Wednesday, March 30, 2022

தெற்காசியாவின் வறிய நாடாக மாறி வரும் இலங்கை - எம். ரிஷான் ஷெரீப்

        இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக் கொண்டே வருகையில் ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. அதனால் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்குமிடையே உள்ள பாரிய வேறுபாட்டையும் முக்கிய காரணமாகக் குறிப்பிடலாம். இதனால் 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.


      இவ்வளவு சரிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போதிலும், கடந்த மாதம் வரைக்கும் இலங்கை மத்திய வங்கியானது ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை 202 ஆகவே தொடர்ந்து பேணுவதாகவும், எந்தக் காரணத்துக்காகவும் அதை மாற்றப் போவதில்லை என்றும் அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 202 ஆக இருந்த போது கறுப்புச் சந்தையில் ஒரு டாலருக்கு 240 ரூபாய்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்களும் தம்மிடமிருக்கும் டாலர்களை மாற்ற கறுப்புச் சந்தையை நாடத் தொடங்கியதைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியில் டாலரின் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. மத்திய வங்கியானது சந்தை போக்குகளைக் கண்டறிந்து அதற்கேற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அப்போதே அனுமதித்திருந்தால் ரூபாயின் பெறுமதி இந்தளவு வீழ்ச்சியடைந்திருக்காது. இலங்கை மத்திய வங்கிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.


        இன்று ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி முந்நூறைக் கடந்துள்ளது. ஆகவே, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் படுவேகமாக பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வாறே, இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களின் ரூபாய்ப் பெறுமதியும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான அதிகரிப்புகள் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சுமைகள் அனைத்தையும், தொலைநோக்குப் பார்வையற்ற அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகக் குறைபாட்டின் பிரதிபலனையும் பொதுமக்கள்தான் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

        தற்போதைய அரசாங்கம் 2019 இல் ஆட்சிக்கு வந்த போதே பொருளாதார ஸ்திரமின்மைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. அப்போதே அரசாங்கம் தீர்க்கமானதும், சரியானதுமான முடிவுகளை எடுத்திருந்தால் இந்தளவு பாரிய பொருளாதார நெருக்கடியை இப்போது இலங்கை சந்தித்திருக்காது. தற்போது அரசாங்கம் தனது கையிருப்பில் உள்ளதாகக் காண்பிக்கும் டாலர்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்தொகைகளாகவே இருக்கின்றன எனும்போது இதன் பாரதூரம் உங்களுக்கு விளங்கும்.

        தெற்காசியாவில் இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரே நாடு தற்போதைக்கு இலங்கைதான். ஏனைய நாடுகள் இந்தக் கால கட்டத்தில் தமது டாலர் கையிருப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றன. அந்த நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிப்பதால்தான் இந்தளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

        இலங்கை அரசாங்கம் தற்போதும் தொடர்ந்தும் ரூபாய்களை அச்சிட்டு வருகிறது. இதனால் பண வீக்கம் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்துக்குள் மட்டும் அனைத்து உணவுப் பொருட்களினதும் விலை ஆகக் குறைந்தது 25% ஆல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ரூபாய் அச்சிடப்படுவதும் இவ்வாறான விலை அதிகரிப்புக்கு ஒரு காரணம் ஆகும். கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 3000 பில்லியன் ரூபாய்த் தாள்களை அச்சிட்டுள்ளது. இவ்வாறாக பண விநியோகம் அதிகரிக்கும்போது பண வீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த வருடம் ஜூலை மாதத்துக்குள் அரசாங்கம் கொடுத்துத் தீர்க்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் பல உள்ளன. அத்தியாவசியமான பொருட்களை வாங்க இலங்கை, இந்தியாவிடமிருந்து தொடர்ந்து கடன் வாங்கி வருகின்ற போதும், அதைத் தொடர்ந்தும் செய்வது மேலும் பொருளாதாரச் சீர்குலைவுக்கே வழியமைக்கும்.

        இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத் திறனிலுள்ள குறைபாடுகளால்தான் தற்போதைய நெருக்கடி நிலைமை வந்திருக்கிறது என்பதை இப்போதாவது அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமை ஏற்படும் என்று அப்போதே எச்சரித்த சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களின் எச்சரிக்கையை 'அவை மேற்கத்தேய சதி' என்று எளிதாகக் கூறி அப்போது புறக்கணித்தது இலங்கை அரசாங்கம். அன்று அந்த எச்சரிக்கைகளைப் புறந் தள்ளியதால் இன்று ஒவ்வொரு வெளிநாடாகக் கையேந்திப் பெறும் கடன் தொகையில் தமது அன்றாடத் தேவைகளுக்காக எரிபொருட்களையும், மருந்துகளையும், உணவுப் பொருட்களையும் அரசாங்கம் தரும்வரை நாட்டிலுள்ள மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.



        நாடு முழுவதும் மின்சாரத் தடை காரணமாக இருளுக்குள் மூழ்கிப் போயுள்ளது. குடிநீர் விநியோகமும் தடைப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள், மருந்துகள், பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் மக்கள் இரவு பகலாகக் காத்திருக்கிறார்கள். பலர் வரிசையிலேயே நின்று மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்கள். உயிர் பிழைக்க வேண்டி பலரும் இந்தியாவுக்கு படகில் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் நாடு பற்றியெரிந்து கொண்டிருக்கையில் ஜனாதிபதி தொலைக்காட்சியில் தோன்றி இந்த நெருக்கடிக்குக் காரணம் தானோ, தனது அரசாங்கமோ அல்ல என்று உரையாற்றி விட்டு மறு தினமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான விலையையும், நீர், மின்சார, தொலைபேசிக் கட்டணங்களையும், பேரூந்து மற்றும் புகையிரதக் கட்டணங்களையும் அதிகரிக்கிறார். பொதுமக்கள் இந்தளவு கஷ்டப்படும்போது ஜனாதிபதியின் குடும்பமும், அமைச்சர்களும் அரசாங்கத்தின் சகலவிதமான வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

        அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற தன்மையால் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது விரைவில் மிக உக்கிரமான சமூக நெருக்கடியாக மாறுவது உறுதி. இப்போதே பல தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பலரும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளார்கள். செல்வந்தர், ஏழை என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரது வீடுகளிலும் வறுமையும், பட்டினியும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இந்த சமூக நெருக்கடி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். ஆபிரிக்க வறிய நாடுகளில் உணவுக்காக அடித்துக் கொள்வது, திருடுவது, கொள்ளையடிப்பது போன்ற மோதல்களும், குற்றச் செயல்களும் இலங்கையிலும் ஏற்படக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.

        ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதுதான் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும். சர்வதேச நாணய நிதியம் ஆனது அரசாங்கச் செலவுகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கடன் மேலாண்மையையும், நிதி நிர்வாகத்தையும் ஒழுங்காகச் செய்யும். இலங்கை மக்கள் தற்போதைய ஒரே நம்பிக்கையாக அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 28.03.2022

புகைப்படங்கள் - REUTERS 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க







Wednesday, March 23, 2022

இலங்கையை மீட்டெடுக்க வேண்டுமெனில்… - எம்.ரிஷான் ஷெரீப்

         இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், சீமெந்து உட்பட கட்டுமானப் பொருட்கள், புகையிரத, பேரூந்துக் கட்டணங்கள் என அனைத்தினதும் விலைகளை நாளாந்தம் ஏற்றி பல சுமைகளை இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் மீது திணித்து வருகிறது. தற்போது பிரித்தானியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தமது தேசத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. காகிதத் தட்டுப்பாடும் உச்ச அளவில் காணப்படுவதால் இலங்கை அரச பாடசாலைகளில் பயிலும் மில்லியன் கணக்கான மாணவர்களின் பரீட்சைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

                தமது குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாமல் போன கவலையிலும், பட்டினியாலும் தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் உணவுப் பொருட்களையும், மண்ணெண்ணெய்யையும் பெற்றுக் கொள்ள மணித்தியாலக் கணக்கில் பல கிலோமீற்றர்கள் நீளமான வரிசைகளில் பட்டினியோடு காத்துக் கொண்டிருந்தவர்கள் மயங்கி வீழ்ந்து மரணித்த செய்திகள் போன்றவற்றை இலங்கை ஊடகங்களில் தினமும் காணக் கூடியதாக இருக்கிறது.

இலங்கை நாட்டில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியும், பஞ்சமும் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக் மாலைதீவில் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளமை நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்திக்கும், கண்டனத்துக்கும் காரணமாகியிருக்கிறது.

 

இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக, கடந்த வாரம் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் ஒன்று சேர கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியதில் கொழும்பு நகரின் பல பகுதிகள் முடங்கிப் போயிருந்தன. மீண்டும் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக இருந்தது.

 


தனக்கெதிராகக் கிளம்பியுள்ள இந்த அரசியல் நெருக்கடிகளைக் கண்ணுற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் உடனடியாக கடந்த 16 ஆம் திகதி தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமையைத் தான் அறிவேன் என்றும் இந்த நெருக்கடிக்குக் காரணம் தானல்ல என்றும் தெரிவித்ததோடு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட தான் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

ஒரு நாட்டில் வாழும் மக்கள் மீது தனக்குள்ள பொறுப்பை இவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல அந்த நாட்டின் அரசாங்கத்தால் முடியாது. தனது தேசத்தவர்கள் நாட்டில் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்றவை ஒரு அரசாங்கத்தின் கட்டாயக் கடமைகளாகும். என்றாலும், இப்போது இலங்கையிலுள்ள அரசாங்கம் அந்தக் கடமைகளை சரி வரச் செய்கிறதா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

 

காரணம் இல்லாமல் எதுவும் நிகழாது. அதற்கிணங்க இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலைமையானது ஏதோவோரு காரணத்தினால்தான் இவ்வாறு தோன்றியுள்ளது. ஆகவே அந்தக் காரணத்தைக் கண்டறிவதைத்தான் முதலில் செய்ய வேண்டும். ‘நான் செய்வதுதான் சரியானதும், முழுமையானதும் ஆகும்என்று நாட்டின் ஜனாதிபதி மார்தட்டிக் கொள்வதை நிறுத்தி விட்டு ஏனையவர்களினது கருத்துக்களைக் கேட்டு செயலாற்ற வேண்டும். அவ்வாறே இந்த நெருக்கடி நிலைமையை மாற்ற அனைவரினது உதவிகளையும் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தகுந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற நாட்டிலிருக்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு ஒருமித்த மனதோடு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது ஒத்துழைப்பை நேர்மையான மனதோடு வழங்க வேண்டும்.

 

சில பிரச்சினைகளுக்கு காலம் தீர்வளிக்கும். என்றாலும், அவ்வாறான ஒன்றை எதிர்பார்த்து வெறுமனே காலம் தாழ்த்துவது இருக்கும் பிரச்சினைகளை மேலும் மேலும் உக்கிரமாக்கி, சிக்கல்களுக்குள்ளாக்கும். அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை மேலே தூக்கி விட உடனடி நடவடிக்கை அவசியமாகும். தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்பதற்குக் காலம் தாழ்த்துவது என்பது பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கவே செய்யும்.

 


தமக்குத் தேவையானவற்றை வாங்க வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் செய்திக் காணொலிகளில் தெரிவிக்கும் கருத்துகள் மூலம் பொதுமக்களை வருத்தும் நெருக்கடிகள் எவையென்பதை அரசியல்வாதிகள் எளிதில் அறிந்து கொள்ளலாம். அந்த நெருக்கடிகள் நாட்டு மக்கள் அனைவருக்குமுரியவை. கடக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் அந்த நெருக்கடிகளை மேலும் மேலும் தீவிரமாக்குவதையே செய்து வருகின்றன. அவற்றுக்கான அரசாங்கத்தின் தீர்வு அருகில் இல்லை என்பது பொதுமக்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதோடு மக்களது சந்தோஷத்தையும், நிம்மதியையும் இழப்பதற்குக் காரணமாகவும் உள்ளது. தமது வாழ்க்கையில் இவை இரண்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டி நேர்ந்திருப்பது எந்தளவு மோசமானதும், துயர் நிறைந்ததுமான நிலைமை என்பதை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இலங்கையர்கள் அனைவரும் இன்று தமது அனுபவத்தில் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க அரசாங்கமானது, பல்வேறு நாடுகளிடம் உதவி கோரிய போதிலும் இந்தியா மாத்திரமே தனது ஒத்துழைப்புகளைத் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் ஒரே நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. ஆகவே கடந்த 16 ஆம் திகதி இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக் இந்தியப் பிரதமர் நரேந்திர சிங் மோடியைச் சந்தித்து நிதியுதவியைக் கோரியதோடு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிபந்தனையற்ற கடனை இந்தியா வழங்கியது. கடந்த டிசம்பர் மாதமும் பசில் ராஜபக் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜயசங்கரையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துக் கலந்துரையாடியதில் ஒரு தொகை டாலர்கள் நிதியுதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை நாடு சவால்களை வாய்ப்புகளாகக் கருதி, பல வெற்றிகளைக் கண்ட நாடு. இப்போதும் ஒன்றின் பிறகு ஒன்றென வந்து கொண்டேயிருக்கும் நெருக்கடிகளை எதிர்த்து வெல்ல நாட்டு மக்களால் முடியும். அதற்கு, நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த ஒரே குறிக்கோள்தான் இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு சரியான செயற்திட்டமும் இருக்க வேண்டும். கட்சிகளும், தலைவர்களும், மக்களும் என அனைவரும் ஒன்று சேர்ந்தால் அந்த செயற்திட்டத்தை உருவாக்குவது சிரமமில்லை.

 

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 21.03.2022