Thursday, June 4, 2015

பட்டினி போடப்பட்டதால் மரணமடைந்த இளைஞன்

21 நாட்கள் பட்டினி போடப்பட்டதால் இளைஞனொருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று எனது ஊரில் நிகழ்ந்தது.

16 வயது மாந்திரீகரின் பேச்சை நம்பி, இச் சாகசத்தை நிகழ்த்தியது, மரணமடைந்த இளைஞன் பிரசன்னா ப்ரியலாலின் பெற்றோர் என்பது இன்னுமொரு பரிதாபத்துக்குரிய விடயம்.

செய்த குற்றம் தமது மதத்தில் தடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாட்டிறைச்சியை பிரசன்னா தவறுதலாக உட்கொண்டமையாகும். இதற்குப் பரிகாரமாக, அந்தத் தீட்டு கழிய வேண்டுமெனில் உட்கொண்டவர் 28 நாட்கள் பட்டினி போடப்பட வேண்டுமென மாந்திரீகர் கூறியிருக்கிறார்.


ஏற்கெனவே இருதய நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்த இளைஞர், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் மருந்து, ஆகாரமேதுமின்றி தனியறையில் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போடப்பட்டிருக்கிறார். பிரசன்னாவுக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் இருந்தபோதும் பெற்றோரின் பிடிவாதத்துக்கு மத்தியில் அவரைக் காப்பாற்ற எவருமே முன்வரவில்லை.

இக் காலப்பகுதியில் ஊராட்களையோ, உறவினரையோ தமது வீட்டுக்கு அண்டவிடாமல் சுற்றி வர வேலிகளையடைத்து பெற்றோரும் மாந்திரீகரும் மறைத்திருக்கின்றனர். இளைஞனின் முனகல்கள் அயல்வீடுகளுக்குக் கேட்ட போதும், எவரும் காவல்துறை உதவியை நாடவில்லை.

காரணம் ஆழமான மூட நம்பிக்கை. போலிஸ் உதவியோடு இளைஞனைக் காப்பாற்றப் போனால் இறைவனின் கோபமும், தீட்டும் தம் மீது படிந்து விடுமோ என்ற அச்சம்.

பிரசன்னாவின் மரணத்தோடு இன்று விடிந்திருக்கிறது இப் பிரதேசத்தின்
மூட நம்பிக்கைக்கான விடிவு காலம். இளைஞனின் வீட்டைச் சூழ்ந்த ஊராட்களும், உறவினரும் அவர்களது கரங்களாலேயே பூஜைப் பொருட்களையும், வேலிகளையும் முற்றாக அழித்து நொருக்கியிருக்கின்றனர்.

நவீன நூற்றாண்டு என்கிறோம். எல்லாமும் நாகரீகமடைந்து விட்டன என்கிறோம். ஆனால் இன்னும் கூட கிராமங்களில் போல, நகரங்களிலும் மூட நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவராவது திருந்த இவ்வாறான அசம்பாவிதங்கள்தான் வழிகாட்டும் போலிருக்கிறது.

- எம்.ரிஷான் ஷெரீப்
04.06.2015

No comments: