரத் தடை காரணமாக மருத்துவமனைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் பலவும் கைபேசி வெளிச்சத்தில்தான் செய்யப்படுகின்றன எனும்போது இலங்கையில் தற்போது மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும். பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு இல்லாமல் நாட்டில் எதுவும் இயங்குவதில்லை. போதாதற்கு அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாடு மக்களின் கழுத்தை பட்டினியால் நெறித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இவ்வாறேனும் அமைதியான போராட்டங்களை முன்னெடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தற்போது தெருக்களில் ஒன்றுகூடும் பொதுமக்களின் மனங்களில் ஒரேயொரு நோக்கம்தான் இருக்கிறது. பட்டினியற்ற, சுமுகமாக உயிர் வாழத் தேவையான சூழலுடன் கூடிய, வரிசைகளில் பொதுமக்கள் விழுந்து மரணிக்காத அமைதியான நாடொன்றுதான் அவர்களது இலக்கு.

    இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு முதலில் பொறுப்புக் கூற வேண்டியவர் நாட்டின் ஜனாதிபதிதான். உண்மையில் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக ஆக்க 69 இலட்சம் வாக்குகளையளித்த மக்களிடையே ஜனாதிபதி மீது மூன்று விதமான நம்பிக்கைகள் இருந்தன. அவர்தான் முப்பதாண்டு கால யுத்தத்தை வென்றார் என்பது ஒன்று. இரண்டாவது, சிங்கப்பூரை ஒப்பிட்டு நகர அபிவிருத்தி தொடர்பாக அவர் முன்வைத்த வாக்குறுதிகள். மூன்றாவது அவர் முன்னர் அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பதால் தைரியமாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்துவார் என்பது.

    ஒரு நாட்டை ஆளுவதற்கு இந்தத் தகுதிகள் போதுமானதா என்று மக்கள் அப்போது யோசிக்கவில்லை. ராஜபக்‌ஷ குடும்பத்தின் அரசியல் கொள்கை இனவாதத்தையும், மத வெறியையும் பரப்பி சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்வதல்லாமல் நாட்டை முன்னேற்றுவது அல்ல என்பதை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது இயன்றளவு ஊழல்களைச் செய்து தமது குடும்பத்துக்குத் தேவையான சொத்துகளைச் சேர்த்துக் கொள்வதுதான் என்பதையும் மக்கள் அறிந்திருக்கவில்லை. இதுவரை ஒரு சதம் கூட பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்திராத அந்தக் குடும்பத்தின் வாரிசு ஒருவர் கடந்த மாதம் மக்கள் பணத்தில் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்களைச் செலவழித்து ஓவியமொன்றை வாங்கியிருக்கிறார் எனும்போது இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணம் உங்களுக்கு விளங்கும்.

    ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருட காலத்துக்குள் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைகாரர்களும், ஊழல்வாதிகளுமான அரசியல்வாதிகள் அனேகமானவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததோடு, அவர்களுக்கு உயர் பதவிகளையும் வழங்கியுள்ளார். இவ்வாறாக ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது முழுமையாகப் பொய்த்துப் போயுள்ள நிலைமையிலேயே மக்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.

    இம்மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் தெருவிலிறங்கி போராட்டம் நடத்தப் போகும் தகவல் தெரிய வந்தவுடனேயே இரண்டாம் திகதி மாலை ஆறு மணியிலிருந்து திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தார். நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கினார். தொடர்ந்து தனக்கெதிராகக் கிளம்பியுள்ள இவ்வாறான எதிர்ப்புகளைக் கண்டு பதற்றமுற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இம் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசர கால சட்டத்தை நாட்டில் பிரகடனப்படுத்தி அதிவிஷேட அரசாங்க அறிவித்தலொன்றை வெளியிட்டதோடு அந்தச் சட்டத்தைப் பிரயோகித்து அறுநூறுக்கும் அதிகமான பொதுமக்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இந்த அவசர கால நிலைமையின் போது மக்கள் ஒன்று கூடுவதற்கான, கருத்துகளைத் தெரிவிப்பதற்கான, ஒரு குழுவாக சேர்வதற்கான, நடமாடுவதற்கான, தொழில் புரிவதற்கான உரிமைகளும், சமயம், கலாசாரம், மொழி ஆகியவற்றுக்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு பிடியாணையின்றியே எவரையும் கைது செய்யும் அதிகாரமும், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சந்தேக நபர்களை எவ்வளவு காலமும் தடுத்து வைக்கலாம், சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை சாட்சிகளாகப் பயன்படுத்தலாம், தேடுதல் ஆணையில்லாமலே எந்த இடத்திலும், எந்தக் கட்டடத்திலும் தேடுதல்களை காவல்துறை மேற்கொள்ளலாம், எவரினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரச கட்டுப்பாட்டில் எடுக்கலாம் ஆகியவற்றோடு சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும், தேவையான விசாரணைகளை மேற்கொள்ளவும் இராணுவப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தோடு சட்ட மா அதிபரின் அனுமதியின்று சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்கவோ, விடுதலை செய்யவோ நீதவானுக்கு அதிகாரமில்லை போன்ற சர்வாதிகார விதிமுறைகள் அந்த அதிவிஷேட அரசாங்க அறிவித்தலில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கை குறித்து சர்வதேசத்திலிருந்து எழுந்திருக்கும் அழுத்தங்கள் மற்றும் தனக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்தவே ஜனாதிபதியால் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன என்பது எவருக்கும் விளங்கும். இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாகவே இயக்கங்களாலும், அரசியல்கட்சிகளாலும் வழிநடத்தப்பட்ட இலட்சக்கணக்கான தேசப்பற்று மிக்க இளைஞர்கள் இலங்கை அரசின் தீவிரவாத முத்திரையின் கீழ் உயிர்ப் பலி கொடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

    உண்மையில் தேசப்பற்று மிக்க இன்றைய இளைஞர் தலைமுறைக்கு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. வருங்காலத்தில் தேசத்தைப் பொறுப்பேற்கக் காத்திருப்பவர்கள் அவர்கள். பல தசாப்தங்களாக இலங்கை இழந்து கொண்டிருக்கும் இளைஞர் சக்தி, அவர்களது பலம், உத்வேகம் ஆகியவற்றின் காரணமாகத்தான் ஊழல் மிகுந்த முதிய அரசியல்வாதிகள் இப்போதும் இலங்கையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவில்லை. எனவேதான் தெருவிலிறங்கி தமது தாய்நாட்டை தற்போதைய ஆட்சியிலிருந்து மீட்க அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மீண்டும் மீண்டும் இளைஞர்களைப் பலி கொடுக்க நேர்ந்திருக்கும் கொடூரமான நிலைமையானது, இனியும் ஜனாதிபதியின் இந்த சர்வாதிகாரப் போக்கால் நேருவதற்கு இடமளிக்கக் கூடாது.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 05.04.2022

புகைப்படங்கள் - shutterstock 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க






Sunday, April 3, 2022

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகுமா இலங்கை? - எம். ரிஷான் ஷெரீப்

    இந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயஷங்கர் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதானமான ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை மிக முக்கியமான மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்தப் போகிறது என்று எதிர்வு கூறலாம். அந்த ஆறு உடன்படிக்கைகளாலும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு இடையூறும், அச்சுறுத்தலும் ஏற்படும் என்று சில ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

1. இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை அமுல்படுத்துதல்.

2. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

3. யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அனலை தீவு, நெடுந்தீவு மற்றும் நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தித் திட்டங்களை அமுல்படுத்துதல்.

4. இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.

5. காலி மாவட்டத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணினி ஆய்வு கூடங்களை ஸ்தாபித்தல்.

6. வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

    இவற்றுள் இரண்டாவது உடன்படிக்கையான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியோடு இலங்கையில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். இதை இலங்கையின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதாகக் கருதலாம். கடற்பரப்பில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்தியத்திற்குள் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் இந்த நிலையமானது மிகவும் அவசியமானதாகும். மூன்றாவது உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடனான ஒப்பந்தத்தை முறித்து, அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் சீனாவைக் கோபித்துக் கொள்ள நேரிடும் என சர்வதேச சமூகம் குரலெழுப்புகிறது. நான்காவது உடன்படிக்கையின் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் இந்தியா எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அணுகலாம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    

    உண்மையில் இந்த உடன்படிக்கைகளைக் கடந்த ஆட்சியில் செய்திருந்தால் தற்போது இலங்கையை ஆளுபவர்கள் இந்திய விஜயத்தையும், இந்த உடன்படிக்கைகளையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள். பௌத்த பிக்குகள் கூட தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருப்பார்கள். எது எவ்வாறானாலும், இந்த ஆறு உடன்படிக்கைகளாலும் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் எவ்விதமான ஆபத்தும் ஏற்படாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்திருக்கிறது. என்றாலும் இந்த ஆறு உடன்படிக்கைகளாலும் பேராபத்து இலங்கையைச் சூழும் என்று இலங்கையிலுள்ள இந்திய விரோத சக்திகள் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறிக் கொண்டேதான் இருக்கின்றன.

    இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியானதும், இக்கட்டானதுமான சூழ்நிலையில் இலங்கை போன்ற எந்தவொரு சிறிய நாட்டிற்கும் பலம் மிக்க அண்டை நாடொன்றின் அரவணைப்பு அத்தியாவசியமானதாகும். கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தனித்த தீவான இலங்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கவும் எந்த நாடாவது உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்ற நிலையில் அதை அருகிலேயே இருக்கும் இந்தியா செய்ய முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதுவும், வரலாற்று முக்கியத்துவம் மிக்கதுமான நிகழ்வாகும். இன்றைய நிலையில் சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ள நாடாகக் கருதப்படக் கூடிய இந்தியா போன்ற ஆளுமை மிக்க நாடொன்று இலங்கைக்குப் பாதுகாப்பளிப்பதையும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதையும் இவ்வாறாக உறுதி செய்து விட்டால், சீனா போன்ற தந்திரமான நாடுகள் எளிதில் இலங்கையிடம் வாலாட்டாது. அண்மைக்காலமாக இலங்கையில் சீனாவானது மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் இந்தியாவையும், மேற்கு நாடுகளையும் கையாளுவதற்காகவும், உள்நாட்டுப் பிரச்சினைகளிலும், வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் சீனாவையே சார்ந்திருந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் சீனாவுடன் நெருக்கமான உறவு பேணப்பட்டதோடு, அப்போது நாட்டில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. பிறகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் அவர் சீனாவை இலங்கையுடன் அவ்வளவாக நெருங்க விடவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி இலங்கையின் அரசியல், அபிவிருத்தி, சமூக, பொருளாதார, இராணுவ விடயங்களில் சீனாவைச் சார்ந்திருக்கத் தொடங்கியதே சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கி இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியதற்கு காரணம் என்று கூறலாம். இதை ‘ராஜபக்‌ஷேக்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது’ என்றும் கூறலாம்.



    எனவே இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையை இலங்கை அரச தலைமைகள் அனைத்தும் தக்க தருணத்திலான பேருதவியாகவே பார்க்கின்றன. இலங்கையின் பொருளாதார சீர்குலைவை சீரமைக்க இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்திய கடனுதவிக்குப் பிறகு நிகழ்ந்த இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான கலந்துரையாடல் குறித்தும், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றிலான ஒத்துழைப்பு, மீன் பிடித்தலிலுள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். அத்தோடு இலங்கையிலுள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார். இவற்றுள் முக்கியமான ஒரு நிகழ்வாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசியதைக் குறிப்பிடலாம். இதுவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியதில்லை. தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பதவி விலக நேர்ந்தால், அடுத்த ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கே உள்ள சூழ்நிலையில் அவருடனான சந்திப்பு அண்மைய இந்திய உடன்படிக்கைகளைப் பலப்படுத்தும் என்று நம்பலாம்.

    இந்தியா உதவி செய்வதாலும், புலம்பெயர்ந்துள்ளவர்களிடம் இலங்கை அரசு உதவிகள் எதிர்பார்ப்பதாலும் இலங்கைத் தமிழர்கள் உட்பட சிறுபான்மை சமூகத்துக்கு ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா செய்யும் நிதியுதவிகள் மூலம் நிறுவப்படவிருக்கும் நிலையங்கள் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படவிருப்பதால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதிகளவான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் அதிகம். அவ்வாறே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ளவர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள் என்பதால், அவர்கள் இலங்கையில் தொழில்முயற்சிகளில் முதலீடு செய்ய முன்வரும்போது அவற்றிலும் அதிகமான தொழில்வாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படக் கூடும். அத்தோடு இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளில் புலம்பெயர்ந்தவர்களின் ஆளுமை மேலோங்கும்.

    இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில் அயல் நாடான இந்தியா இவ்வாறாகவாவது உதவி செய்வதை வரவேற்க வேண்டும். இலங்கையில் தற்போது தட்டுப்பாடாக இருக்கும் உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் போன்ற அத்தியாவசிய விடயங்களில் இந்தியா தலையிட்டு உதவி செய்ய முன்வருவதைப் பாராட்ட வேண்டும். மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு அது குறித்துக் கேள்வியெழுப்ப இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுந்த துணிச்சல் கூட இலங்கையின் அமைச்சர்களுக்கு இருக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இப்போது தம்மை ஆளுவது யார் என்பதைப் பார்ப்பதில்லை. தம்மை யார் ஆதிக்கத்துக்குள்ளாக்கப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தம்மை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், பட்டினியின்றியும் யார் வாழச் செய்யப் போகிறார்கள் என்பதை அறியத்தான் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 01.04.2022

புகைப்படங்கள் - shutterstock 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க