Thursday, June 11, 2015

Breaking News Live - சௌம்யா, வித்யா மரணம்

இந்த வீடியோக் காட்சி ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ‘Breaking News Live’ எனும் மலையாளத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. ஆனால் காட்சியில் இடம்பெறும் சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்த ஒன்று.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, 23 வயதான இளம்பெண் சௌம்யா, வேலை முடிந்து ரயிலில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, 33 வயதான கோவிந்தசாமி என்பவரால் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பின்னர் படுகாயத்துக்குள்ளான நிலையிலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் மரணமடைந்தார். கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு உச்சபட்ச தண்டனையாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


உண்மையான நிகழ்வுகளைத் திரைப்படமாக்கி, மக்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் கேரள மாநிலத்தில் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
தமிழ்த் திரைப்படங்களில் இன்னும் நாம் காதலையும், பேய் பிசாசுகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கதாநாயகர்களின் உருவப்படங்களுக்கு பாலூற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்?!

தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் வரும், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் / வர்ணிக்கும் காட்சிகளைப் பார்த்துப் பார்த்தே நமது சமூகம் வளர்ந்து வருகிறது. அவ்வாறான காட்சிகளைப் பார்த்தே வன்முறைகளைச் செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சமூகத்தில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்களில் வித்யா முதன்மையானவரல்ல. ஆனால் இறுதியானவராக இருக்க வேண்டும் என்பதே எமது அவா.

- எம்.ரிஷான் ஷெரீப்
11.06.2015

No comments: