Wednesday, January 10, 2018

'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' - எம்.ரிஷான் ஷெரீப்



அன்பின் நண்பர்களுக்கு,

      இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

      என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

      எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட,  உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், பாதித்தவையுமே என்னால் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கத்தேய ஊடகங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், மனிதாபிமானமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படும் ஆபிரிக்கர்களையே நாம் பெரும்பாலும் கண்டிருக்கிறோம்.

      ஆனால் அவர்கள் உண்மையில் அவ்வாறானவர்கள் அல்ல. நேர்மையும், மனிதாபிமானமும் மிக்க அம் மக்களது நிஜ சொரூபத்தையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன. இந்த உண்மையானது, தமிழ் வாசகர்களிடத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இச் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

      'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' எனும் எனது இந்தப் புதிய தொகுப்பையும், இதற்கு முன்பு வெளிவந்திருக்கும் எனது ஏனைய புத்தகங்களையும் இன்று முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பக அரங்குகள் 475, 476 மற்றும் காலச்சுவடு, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்குகளில் விலைக் கழிவுகளோடு பெற்றுக் கொள்ளலாம்.
            இத் தொகுப்பில் சிறுகதைகளை எழுதியுள்ள பலரும் தற்போது மரணித்து விட்டார்கள். எனினும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் கட்டுப்பட்டிருக்கும் ஆபிரிக்கர்கள், காலகாலமாக வாழும் தமது கலை, இலக்கியப் படைப்புக்கள் மூலம் தமது தேசத்தை மீளப் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
10.01.2018