Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Tuesday, July 11, 2017

யானைகளின் மரணங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்



  
    ண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி என்பது என்ன? அதைத் தோற்றுவிக்க நாம்தானே காரணமாகிறோம்? இயன்றவரை காடுகளை அழித்து, மழையைத் தடுத்து, மனிதக் குடியிருப்புக்களை உருவாக்கி விடுகிறோம். பாதைகளை, புகையிரதத் தண்டவாளங்களை  நிர்மாணிக்கிறோம். அதுவரையில் தமது நிலங்களில் பத்திரமாக இருந்த யானைகள் இப் புதிய மாற்றங்களைக் கண்டு அரண்டு விடுகின்றன. அம் மிரட்சியே, அந்த ஜந்துக்களை முரட்டுத்தனமாகவும் மாற்றிவிடுகின்றன. தமது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எவற்றின் மீதும் இவ்விதமான முரட்டுத்தனங்களைப் பிரதிபலிப்பது, உயிர்ஜீவிகளின் இயல்பு இல்லையா?

      இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலிருந்து யானை வேட்டை எனும் விளையாட்டு மிகப் பிரசித்தமானதாக இருந்திருக்கிறது. அதன் சித்திரங்களை வெளிநாட்டு சஞ்சிகைகளில் பிரசுரித்த பிரித்தானிய ஆளுநர்கள், யானை வேட்டைக்கு வெளிநாட்டுவாசிகளை வரும்படி ஈர்த்திருக்கிறார்கள். இவ் வேட்டைக்கு உதவியாக கிராம மக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ் வெள்ளையர்கள், கிராம மக்களின் உதவியோடு காட்டு யானைகளைக் கொன்று அதை ஒரு விளையாட்டாகவும், தம்மை வேட்டைக்கார வீரர்களாகவும் பிரதிபலித்து பெருமை கொண்டிருக்கிறார்கள்.


      இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் ஒன்றான பதுளையில் பிரபலமான  St. Marks Anglican Church’ பள்ளியை நிர்மாணித்த Major Thomas William Rogers ( 1804 -1845) இலங்கையில் பாதைகளையும் நிர்மாணித்திருக்கிறார். என்றாலும், இப்போது அவர் இலங்கையில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்ற ஒரு கொலைகார வேட்டைக்காரனாகவே மக்களால் அறியப்படுகிறார். விலங்குகளைக் கொல்வதற்காக வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையை பாமர மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததும் இவரே. உயிர் கொல்லும் ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயங்கிய ஊர் மக்களிடம், ‘இதனைப் பயன்படுத்துவதன் மூலம் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கலாம்’ எனப் போதித்திருக்கிறார்.  1834 முதல் 1845 வரையான 11 வருட காலப்பகுதியில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்று அக் காலத்தில் பிரபலமான வேட்டைக்காரர் என அறியப்பட்ட இவர், இன்று வரலாற்றில் ஒரு கொலைகாரராகவே பதியப்பட்டிருக்கிறார். இவரது மரணமும் கூட, இயற்கை அளித்த தண்டனையாக, மின்னல் தாக்கியே நிகழ்ந்திருக்கிறது. இவரதும், இவரது யானை வேட்டைகள் குறித்த பிரசித்தமான சரித்திரங்களையும் ‘The Fate of Major Rogers: A Buddhist Mystery of Ceylon’, The Wild Elephant in Ceylon’ ஆகிய தொகுப்புக்களில் வாசிக்கலாம்.

  

    இப்போதும் கூட உலகில் யானை வேட்டை என்பது பணம் படைத்தவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் பெரும் விளையாட்டு. அண்மையில் இணையத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. உணவை மென்று கொண்டிருந்த யானையொன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீழ்த்தி, அதனருகே பிள்ளைகளோடு பெருமையோடு நின்று புகைப்படமெடுத்து தம்மை வீரர்கள் எனச் சித்தரிக்க முயலும் ஒரு தம்பதியின் புகைப்படம் அதிர்ச்சியைத் தந்தது. இப் படுகொலை மூலம் இவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள்? தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு விலங்கைச் சுட்டிருக்கிறார்கள். அதன் உயிரைப் பறிக்க இவ்வாறானவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும் கூட, அதனை மட்டுப்படுத்த அவற்றை வேட்டையாடுவது ஒன்றேதான் வழிமுறையா என்ன?

      னது சிறுவயது முதல் ஒரு நண்பனைப் போல, எனது வீட்டினருகே வளர்ந்து வந்த கொம்பன் யானை, சில வருடங்களுக்கு முன்னால் மின்னல் தாக்குதலில் பலியானது. தோட்டத்தில் அதைப் பிணைத்திருந்த சங்கிலியினூடாக மின்னல் பாய்ந்ததில் ஓர் மழை இரவில் அது மரித்து வீழ்ந்தது. அது மரணிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் நான் எடுத்த புகைப்படமே இங்கிருக்கிறது. அந்த யானை மரித்ததும், ஒரு விலங்கெனப் பார்க்காது, சடலத்தைப் பார்வையிட பல ஊர்களிலிருந்தும், பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். இறுதிச் சடங்குகள் மிகவும் சிறப்பாக சகல வித கௌரவத்தோடும் நடைபெற்றன. அனைத்து மக்களும் அந்தக் கொம்பனை நேசித்ததற்குக் காரணமிருக்கிறது.

      குழந்தைகளை யானையின் மடியின் கீழால் கொண்டு சென்றால், அக் குழந்தைகளைப் பீடித்திருக்கும், பீடிக்கப் போகும் நோய், பிணி, இன்னல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதாக மக்களிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. எனவே அதன் பிரகாரம் அந்த யானையின் பாதங்களுக்கிடையே ஊர் மக்களில் பெரும்பாலானோர் தம் சிறுவயதில் போய் வந்திருக்கிறார்கள். கண்ணீர் ததும்பிய முகங்களோடு அவர்கள் யானையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டமையானது, காலாகாலத்துக்கும் அவர்களின் இன்னல்களை நீக்கிய பெருமையை ஏதுமறியா அந்த அப்பாவி ஜீவன் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றியது.

      இலங்கையில் யானைகளை வருடந்தோறும் நடைபெறும் ‘பெரஹர’ எனும் பௌத்த மதச் சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் போலவே பட்டு வண்ணத் துணிகளாலும், பளபளக்கும் சிறு விளக்குகளாலும் யானைகளை அலங்கரிப்பார்கள். அவை பெருந்தெருவில் ஊர்வலமாகச் செல்லும். இந் நடைமுறை கேரளாவிலிருந்தே வந்திருக்கக் கூடும். ஒரு முரண்நகையாக இலங்கையின் பௌத்த மத ஊர்வலத்தின் முதல் யானைப் பாகன் ஒரு முஸ்லிம். உமர் லெப்பை பணிக்கர் என அறியப்படும் அவரதும், யானையினதும் புகைப்படங்களை இலங்கையின் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டதன் மூலம் கடந்த நூற்றாண்டு முதல் பல தசாப்தங்களாக கௌரவித்து வருகிறது இலங்கை அரசு.

      லங்கையில் புகையிரதங்களில் மோதுண்டு இறந்துவிடுபவை, அதிவேகப் பாதை வாகனங்களில் மோதி இறப்பவை, பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுந்து இறப்பவை, மக்கள் குடியிருப்புக்களில் அத்துமீறி நுழைவதால் மின்சார வேலியும், கண்ணிவெடிகளும், வெடிகுண்டுகளும் கொல்பவை என வருடத்துக்கு குறைந்தது நூறு யானைகளேனும் அகாலமாக மரணித்து விடுகின்றன. தந்தத்துக்காகக் கொல்லப்படுவது சம்பந்தமான யானைகளின் மரண அறிக்கைகள் முன்பு நிறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை குறைந்திருக்கிறது. அறவே இல்லையென்று சொல்வதற்கில்லை.

  
    ஆனால் தற்காலத்தில் இலங்கையில் யானைகளின் மரணங்கள் அதிகமாக நிகழ்வது ஆயுதங்களால் அல்ல. யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, நலிவடையாத குப்பைகள் அண்மைக்காலமாக யானைகளை மரணத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையின் வனங்களில் சஞ்சரிக்கச் செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் காடுகளில் விட்டு வரும் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை யானைகளால் உணவாகக் கொள்ளப்படுகின்றன. யானைகளால் விழுங்கப்படும் அவை செரிக்காது, உடலிலிருந்து வெளியேறாது அடைத்துக் கொண்டு யானைகளைக் கொன்று விடுகின்றன. அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மரணித்த யானைகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்து இதனை உறுதிப்படுத்த முடிந்தது.

      என்னதான் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல அறிக்கைகள் விடப்பட்ட போதிலும், இலகுவையும் வசதியையும் கருத்திற்கொண்டு, எங்கேயோ வீசி விட்டு வருவதற்குத்தானே என்ற மனப்பாங்கோடு அநேகமான மக்கள் இன்னும் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வலிய விலங்கு என்பதனால் யானையின் மரணம் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. பொலிதீன், பிளாஸ்டிக்கை உட்கொண்டு தினந்தோறும் எத்தனை எத்தனையோ வன விலங்குகளும், பட்சிகளும், மீன்களும், ஆமைகளும் நாமறியாது மரித்துக் கொண்டேயிருக்கின்றன.

      நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, இயற்கையோடு இணைந்து வாழும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடிய மரணத்தை ஒருபோதும் இயற்கை அளிப்பதில்லை. நாம்தான் அவற்றின் மரணத்துக்குக் காரணமாக இருந்துகொண்டிருக்கிறோம். மரிக்கும் அந்த உயிர்களின் மூலமாகப் பாடம் கற்று, இனி எந்தவொரு உயிரும் அவ்வாறு மரிக்காதிருக்க, நீதமான எந்தவொரு தீர்ப்பையும் வழங்க யாருமேயில்லை என்பதுதான் நிஜம். காட்டு யானைகளைக் கொல்தல் என்பது செல்வந்தர்களுக்கு ஒரு வீர விளையாட்டு. விவசாய நிலங்களைக் கொண்ட ஏழைகளுக்கு ஒரு ஆபத்து நீங்கல். படித்தவர்களுக்கு அக் கணத்தைக் கடந்துபோக ஒரு செய்தி மாத்திரமே.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - எழுத்தாளர் ஜெயமோகன்

Thursday, May 4, 2017

வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம் - எம்.ரிஷான் ஷெரீப்


     எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் ‘கிளம்புதலும் திரும்புதலும்’ மற்றும் ‘கிளம்புதல் - ஒரு கடிதம்’ ஆகிய கடிதங்களை வாசித்தேன். ‘வீட்டை விட்டுப் போய்விடுதல்’ அல்லது ‘விட்டுப் போய் விடுதல்’ என்பது எவ்வளவு சுதந்திரத்தை அளிக்கிறதோ அந்தளவு துயரத்தையும் அகத்தே கொண்டிருக்கிறது என்பதைத்தான் மறைவாகக் குறிப்பிடுகின்றன அவை.

     ‘கிளம்புதல்’ கடிதம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில கணங்களாயிற்று. தனது பட்டமளிப்பு விழாவுக்கு அப்பாவை வர வேண்டாமெனச் சொல்லி சண்டை போட்ட மகனின் சூழ்நிலை தெரியவில்லை. ஆனால் அந்தத் தடை அப்பாவின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்? அதிர்ச்சியும், அவமானமும், துயரமும், சுய பச்சாதாபமும் அன்று அவரை எந்தளவு தாக்கியிருக்கும் என்பதை இன்னுமொரு தகப்பனாலேயே புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும். தினந்தோறும் புதுப்புது அறிமுகங்களும், விடயங்களும் கையருகே வந்து கொண்டேயிருக்கையில் பதின்ம வயது இளைஞர்கள் பொதுவாகவே பெற்றோரை சற்று தள்ளி வைக்கவே விரும்புகிறார்கள் போலும். நிஜத்தில் பெற்றோரின் அருமையை அவர்களை இழந்து நிற்பவர்களால்தான் பூரணமாக புரிந்து கொள்ள இயலுமாக இருக்கும்.

     ‘கிளம்புதலும் திரும்புதலும்’ கடிதத்தில் “தம்பி அன்னைக்கு எங்கடா போன?” என்ற ஒரு கேள்வி அம்மாவிடமிருந்து வந்திருப்பதை வாசித்தேன். இலகுவாகத் தாண்டிச் செல்லக் கூடிய கேள்வியல்ல அது. அவ்வாறான ஒரு கேள்வியை எவ்வாறு புறக்கணித்துக் கடந்து செல்ல முடியும்? அதற்கான பதிலில்தான் பிள்ளைக்கு அம்மாவின் அவசியமும், அவர் மீது வைத்துள்ள பாசமும், விட்டுச் செல்லும் அளவிற்கு அம்மாவை விடவும் முக்கியமான எது புறத்தே இருக்கிறது என்பதுவும் புலப்படும் இல்லையா?


    இலக்கியத்துக்கான நோபல் பரிசும், புலிட்ஸர் விருதும் வென்ற பெண் எழுத்தாளர் Pearl Sydenstricker Buck (Pearl S.Buck) எழுதிய ‘Letter from Peking’ நாவலை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். ‘கிளம்புதலும் திரும்புதலும்’ மற்றும் ‘கிளம்புதல்’ ஆகிய கடிதங்களைப் போல இதுவும் ஒரு கடிதம்தான். ஆனால் மிக நீண்ட ஒரு கடிதம். ஒற்றையில் வசிக்கும் அம்மாவைப் புறக்கணித்து வீட்டை விட்டுச் செல்லும் மகன் குறித்த அம்மாவின் உணர்வுகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. நமது இலங்கை, இந்தியத் தாய்மார்களோ, தந்தையர்களோ தமது பிள்ளைகளைக் குறித்து வெளிப்படையாகச் சொல்லாத உணர்வுகளை ஒரு தாயின் பார்வையில் இந்த நாவல் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியை இங்கு தர விரும்புகிறேன்.
******
     மகன் ரெனீ வீட்டுக்கு வந்துவிட்டான். நான் தேடியலையாத போது, எனது இதயம் அமைதியாக இருக்கும்போது, நான் பொறுமையில் மூழ்கியிருக்கும்போது, தொடர்ந்தும் வேண்டுதல்களை விடுக்காதவிடத்து, இறுதியாக இப் பிரபஞ்சத்தின் தேவ பிடிவாதம் எனக்கு உபகாரம் செய்திருக்கிறது. அவன் முன் தினமிரவு வந்திருந்தான். நான் உறக்கத்திலிருந்த போதும், வீட்டில் எழும் சிறிய சப்தத்துக்குக் கூட விழித்து விடுவேன். கதவு, அதாவது சமையலறைக் கதவு திறக்கப்படும் சப்தம் எனக்குக் கேட்டது. நான், தனியாக இருப்பதனால் வழமை போலவே அதற்கு பூட்டு போட்டிருந்தேன். ரெனீயிடம் அல்லாது வேறு எவரிடமும் அதற்கான சாவி இல்லை. அதனால், கதவைத் திறந்தது ரெனீதான் என்பதை அறிந்து கொண்டேன். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து மூடும் சப்தம் அதனைத் தொடர்ந்து எழுந்தது. அந்த ஓசையும் எனக்குக் கேட்டது. நான் என்ன செய்ய வேண்டும்? கட்டிலிலிருந்து எழுந்து, கீழ்த் தளத்துக்கு ஓடிச் சென்று அவனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டுமென எனக்குத் தோன்றியது. எனினும் எனது தனிமைக்குள்ளிருந்த எனது எச்சரிக்கையுணர்வு விழித்துக் கொண்டது.

     அவன் ஒரு தடவை வீட்டை விட்டுச் சென்று விட்டான். மீண்டுமொரு தடவை வீட்டை விட்டுச் சென்று விடுவது அவனுக்கு இப்போது இலகு. அவன் நானில்லாது வாழக் கற்றுக் கொண்டு விட்டான். வீட்டைத் தாண்டி வெளியே ஜீவிக்கக் கற்று விட்டான். நான் கீழ்த் தளத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. நான் உறக்கத்திலிருப்பேன் என எண்ணிக் கொள்ள  அவனுக்கு இடமளிக்க வேண்டும். காலையில் அவனால் எனக்கு வியப்பூட்ட முடியும். நானும் வியப்படைந்ததாகக் காட்டிக் கொள்வேன். இவ்வாறாக பால்ய வயதுப் பிணைப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

     நான் அசையாது, சலனங்களை ஏற்படுத்தாதிருந்தேன். தரையில் கால் வைக்கவில்லை. படுக்கையிலேயே சாய்ந்து படுத்திருந்தேன். மெல்லிய நிலா வெளிச்சம் போர்வையின் மீது வீழ்ந்திருந்தது. நான் செவிமடுத்துக் கொண்டேயிருந்தேன். அவன் உள்ளறை மேசையருகில் அமர்ந்து உணவருந்தினான். எனக்கு பீங்கான் உரசும் ஒலியும், இழுக்கப்படும் கதிரையின் ஓசையும் கேட்டது. அரை மணித்தியாலம் அல்லது அதை விட சற்று கூடுதலான நேரமெடுத்து அவன் சாப்பிட்டான். தொடர்ந்து எனக்கு குளியல் தொட்டியில் தண்ணீர் விழும் ஓசை கேட்டது. நான் எழுந்து விடுவேன் என எண்ணி அவன் அறைக் கதவை பாதி மாத்திரமே திறந்திருந்தான். எனில், அவனுக்கு என்னை எழுப்புவது அவசியமில்லை. நான் புத்திசாலித்தனமாகவே முடிவெடுத்திருக்கிறேன். நான் அவனது அறைக்குச் செல்லத் தேவையில்லை. அவன் உறக்கத்திலிருக்கிறானா எனப் பார்க்க, எட்டிப் பார்க்க வேண்டியதுமில்லை. எனினும் ஓஹ்! அவன் மீண்டும் வீடு திரும்பி விட்டதற்காக எந்தளவு நன்றி செலுத்த வேண்டும்? எனது இதயம் எனது நெஞ்சுக் கூட்டிலிருந்து வெளியே வந்து நன்றி கூறுவதற்காக சுவனத்துக்குச் செல்வதைப் போல உணர்ந்தேன். இறைவனுக்கு நன்றி! இறைவனுக்கு நன்றி!

     அனைத்துமே அமைதியாகி விடும்போது என்னால் உறங்கி விட முடியும். அவன் எப்படியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முன்பு, எனக்கு எப்படி உறக்கம் வரும் என என்னை நானே கேட்டுக் கொண்டேன். எனினும் நான் அவனைப் பார்க்கச் செல்ல மாட்டேன். அவன் தனது படுக்கையில் படுத்திருந்த போதிலும், எனது அறைக்குப் பக்கத்து அறையில்தான் அவனிருந்த போதிலும், இக் கணத்தில் அவன் என்னை விட்டும் தூரமாகவே இருக்கிறான். எனது மகனுக்கும் எனக்குமிடையே ஒரு சுவர் உருவாகியிருக்கிறது. அவன் வளர்ந்த மனிதனாக ஆகி விட்டான் என்பதை நான் அறிந்திருந்தேன். இனி அவனுக்கு நான் யாராக இருப்பது அவசியம் என அவன் என்னிடம் கூறும்வரை நான் பார்த்திருக்க வேண்டும்.

     சிலவேளை அவனுக்கு தாயின் அவசியமிருக்காது, சிலவேளை அவனுக்கு சிநேகிதம் மாத்திரமே தேவையானதாக இருக்கும். வயதான தோழி. ஒரு காலத்தில் அவனுக்குத் தாயாக இருந்தவளிடமிருந்து அவன் எதிர்பார்ப்பது அதுவாக இருக்கக் கூடும்.

     ஒரு மணித்தியாலம் மெதுவாக நகர்ந்து செல்லும்வரை நான் காத்திருந்தேன். பல மணித்தியாலங்கள் கழிந்திருக்கும் என கட்டிலின் அருகிலிருந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தை நான் பார்க்கும்வரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மணித்தியாலமும், பத்து நிமிடங்களும் மாத்திரமே கழிந்திருந்தது. தொடர்ந்து கதவின் பிடியை மெதுவாகச் சுழற்றும் சப்தம் கேட்டது. நான் அசையாது படுத்திருந்தேன். விளக்கையும் ஏற்றவில்லை. அவனது பழைய சிவப்பு நிற குளியல் ஆடையை அணிந்து, வாசலருகில் அவன் நின்று கொண்டிருந்ததை நான் கண்ட போது, அவன் ஒருபோதும் வீட்டை விட்டுச் செல்லாததைப் போல இயல்பாக நான் கதைத்தேன்.

     'இது நீயா ரெனீ?'
     அல்லாது வேறு யாராக இருக்க முடியும்? அவன் இலகுவாக பதிலளித்தான்.
     'எவ்வாறிருக்கிறீர்கள் அம்மா?'
     'நன்றாக இருக்கிறேன். நீ இப்போதுதான் வந்தாயா?'
     'நான் கீழ்த் தளத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.'
     அவன் கட்டிலருகே வந்து கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்தான். நிலவொளியில் நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
     'மின்விளக்கை ஏற்றட்டுமா?' எனக் கேட்டேன்.
     'வேண்டாம். உங்களுக்கு உறங்கத் தேவையில்லையென்றால் நாங்கள் இவ்வாறே அமர்ந்திருப்போம். நான் உங்களை எழுப்பி விட்டேனா?' என்றான்.
     தூக்க மயக்கம் போலக் காட்ட முற்பட்டவாறு,
     'ஆமாம். அதற்குப் பரவாயில்லை. நான் முன்பு பழகியிருந்ததைப் போல, இப்போது விடிகாலையில் எழுந்து விடுவதில்லை. பணியாள் மெட் பால் கறந்து தருவான்' என்றேன்.
     'அனைத்தும் ஒழுங்காக நடைபெறுகிறதா?' எனக் கேட்டான். நான் வேறொன்றைப் பற்றிக் கூறினேன்.
     'நான் கறுப்பு ஆடுகள் இரண்டினையும், வெள்ளை ஆட்டுக் குட்டிகள் இரண்டையும் வாங்கினேன். ஆகவே எனக்கு தோட்டத்தில் புல் வெட்ட வேண்டிய தேவையில்லை.'
     'நிலவு வெளிச்சத்தில் நான் அவற்றைக் கண்டேன்.'

     பிறகு எமக்கிடையில் இன்னும் கதைக்கத் தேவையான எதுவுமில்லையெனத் தோன்றியது. எனது இதயக் கூட்டிலிருந்து எந்தக் கேள்வியும் வெளியே பாய நான் இடம் கொடுக்கவில்லை. அவன் என்னிடம் எதைக் கூறத் தயாரானாலும், பதிலாக நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அடுத்ததாக என்ன சொல்லக் கூடுமென நான் அறியேன். 

     'நான் எங்கிருந்தேன் என அம்மா என்னிடம் கேட்கவே இல்லையே அம்மா?'
******

    வீட்டை விட்டு ஓடி விடுபவர்களால் பாரம்பரிய வீடுகளையும்  இலகுவாக நேசித்து விட முடிவதில்லை. வீடுகளின் ஓரோர் அணுக்களும் வசித்தவர்களினதும், வந்து சென்றவர்களினதும் கதைகளைச் சுமந்த வண்ணம் அசையாது வீற்றிருக்கின்றன. அவற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாதவர்கள் அவற்றைத் தாண்டி எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள முற்படுகிறார்கள். அதை இலகுவாகத் தாண்டிச் செல்ல முடிந்தவர்களால் ஒருபோதும் நிம்மதியாக இருந்து விட முடியுமெனத் தோன்றவில்லை. கடலூர் சீனுவினதும், சுரேஷ் பிரதீப்பினதும் கடிதங்கள் இதைத்தான் குறிப்பிடுகின்றன.

     என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள மொழி பெண் கவிஞர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் கீழுள்ள கவிதையைப் பாருங்கள். பெற்றோரை இழந்த தன்னை வளர்த்த பாட்டியையும், தான் வாழ்ந்த பாரம்பரிய வீட்டையும் விட்டுப் போன இளம்பெண்ணின் ஏக்கத்தை கவிதையில் நிரப்புகிறார். அந்த வீட்டில் பாட்டியுடன் வாழ்ந்த காலங்களை மீண்டும் யாசிக்கிறார்.

மெல்லிய விடிகாலைப் பனி

பாரம்பரிய வீட்டில் தனித்து மீதமான
ஒற்றைப் பாட்டியின் மடியலமர்ந்து
நாட்டார் கதைகளை காது நிறையக் கேட்டிருக்க,
தென்னை ஈர்க்கில் குச்சிகள் கொண்டு
கூட்டிப் பெருக்கிய பெருவீட்டு முற்றத்தினோரம்
வெண்ணிறப் பூக்கள் நிரம்பிய மரத்தின் கீழமர்ந்து
உதிர்ந்த பூக்களைச் சேகரித்துச் சேகரித்து மாலை கோர்க்க,
பாட்டியின் வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த
சீத்தைத் துணியைப் போர்த்தி
மழை பெய்யும்போது வானம் பார்த்தவாறு
சாலையில் அமர்ந்திருக்க
எவ்வளவு விரும்புவேன் நானென
யாரும் அறிய மாட்டார்கள்
பாட்டியைத் தவிர.


இரு கைகள் கோர்த்தும் அணைத்திட முடியா
பெருந் தூண்கள் இருக்கும்,
பாட்டி எப்போதும் தனித்தே பெருக்கித் துடைக்கும்
பாற்தூய்மை வெள்ளையென வெளுத்த
பரிசுத்தமான பாரம்பரிய வீட்டுக்கு
வேறு யாரோ வருகிறார்களாம் குடியிருக்க
இன்று, நாளைக்குள்.


எனக்கு என்னைத் தெரிந்த அளவிற்கு என்னை அறிந்த,
யாராலும் புரிந்து கொள்ள முடியாத என்னை உணர்ந்த
பாட்டியின் தனிமைக்கு
என்னை விடப் பெறுமதியான யாரேனும் உண்டோ


வருபவர்கள் என்னளவிற்கு விரும்புவரோ பாட்டியின்
வெண்ணிறப் பூக்களை ஒத்த பேரழகான
நரைத்த கூந்தல்கற்றைகளை


மெல்லிய அதிகாலைப் பனியை எனக்களித்த மேகமே
வேண்டாம் எனைக் கரைத்து மழையாய்ப் பெய்ய

******

     பெற்றோரையும், வீட்டையும் புறக்கணிப்பவர்களுக்கு இவ்வாறான  ஏக்கங்களும், இவை தரும் வலியும் வாழ்நாள் முழுவதும் சுமையாக அழுத்திக் கொண்டேயிருக்கும் அல்லவா? இருக்கும் ஒற்றை ஜீவிதத்தில் நமக்குப் பிடித்ததை மாத்திரமே செய்து விடாது, கூட இருந்து நம்மை நேசிக்கும் சக ஜீவன்கள் குறித்தும் ஒரு கணமேனும் சிந்தித்தால் ஒவ்வொரு நாளும் இனிமையானதாக மாறும். புறக்கணிப்புக்கள் தூர்ந்து விடும். விட்டு விலகி ஓடுதல் என்பதற்கான வாய்ப்புக்களே இல்லாமலாகும். அதுதான் ஜீவிதம். அவ்வாறு வாழ்வதுதான் வாழ்க்கை.

- எம்.ரிஷான் ஷெரீப்

Monday, January 23, 2017

மிருக வதை

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில், சிட்னியிலிருந்து கார்த்திக் எழுதிய 'மிருகவதை எனும் போலித்தனம்' எனும் கட்டுரைக்கான எனது பதில் கடிதம்.



அன்பின் நண்பருக்கு,

'மிருக வதை எனும் போலித்தனம்' எனும் தலைப்பில் இன்று உங்கள் தளத்தில் வெளிவந்துள்ள கார்த்திக்கின் கட்டுரை பல நினைவுகளைத் தூண்டி விட்டது. நல்லதொரு பதிவு. அவரது பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கனடா, அமெரிக்கா, நமீபியா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஒன்பது நாடுகளில் பிரசித்தமான கடல்வாழ் உயிரினங்களான சீல் பிராணிகளின் வேட்டை (Seal hunting) பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருவதும், விலங்குகளின் மீது திணிக்கப்படும் மிருக வதைகளில் மிகவும் முக்கியமானதும் ஆகும்.

மலையாள எழுத்தாளர் டி.டி.ராமகிருஷ்ணனின் ஆல்ஃபா நாவல், பேராசிரியர் குழுவொன்று ஒரு ஆராய்ச்சிக்காக ஆல்ஃபா எனும் தனித் தீவில் இருபத்தைந்து வருட காலம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது. அப் பேராசிரியர் குழுவிலிருந்து உருவாகும் சந்ததிகளாக தீவில் எஞ்சிய நாற்பத்தெட்டு இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் தமது உணவுக்காக மீன்களை, பறவைகளை, விலங்குகளை வேட்டையாடி பச்சையாக உண்பதையும் ஒரு புனைவாக விபரித்திருப்பார் எழுத்தாளர். நம் ஆதி மனிதர்களும் அவ்வாறுதானே இருந்திருப்பர்? கற்காலத்தில் பசியின் தூண்டுதலில் சக விலங்கை வேட்டையாடிச் சுவைத்துப் பழகி, பசி நீங்கிய பின்னரும் வேட்டை என்பதே நடைமுறைப் பழக்கமாகி, பின்னர் அது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கக் கூடும். அந்தப் பாரம்பரியத்தையே இந்த நூற்றாண்டிலும் கடல் சீல் பிராணிகளை, திமிங்கிலங்களை வேட்டையாடுவதன் மூலம் இன்றும் தொடர்கிறார்கள். அந்த வேட்டையை நியாயப்படுத்தும் சமூக நல ஆர்வலர்கள் இன்னும் இன்றும் இருப்பதுதான் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.


அதைப் போலவே அண்மைக்காலமாக புதிதாக ஆனால் மிகவும் இலாபத்தைத் தரத்தக்க ஒரு வியாபாரமானது, இந் நூற்றாண்டில் தோன்றியிருக்கிறது. கர்ப்பிணிக் குதிரைகளின் குருதியை உறிஞ்சி (Pregnant horse blood trade) எடுத்து, ஐரோப்பிய மருந்துத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வது மிக இலாபம் தரும் தொழிலாக மாறியிருப்பதால், குதிரை வளம் கொண்ட அநேக நாடுகள் மறைமுகமாக இதனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காகவென்றே பண்ணைகளும் இருக்கின்றன.

ஆசிய நாடுகளில்தான் விவசாயத்துக்கென விலங்குகளை வளர்ப்பதுவும், பயிற்றுவிப்பதுவும் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. ஏனைய நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இறைச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவுமே அவை வளர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வித விதமான செல்லப்பிராணிகள் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பல நிற வண்டுகள் முதற்கொண்டு கரடி வடிவிலான நாய்கள், கைக்கடக்கமான பூனைகள், சிறகு வெட்டப்பட்ட பேசும் கிளிகள், கழுகுகள் எனப் பலதும் அதில் அடங்கியிருக்கின்றன.

இங்கு இணைக்கப்பட்டுள்ள பனிக்கரடி வடிவத்தையொத்த நாய்க்குட்டி மூன்று மாத வயதுடையது. கார்த்திக் சொன்னதுபோல designer dog பிரிவில் இதனை உள்ளடக்கலாம். இதன் மயிர்கள் சுடப்பட்டு, தோலினூடாக வர்ணப் பூச்சுக்களையேற்றி பனிக்கரடியாக்கியிருக்கிறார்கள். வளர்ச்சிக்காக வேண்டி அதிக ஊட்டச்சத்துக்களும், ஊசி மருந்துகளும் ஊட்டப்படுகின்றன. ஒரு நாள் முழுவதுமாயினும், உடற்கழிவுகளை அகற்றாமலிருக்கப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பூனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் எலும்புகளை முடங்கச் செய்யவும் சிறிய போத்தல்களில் போட்டு அடைத்து வைப்பதும் நடக்கிறது. சிட்டுக் குருவிகள் முதற்கொண்டு பல வகைப் பறவைகளையும் சிறகுகளை வெட்டி, கூட்டை விட்டு வெளியே விற்பனைக்காகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான நாய்களையும், பூனைகளையும், ஏனைய விலங்குகளையும் ஒரு விளையாட்டுப் பொருள் போல வாங்கிச் செல்லும் அரேபியர்களும், ஏனையவர்களும், பின்னர் அவற்றைப் பராமரிக்க இயலாமல் தெருவில் எறிந்து விடுவதுவும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கிறது. திடீரென தெருவில் விடப்படும் சடை வளர்த்த நாய்களும், பூனைகளும் தமக்கான உணவைத் தேட இயலாமல், தெருவில் நடமாடத் தெரியாமல், ஏனைய வலிய விலங்குகளினதோ அல்லது வாகனங்களினதோ தாக்குதல்களுக்கு இலக்காகி வீதிகளில் மரித்துக் கிடக்கும். சுத்திகரிப்பாளர்கள் தெருவை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விடுவார்கள். அந்த நாளும், அந்தப் பிராணியின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து விடும்.

ஆனால், முடியாத ஒன்று இருக்கிறது. மேற்படி விலங்குகளை, பறவைகளை கொடூரமாகப் பயிற்றுவிக்கும் வேலைகளில், சொற்ப சம்பளங்களோடு ஈடுபடுத்தப்படுவது நமது இலங்கை, இந்திய, நேபாள, பங்களாதேஷ் நாட்டு இளைஞர்கள். வருடக்கணக்காக இதையே தொழிலாகச் செய்யும்போது அவர்களது சக உயிர்கள் மீதான கருணையும், மனிதாபிமானமும் மரித்துப் போகத்தான் செய்யும். அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும்போது அம் முரட்டுத்தனத்தை, அக் காருண்யமற்ற நடத்தைகளை அவர்கள் தம்மோடு தமது கிராமங்களுக்குக் காவி வருவது ஆபத்தானது. சாதாரணமாக விலங்குகள், பறவைகளைக் காணும்போது கூட அவர்கள் அதற்கு ஏதாவது தீங்கினைச் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதற்கோ,  அவ்வாறானவர்களின் மனப் பிறழ்வுகளை மாற்றியமைக்கும் சிகிச்சையளிப்பதற்கோ எந்த விலங்கு நல அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும்  முன்வருவதில்லை என்பது இன்னும் மிக மிக ஆபத்தானது.

- எம்.ரிஷான் ஷெரீப்

(இக் கடிதத்தை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்திலும் வாசிக்கலாம்.)